Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
உலகின் பார்வைக்கு இந்தியா ஒரே நாடு, ஆனால் உண்மையில் இந்தியா பல நாடுகளின் கூட்டமைப்பு என்றே சொல்ல வேண்டும். எவ்வாறு ஐரோப்பா ஒரே மொழி ஒரே மக்கள் ஒரே பண்பாடு இல்லையோ, இந்தியாவும் ஒரே மொழி ஒரே மக்கள் ஒரே பண்பாடு கொண்டது கிடையாது. 

ஆனால் சிந்து முதல் வங்கம் வரை, இமயம் முதல் குமரி வரை அடங்கிய இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவுகள் அடங்கிய இந்த தெற்காசிய துணைக் கண்டத்து மக்கள் அனைவரும் பொதுவில் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவர்கள் என்பதில் ஐயமில்லை. நமக்கிருக்கும் பொதுப் பெயர் மாநிற மக்கள் ( பிரவுன் ). 

ஆம் ! இந்தியாவுக்குள் வாழ்கின்ற நாம் நம்மை ஜாதி, மதம், மொழி, இனம், நிறம் என பாகுபாடு செய்து கொண்டு அதில் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டிருந்தாலும் நாம் அயலகத்தை அடைகின்ற போதும் நம்மை பிறர் ஒரே குடைக்குள் தான் வைத்துப் பார்க்கின்றனர். இந்தியாவுக்குள் நாம் எவ்வளவு வெளுப்பானவராக இருந்தாலும், கறுப்பானவராக இருந்தாலும் மேற்கு நாடுகளில் நமக்கு இருக்கும் ஒரே பெயர் மாநிற மக்கள் மட்டுமே. 

ஆனால், இதை எல்லாம் மறந்துவிட்டு இந்தியாவுக்குள் வாழ்கின்ற குறிப்பாக இந்தியாவின் வடக்கில் வாழ்வோர் தம்மை வெளுப்பானவர்கள் என்பதாக கருதிக் கொண்டு தென்னிந்தியர்கள் மீதான இன வன்மத்தை ஆண்டாண்டு காலமாக உமிழ்ந்து வருகின்றனர். அந்த வகையிலேயே அண்மையில் பாஜக எம்பி தருண் விஜய் வெளியிட்ட கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வடக்கில் ஆப்பிரிக்க மாணவர்கள் மீது நிகழ்த்தப்படும் இனவெறி தாக்குதல் குறித்த பேச்சில், இந்தியர்கள் ஒன்றும் இனவெறியர் இல்லை எனவும், கறுப்பினத்தோரை வெறுப்போர் இல்லை எனவும் கூறியதோடு நிற்காமல், தாம் இனவெறியர் என்றால் கறுப்பான தென்னிந்தியர்களோடு எப்படி இணக்கமாக வாழ் முடிகின்றது என்றார். இப்படி கூறியதற்கு நாம் உண்மையில் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனெனில் வடக்கில் வாழ்வோரது பொதுப்புத்தியை தான் அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆம் ! வடக்கில் வாழ்வோர் தாம் எவ்வளவு கறுப்பாக இருந்தால் கூட தம்மை விட தென்னிந்தியர்கள் என்னவோ கறுப்பானவர்கள் என்பது போல, தம்மை என்னவோ ஐரோப்பிய மக்களின்  நிறம் கொண்டோர் என கருதிக் கொண்டிருக்கின்றனர். நாமும் பல காலம் தென்னிந்தியர்கள் தான் கறுமையானவர்கள், வடக்கில் உள்ளோர் எல்லாரும் வெளுப்பானர்வர்கள் என்ற எண்ணத்தில் தான் வாழ்ந்திருந்தோம்.

ஆனால், இந்தியா முழுவதும் பயணம் செய்து பல வித மக்களை சந்தித்த அனுபவம் உடைய எவருக்குமே மிக எளிதில் ஒரு விசயத்தை தெரிந்து வைத்திருக்கும் வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களில் எல்லா பகுதிகளிலும் எல்லா நிற மக்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். நான் பார்த்த வரையில் வங்காளம், பிகார், ஜார்க்காண்டு, ஒரிசா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் வாழ்கின்ற பெரும்பான்மையானோர் கருமையானவர்கள் தான். 

அது மட்டுமின்றி மராத்தியம், குசராத்து மாநிலத்தில் கூட பெரும்பான்மை மக்கள் தென்னிந்தியர்களை ஒத்த நிறம் உருவம் கொண்டோராகவே காணப்படுகின்றனர். சரி எஞ்சிய பகுதிகளான உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசத்தில் வாழ்வோர் அனைவரும் வெள்ளையானவர்களோ என கருதலாம் என்றால் அதுவும் இல்லை. இந்த மாநிலங்களில் பாதிக்கு பாதியளவு மக்கள் கறுப்பானவர்களே. ஆக, கஷ்மீர், மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தான் பெரும்பங்கானோர் வெள்ளை நிறமுடையோராக இருக்கின்றனர். 

அப்படி இருக்க ஏன் இந்த தருண் விஜய் உட்பட பல வடக்கத்திய மக்கள் தென்னிந்தியர்கள் மட்டுமே கறுப்பானவர்கள் என பேசுகின்றனர். அப்படி தெற்கில் உள்ளோர் எல்லோரும் கறுப்பானவர்களா என்ன? உண்மையில் ஏனைய இந்தியாவை போல தெற்கிலும் அனைத்து ஜாதி, மதம், மொழி, இன மக்களிலும் வெளுத்த நிறமுடையோர் வாழ்கின்றனர். 

அத்தோடு தெற்கில் பிராமணர் மட்டுமே வெளுப்பானவர் மற்ற ஜாதியினர் கறுப்பானவர் என்ற எண்ணமும் இருக்கின்றது. ஆனால், தெற்கில் வாழ்கின்ற பிராமணர்களிலேயே கூட கறுப்பானவர்கள் அதிகம் இருக்கின்றனர். பிராமணரல்லாத திராவிட ஜாதியினர் மற்றும் தலித்களில் கூட வெளுப்பானவர்கள் அதிகம் இருக்கின்றனர். குறிப்பாக மலை வாழ் மக்களான தோடர், கோத்தர், படகர், குடவர் தொடங்கி பல இன மக்களில் வெளுமையான நிறமுடையோர் அதிகமாகவே காணப்படுகின்றனர். இந்தியா முழுவதும் வாழ்கின்ற ஒரு சில பழங்குடி மக்களைத் தவிர ஏனைய பொது சமூகம் முழுவதிலும் கறுப்பு, வெளுப்பு, மாநிறம் என பல வண்ணத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் கூட பலரும் ஒருவர் கறுப்பாகவும், மற்றொருவர் வெளுப்பாகவும், பலர் மாநிறமாகவும் இருப்பதைக் காணலாம். இது தான் எதார்த்தம். அப்படியிருக்க இந்த வடக்கத்தியர்கள் ஏனோ தென்னிந்தியர்கள் மட்டும் கறுப்பு என்ற கருத்து மாக்ஸ் முல்லர் போன்ற மேலைநாட்டு ஆரிய சித்தாந்தவாதிகளால் வளர்க்கப்பட்ட இந்துத்வா கோஷ்டிகளின் வாதம் சிரிப்பை வரவழைக்கின்றது. 

வடக்கில் பஞ்சாப், இமாச்சலம், தில்லியில் வெளுத்த நிறமுடையோர் சற்றே அதிகம் என்றால் தெற்கில் மங்களூர், கொங்கண், மலபார், குடகு, நீலகிரியில் வெளுத்த நிறமுடையோர் அதிகம். தெற்கில் கறுத்த நிறமுடையோர் ஏனைய பகுதியில் அதிகம் எனில் வடக்கில் பிகார், வங்காளம், ஒரிசா போன்ற பகுதியில் கறுத்த நிறமுடையோர் அதிகம். ஆக மொத்தம், வடக்கிலும் சரி தெற்கிலும் சரி அனைத்து வண்ண மக்களும் நிகராகவே இருக்கின்றனர். ஆதி இந்தியர்களான திராவிடர்கள் கருத்த நிறமுடையோர் தான் என்றாலும், காலப் போக்கில் மத்திய கிழக்கிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் குடியேறிய பல மக்கள் திராவிடர்களோடு கலந்து ஒட்டு மொத்த இந்திய மக்களும் கலப்பினமாகவே இருக்கின்றனர். வட இந்தியாவில் வாழ்கின்ற இடைநிலை சாதி மக்கள் அனைவருமே மாநிறமாகவும், கருநிறமாகவும் தான் காணப்படுகின்றனர். இவர்கள் யாவரும் ஒரு காலத்தில் வடக்கில் வாழ்ந்திருந்த திராவிட மக்களின் வழிதோன்றல்கள் என்பதில் ஐயமில்லை. தெற்கிலோ வடக்கிலோ கிழக்கிலோ மேற்கிலோ இந்திய கண்டத்தின் அனைத்து பகுதிகளில் வாழ்கின்ற கருப்பு வண்ண மக்கள் தான் உண்மையான திராவிட இன மக்கள் ஆவார்கள்.

காலப்போக்கில் வடக்கில் உள்ளோர் தமது பாரம்பரிய மொழி, பண்பாட்டை கைவிட்டு வந்தேறிய பாரசீகர்களின் ( பிரமாணர் ) மொழி, பண்பாட்டை பின்பற்றி தமது திராவிட மொழி பண்பாட்டை நாளடைவில் கைவிட்டு விட்டனர். தெற்கில் உள்ளோர் தமது பூர்விக மொழி, பண்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். இது தான் நமக்குள்ள வேறுபாடு. இன்று தென்னிந்தியர்கள் தமக்கே உரிய தனித்துவமான பண்பாட்டையும், மொழியையும், வாழ்வியல் முறையையும் கைக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வடக்கிற்கும் தெற்கிற்குமான வேறுபாடு நிற வேறுபாடு கிடையாது மாறாக பண்பாட்டு வேறுபாடு என்பதை வடக்கத்திய வெள்ளைக்காரர்கள் உணரட்டும். இதை வெறும் வள்ளுவரின் சிலையை உறரித்துவாரில் வைத்து விட்டு தென்னிந்தியர்கள் மீதான இனவெறியை காட்டி மூக்குடைந்து போன தருண் விஜய் போன்றோருக்கு எடுத்துக் கூறினால் சால நன்று. 
வாசிக்க »


கடந்த வருடம் கனடாவின் குபெக்கு மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற வால்மோரின் வேல்முருகன் ஆலயத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். கனடாவின் பல பாகங்களில் வாழ்கின்ற தமிழர்களும், அமெரிக்காவிலிருந்தும் கூட அங்கே வந்திருந்தனர். கனடாவின் குபெக்கு மாநிலத்தில் மலைகள் நிரம்பிய தமிழர்களோ, வேறு இந்தியர்களோ வசிக்காத ஒரு சின்னஞ்சிறிய ஊரான வால்மோரினில் தான் இந்தக் கோவில் அமைந்திருக்கின்றது. இந்தக் கோவிலையும், அதற்குப் பக்கத்திலிருக்கும் தியான மையத்தையும் பெரும்பாலும் பிரஞ்சு மொழி பேசும் வெள்ளையர்களே நிர்மாணித்து வருகின்றனர். ஒரு சில தமிழ் குருக்கள்மார்கள் அங்கே தங்கியிருந்து கோவில் பூசைகளை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜூன்-ஜூலை மாதங்களில் அங்கே திருவிழா நடப்பது வழக்கம். அப்போது மட்டும் ஆயிரக் கணக்கான தமிழர்கள் டொராண்டோ, மொன்றியல், நியுயார்க் போன்ற பகுதிகளிலிருந்து அங்கே போய் சாமி கும்பிட்டு வருவர். அப்படியாக நானும் அங்கே செல்ல நேரிட்டது.

டொராண்டோவிலிருந்து பயணித்த நாங்கள் ஒண்டாரியோ மாநில எல்லையைக் கடந்து குபெக்கு மாநில எல்லைக்குள் நுழைந்த பின்னர் தான் புரிந்தது, என்ன தான் கனடா ஒரே நாடு என்றாலும், ஒரே நாட்டுக்குள் வேறொரு நாடும் இருக்கின்றது அது தான் முற்றிலும் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற குபெக்கு என்பது. ஏனெனில் குபெக்கு மாநிலத்தின் அனைத்து நெடுஞ்சாலை பலகைகளும் முற்றாக பிரஞ்சு மொழியிலேயே இருந்தது. துளிக்கும் எங்கும் ஆங்கிலம் இல்லை. இத்தனைக்கும் கனடாவின் இரு ஆட்சி மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. அது மட்டுமின்றி கனடாவின் பெரும்பான்மை மக்கள் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்கள்.

கனடாவின் பெரும்பான்மை மக்கள் ஆங்கிலம் பேசினாலும், கனடாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆங்கிலம் இருந்தாலும் கூட, பிரெஞ்சு தெரியாத வாகன ஓட்டுநர்கள் பலர் நெடுஞ்சாலைகளை பயன்படுத்துகின்ற போதிலும் கனடாவின் குபெக்கு மாநிலத்தின் நெடுஞ்சாலைகளில் பிரஞ்சு பலகைகள் மட்டுமே காணப்படுகின்றன. தமிழர்களாகிய நாம் குபெக்கின் பிரஞ்சு மக்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் இருக்கின்றன.

தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் எழுதுவதாகச் செய்திகள் வந்தன. இதற்குத் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பும் கிளம்பியது. எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக (இ)டிவிட்டர் தளத்தில் #stophindichauvinism என்ற ஆச்சடுக்கு மூலமாகப் பலரும் தம் விசனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த (இ)டிவிட்டர் போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமின்றி கன்னடர்களும் அதிகளவில் பங்கெடுத்து கருநாடு மாநிலத்தில் இந்தி மொழி திணிப்பு எவ்வாறு எல்லாம் நடந்தேறி வருகின்றது என்கிற தமது கோபத்தைக் கொட்டித் தீர்த்தனர். கன்னடர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள், ஒடியர்கள், மராட்டியர், பிக்காரிகள், வங்காளிகள் எனப் பலரும் கூடப் பங்கெடுத்திருந்தனர்.

நரேந்திர மோதி ஆட்சியேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் இந்தி திணிப்பு அரேங்கேறி வருகின்றதை நாம் அறிவோம். கடந்த 2015-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று இதே போன்றொரு (இ)டிவிட்டர் போராட்டம் நடத்தப்பட்டதோடு இந்தியா முழுவதுமிருந்து வந்த மொழிப் போராளிகள் ஒரு மாநாட்டையும் சென்னையில் நடத்தியிருந்தனர். ஏற்கனவே முகநூல் பக்கத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான ஒரு அமைப்பு செயல்பட்டு வருவதோடு, இந்தியா முழுவதும் உள்ள இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாதோர் தீவிரமாக கருத்துப் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.

சுமார் ஏழாண்டு வெளிநாட்டில் வசித்து விட்டுக் கடந்த 2014-யில் தமிழகம் திரும்பிய போது, நான் ஒரு விடயத்தை நன்கு கவனித்தேன். இந்த ஏழாண்டுகளில் பொருளாதார நிலையில் நாம் வளர்ந்திருந்தாலும் கூட, நம்மை அறியாமலேயே இந்தி திணிப்பு அரங்கேறி வருகின்றது. ஆம் ! இந்த ஏழாண்டு இடைவெளியில் எல்லா இடங்களிலும் சந்தடி சாக்கில் இந்தி நுழைந்திருக்கின்றது. முன்பு எல்லாம் வெறும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்த நிறுவனங்களில் மட்டுமே இந்தி காணப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தனியார் நிறுவனங்கள் கூட இந்தியைத் திணித்து வருகின்றன. வங்கிகளின் ஏட்டியம்கள் (ATM), செய்தித் தாள்கள், விளம்பரங்கள், பேரங்காடிகளின் அறிவிப்பு பலகைகள், அவ்வளவு ஏன் திரையரங்குகளில் உள்ள கழிப்பறை வரையில் இந்தி நுழைத்திருக்கின்றது. இவற்றைத் தமிழகத்தில் வாழும் எத்தனைப் பேர் கவனிக்கின்றார்கள் எனத் தெரியவில்லை.

சென்னையிலிருந்து வெளியாகும் தமிழ் செய்தித்தாளில் இந்தியில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. விருகம்பாக்கத்திலிருந்த திரையரங்கின் கழிப்பறையில் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே இருந்தது. வளசரவாக்கத்தில் ஒரு மளிகைக் கடை வாசலில் இருந்த சோப்பு விளம்பரம் ஆங்கில எழுத்திலான இந்தியில் இருந்தது. இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.

மத்திய அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாக இந்தி மொழியைத் திணித்து வருகின்றது. மத்திய அரசில் பணியாற்றுவோர் இந்தியில் கையெழுத்திடவும், இந்தி மொழியில் பேசவும், இந்தி மொழியில் சமூக ஊட்டங்களை பயன்படுத்தவும் வற்புறுத்தி வருகின்றது. மத்திய அரசின் கல்வி வாரிய பள்ளிகளில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் படிக்க வற்புறுத்தப்படுகின்றனர். அவ்வளவு ஏன் பல பள்ளிகள் சமஸ்கிருத வாரங்கள் கூட கொண்டாடின.

இந்தி மொழியை எப்படியாவது முழு மூச்சுடன் திணித்துவிட மத்திய அரசு முயன்று வருகின்றது. ஐநா சபையில் இந்தியை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கவும், இந்தி மொழியைப் பரப்ப கோடிக் கணக்கான நம் வரிப் பணத்தைக் கொட்டிக் கொடுக்கவும் அதனால் முடிகின்றது. ஆனால், மற்ற இந்திய மொழிகளை நசுக்கவும், அழிக்கவும் அது நினைக்கின்றது.

இந்தியை மூன்றாம் மொழிப் பாடமாக எடுத்துக் கொண்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றது. பஞ்சாபில், குஜராத்தில், பீகாரில், மராட்டியத்தில் இளைய தலைமுறையினர் இந்தி மட்டுமே பேசும் சூழல் ஏற்பட்டுள்ளது. வங்காளத்தில், ஒடிசாவில் இந்தி சொற்கள் அதிகம் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் தெலுங்கு மொழி இல்லாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. கருநாடகத்தில் இந்தி மொழியை வளர்க்கவும், கன்னட மொழியைப் புறந்தள்ளவும் சகல வசதிகளுடன் வேலைகள் அரேங்கேறி வருகின்றன.

இந்தி மொழியின் அசுரப் பசிக்கு தடையாக இருப்பது நம் தமிழகம் மட்டும் தான். அதனால் தான் என்னவோ, தமிழகத்தின் மொழி மற்றும் கல்வி ஆகியவற்றை நிர்மூலமாக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அண்மையில் வெளியான ஓர் ஆய்வில் இந்தியாவில் தலைசிறந்த 100 கல்லூரிகளில் 37 தமிழகத்தில் மட்டுமே உள்ளது. தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் 51 சிறந்த கல்லூரிகள் இடம்பெறுகின்றன. கூடவே ஆந்திர பிரதேசத்தின் 11-யைம் சேர்த்தால் இந்தியாவின் மூன்றில் இரண்டு சிறந்த கல்வி நிலையங்கள் முன்னாள் மதராஸ் மாநிலத்தில் அமைந்திருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்,

இன்று தமிழ் மாணவர்கள் அதிகளவில் தேசிய கல்வி நிலையங்களில் இடம் பிடித்து வருகின்றனர். மேலும் பல தமிழர்கள் அமெரிக்கா உட்படப் பல நாடுகளில் தலை சிறந்த பணிகளில் இருக்கின்றனர். உதாரணத்துக்கு கூகிளின் சுந்தர் பிச்சை தொடங்கி பலரும் உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டியிருக்கின்றனர். செவ்வாய் கோளிற்கு விண்கலம் ஏவிய ஆராய்ச்சிக் குழுவில் இருந்த சுப்பையா அருணன் உட்படப் பல விஞ்ஞானிகள் தமிழர்களே. வெற்றிகரமாக அணு ஆயுத சோதனை நடத்திக் காட்டிய நம் அப்துல் கலாம் கூட தமிழரே. இவர்கள் என்ன இந்தி படித்தா சாதித்துக் காட்டினார்கள். இவர்கள் எல்லாம் பள்ளிப் படிப்பையே தமிழில் மட்டுமே படித்து முன்னேறியவர்கள்.

இன்று இந்தியை நம் தொண்டையில் திணிப்பதன் மூலம் நம்மையும் மற்றொரு பீகாராக, ஜார்க்கண்டாக மாற்றவே முயல்கின்றார்கள். தமது தாய்மொழியான போஜ்பூரியையும், சாந்தாளியையும் தொலைத்துவிட்டு இந்தி திணிக்கப்பட்டதால் வளர்ச்சியடையாமல் அவர்கள் யாவரும் தென்னிந்தியாவிற்கே பிழைக்க வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

மாறாக 1937-யில் முதன் முறையாக இந்தி திணிக்கப்பட்ட போது பெரியார் உட்பட பல தலைவர்கள் அதை எதிர்த்தனர். மீண்டும் 1963-1967 காலப் பகுதியில் ஆங்கிலத்தை நீக்கிவிட நடந்த முயற்சியை முறியடித்து, இந்தி திணிப்பை விரட்டியடித்து இருமொழி கொள்கையாள் தமிழகம் வளர்ச்சி கண்டது. அன்று அறிஞர் அண்ணாவின் நேர் கொண்ட சிந்தனையாலும், வழிகாட்டலாலும் ஆங்கிலம் இந்தியாவில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த ஆங்கிலமே இந்தியாவை இன்று உலக அரங்கில் உயர்த்தி இருக்கின்றது. அன்றே ஆங்கிலம் நீக்கப்பட்டிருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் உபி, பிகார் போல நாறியிருக்கும்.

அன்று தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை விலக்கியதால், தமிழர்களுக்குத் தேவையற்ற சுமை நீங்கியதோடு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் நகர்ந்தது. தமிழ் மொழியின் இருப்பும் நிலைநாட்டப்பட்டது. மாறாக மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டதால் இன்று கருநாடகம் இந்தி பேசுவோரது ஆதிக்கத்தில் தள்ளாடுகின்றது. இந்தி மொழி பேசுவோரே பெங்களூரின் பெரும்பான்மை வேலைகளை பறித்துக் கொண்டுள்ளனர். அத்தோடு நிற்காமல் கன்னட மக்கள் மீதும் இந்தி மொழியைத் திணித்து வருகின்றனர். பெங்களூரில் மெட்ரோ ஓடியபோது இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்புகள் வந்த போது கன்னட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கு எல்லாம் காரணம் கருநாடத்திற்கு என்றொரு மாநில கட்சி இல்லாமல் போனதும், மும்மொழி கொள்கைகளை ஏற்றுக் கொண்டதுமே ஆகும்.

அதே சமயம் இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியன் எனவும், இந்தி தெரிந்தால் வேலைக் கிடைக்கும் எனப் பழைய பஞ்சாங்கம் பாடுவோரும் நம் தமிழகத்தில் இருக்கத் தான் செய்கின்றனர். இந்தி இந்தியாவில் இருக்கின்ற ஏனைய மொழிகளைப் போன்று ஒரு மொழி அவ்வளவே. உதாரணத்துக்கு ஒரு தாயிற்கு 18 பிள்ளைகள் இருக்கின்றன, ஆனால் அந்தத் தாய் ஒரே ஒரு பிள்ளைக்கு மட்டும் நல்ல சட்டை, சாப்பாடு என கவனித்துக் கொண்டு ஏனைய பிள்ளைகளை பட்டினி போட்டும், கிழிந்த ஆடைகளோடு அலைய விட்டால், அந்தத் தாய் ஒரு நல்ல தாயாக கருதப்பட மாட்டாள். இன்று இந்தியாவின் நிலையும் இது தான். இந்தியாவின் மற்ற மொழிகளை ஒதுக்கிவிட்டு இந்திக்கு மட்டும் சகல சௌபாக்கியங்களையும் தந்து அகமகிழ்கின்றது மத்திய அரசாங்கம். ஏனிந்த மாற்றாந்தாய் மனப்பான்மையோ?

இந்தி என்றொரு மொழியைத் தமிழர்களாகிய நாம் வெறுப்பதில்லை. இந்தி மொழி பேசப்படுகின்ற மாநிலத்திற்குச் செல்கின்ற தமிழர்கள் அங்கேயே நிரந்தரமாக வசிக்க நேரிடும் போது குறுகிய காலத்தில் இந்தியைக் கற்று மிக அழகாக இந்தி பேசுவதை நான் பார்த்திருக்கின்றேன். அதே சமயம் ஆந்திராவிற்கோ, கருநாடகத்திற்கோ, வங்காளத்திற்கோ குடிபுகும் தமிழர்கள் முறையே தெலுங்கு, கன்னடம், வங்காள மொழிகளைக் கற்று பேசி வருகின்றனர். ஆனால், எங்கோ இருக்கின்ற இந்திக் காரன் இங்கே சாமி கும்பிட வருவதற்கும், நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவற்காகவும், இங்கே நம் தமிழகத்தில் வேலைக்கு வருவதற்காகவும், ஏழரைக் கோடி தமிழர்களும் இந்தி படிக்க வேண்டும் எனச் சொல்வது மடத்தனமாகப் படவில்லை.

உலகமே சுருங்கி உலகமய பொருளாதாரக் கால கட்டத்தில் நாம் கொரியாக் காரனோடும், சீனாக் காரனோடும், ஜெர்மன் காரனோடும் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றோம், அவர்களும் நம் தமிழகத்திற்கு வந்து போகின்றனர். அதற்காக இந்தியர்கள் அனைவரையும் கொரியின் மொழியையும், சீன மொழியையும், ஜெர்மன் மொழியையும் கற்றுக் கொள்ளுங்கள் எனச் சொன்னால் எவ்வளவு நகைச்சுவையாக இருக்குமோ அவ்வளவு நகைச்சுவையாக இருக்கின்றது தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இந்தி படியுங்கள் என்ற கோஷமும்.

கடந்த 50 ஆண்டுகளாகத் தென்னிந்திய மாநிலங்கள் இந்தி படித்து வருகின்றன. ஆனால் எதாவது ஒரு வட இந்திய மாநிலத்தில் எதாவது ஒரு தென்னிந்திய மொழியை அவர்கள் படிக்கின்றனரா என்ன? இல்லவே இல்லை. இதென்ன நியாயம் சொல்லுங்கள். சொல்லப் போனால் முதலில் உபி, பிகார், ராஜஸ்தான் போன்ற இந்தி மொழி மாநிலங்களில் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளைக் கட்டாயமாக்குங்கள். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான இந்தி மொழி பேசுவோர் தென்னிந்தியாவிற்குத் தொழில் செய்யவும், வேலை தேடியும் வருகின்றனர். இனி வருங்காலங்களில் மேலும் பல லட்சம் பேர் இங்கே குடியேறும் சூழல் தான் உள்ளது. அவர்கள் இந்த மொழிகளைக் கற்பது பயன் தரலாம். அப்போது நிச்சயம் வட இந்திய ஓட்டுநர்களுக்கு தமிழகத்திலோ, கருநாடகத்திலோ இந்தியில் பெயர் பலகைகள் தேவைப்படாது தானே.

- மின் வாசகம் 
வாசிக்க »


தமிழ் நாட்டிற்கு இருபத்தோராம் நூற்றாண்டு பல சவால்களை சந்திக்கும் நூற்றாண்டாக மாறியுள்ளது என்பது உண்மை தான். நமது மூதாதையர் நமக்கு விட்டுச் சென்ற இயற்க்கை வளங்களை ஒரே தலைமுறையில் அழித்துவிட்டு நிற்கின்றோம். ஒரு காலத்தில் பசுமை பூத்துக் குலுங்கிய நிலங்கள் எல்லாம் இன்று வறண்டு காணப்படுகின்றன, அவற்றில் கட்டடங்களை எழுப்பி சுற்றுச் சூழலைக் கெடுத்து மாசாக்கியதோடு, அதன் விளைவால் உடல்நலத்தைக் கெடுத்து அவதிப்படுகின்றோம். இயற்கையாக இலவசமாக கிடைத்த நீரும், காற்றும் இன்று விலைக்கு வாங்கும் நிலைக்கு வந்திருக்கின்றோம்மி.

தமிழக சமூகம் என்றுமில்லாத அளவுக்கு மாற்றங்களை கண்டு வருகின்றது, ஆனால் அதன் ஆத்மா அழிந்துவிடவில்லை. தமிழகத்தின் ஆத்மா என்றுமே தன்னிகரற்றவை, அது ஆண்டாண்டு காலம் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் அசராது நிமிர்ந்து நின்று கொண்டிருக்கும் ஓர் உன்னத உணர்வு. அது என்ன தமிழக ஆத்மா எனக் கேட்கலாம் ? தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு அதன் ஆத்மா தெரிவதில்லை, புரிவதில்லை, ஆனால் அது நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமாய் புதைந்திருக்கின்றது. அதே சமயம் தமிழகத்தை விட்டு வெளியேறி புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொருவருக்கும் அதன் ஆத்மா எப்படி பட்டது என்பதை நிச்சயமாக உணர்வார்கள். தாயை விட்டு விலகியோருக்குத் தான் அதனருமை என்றுமே விளங்கும்.

இல்லை என்றால் உலகின் உன்னதமான மனிதர்களை இந்த நாடு மீண்டும் தன் வசம் ஈர்த்திருக்காது எனலாம். தமிழகத்தை துறந்து விட்டு போன தமிழர்களை மட்டுமல்ல, அந்நியர்களையும் என்றுமே கவர்ந்துள்ளது என்பதே வரலாறு காட்டும் உண்மை எனலாம். விரும்புவதைக் கொடுத்துள்ளது. அலக்சாண்டர் இந்த மண்ணை ஆள ஆசைப்பட்டார். ரோமானிய, கிரேக்கர்கள் நமது நாட்டின் வாசனைத்திரவியங்களுக்காக ஓடோடி வந்தனர், குடியேறினர். சீனர்களும், சாவகர்களும் வியாபாரம் செய்தததோடு நமது மதங்களையும், தத்துவங்களையும், எழுத்துக்களையும், இதிகாசங்களையும் ஏற்றுச் சென்றனர். அரேபியர்கள், துருக்கியர், முகாலயர்கள், ஐரோப்பியர் என நம் மண்ணின் வளங்களுக்காய் படை எடுத்தனர். ஏன் யாராக இருந்தாலும் இந்த நாடு அவர்கள் விரும்பும் எதனையோ தந்துள்ளது. இன்றும் தந்து கொண்டே இருக்கின்றது, இல்லை என்றால் தமிழகத்தில் வர்த்தகம் செய்ய நவ நவீன காலனித்துவவாதிகள் உலக மயம் என்ற முகமூடிக் கொண்டு நமை நோக்கி படை எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்களே. தமிழகத்தை நோக்கி பலரும் வந்து கொண்டே இருக்கின்றார்கள். அயலகத்தில் இருந்து இங்கே அடைக்கலம் வேண்டியும், படை எடுத்தும், வியாபாரத்துக்காகவும், இன்னும் என்னனென்னவோ காரணங்களுக்காக வந்தவர்களை எல்லாம் இந்த நாட்டின் ஓரங்கமாய் ஏற்றுக் கொண்ட நாடு இது. ஆனால் அதன் ஆத்மாவை உணராமல் நாம் மட்டும் மவுனிகளாக ஐம்புலன்களை தன்வயத்துக்குள் முடக்கிக் கொண்ட ஆமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

பக்கத்து வீட்டில் ஒருவன் பசித்திருக்கக் கூடாது என்பதற்காக கதவைத் தட்டி கஞ்சியைக் கூட பகிர்ந்துண்ணும் மான்பும், தன் மனைவியைத் தவிர மற்றவளை ஏறெடுத்து காணக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும், உழைக்க வக்கில்லாதவர்களைக் கூட அரவணைத்துக் கொள்ள சத்திர சாலைகளையும், வீடற்றோர் படுத்துறங்க கோவில் திண்ணைகளையும் கட்டி எழுப்பிய நாடு தான் இது. மூத்தோருக்கு மரியாதை செய்வதையும், யார் பெற்ற பிள்ளை என்றாலும் சோறூட்டி பாலூட்டி விடும் தாய்மார்களின் அன்பையும் கொண்ட நாடு இது. இன்று கூட பண்டிகை தினங்களில் சாதி, மதம் கடந்து பலகாரங்களை பகிர்ந்துண்பதையும், பக்கத்து வீட்டு வரவேற்பு அறையில் சொந்த வீடு போல எண்ணி குழுமி தொலைக்காட்சி பார்த்து கிடப்பதையும் காண முடியும். வெளிநாடுகளில் இவை எல்லாம் கனவிலும் காணக் கிடைக்காதவை. 

இத்தனை பெருமைகளை கொண்டிருந்தாலும் இந்த நாட்டின் கட்டுமானம் ஏற்றதாழ்வுகளையும், சாதியங்களையும், பாலியல் வன்முறைகளையும், இயற்கைச் சீரழிவுகளையும், உடல நலக் கேடுகளையும், மூட நம்பிக்கைகளையும் தன்னக்கத்தே கொண்டிருப்பது தான் இந்த நாட்டின் முக்கியமான சாபக்கேடாகவும் இருக்கின்றது. எதனையும் விலக்கக் கூடாது ஏற்க வேண்டும் என்ற தமிழக பண்பின் விளைவோ, அல்லது மூத்தோர் சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை ஆழப் பற்றிக் கொண்ட நமது சிந்தனை ஆக்கமோ நாம் இன்று பழமைக்கும் புதுமைக்கும் இடைநிலையில் நின்று கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதன் கட்டமைப்புக்கள் குழப்பங்களையும், குழப்பங்கள் மத்தியில் எழுந்த தெளிவுகளையும் கொண்டிருக்கின்றது. இந்த நாடு தெளிவுகளையும், தெளிவுகளை தெளிவுடன் தெரியத் தவறியதால் விஞ்சி நிற்கும் குழப்பங்களையும் கொண்டிருக்கின்றது. வளர்ச்சிக்கும் அழிவுக்கும் வித்தியாசங்களை காண இயலாது குழம்பி நிற்கின்றோம். இந்த அதிர்வு நிலை நமது தமிழகத்தின் தனித்தன்மையையும், அது கட்டிக் காத்து வந்த வாழ்க்கையையும், நமது இயற்கை வளங்களையும், எண்ணங்களையும், மொழிகளையும் இழந்து விடும் பேராபத்தான நிலையின் விளிம்பில் நிற்கின்றோம்.;

இதை வாசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடம் நான் வீசும் கேள்வி என்னவென்றால்? இக் கணத்தில் தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால் எது என தங்களால் கூற இயலுமா? ஒன்றிரண்டு என்றால் கூறலாம் ஆனால் ஒட்டு மொத்தமாய் அடித்தளமே ஆடிக் கொண்டிருக்கும் நிலையில் எதைக் கூறுவது எதை விடுவது என்பதே நமக்கு தெரியாமல் இருக்கின்றது. 

எனக்குத் தெரிந்து சில விடயங்களை பட்டியல் இடலாம் என நினைக்கின்றேன். இந்த விடயங்கள் அனைத்தும் தனித் தனியானவை போல காட்சி தந்தாலும், இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஒட்டிப் பிறந்த இரட்டயர்கள் போல ரத்தமும் சதையுமாக பின்னி பிணைந்து கிடக்கின்றன. இந்த பின்னல்கள் காட்சிப்படுத்தும் சிக்கல்களே இதனை தீர்க்க முயலத் தடையாகவும் இருக்கின்றது. 

இந்த நாடு உலகின் மிக பழமையான மொழிகளையும், மதங்களையும், கலாச்சாரங்களையும், அறிவியல்களையும் கொண்டு இருப்பதில் நாம் ஒவ்வொருவரும் பெருமை அடையக் கூடிய விடயமே. இன்று மறு சுழற்சியையும், இயற்கை விவசாயத்தையும் உலக நாடுகள் மேடை போட்டு பிரச்சாரம் செய்கின்றன, ஆனால் நம் தாத்தா பாட்டி காலம் வரை இவையிரண்டும் நம் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாய் இருந்தனவே.  உணவே மருந்தாய் இயற்கைக்கும் விலங்குகளுக்கும் கேடில்லாமல் உழுது உண்டு வாழ்ந்தனர். பசுமைப் புரட்சிகள் என்ற பெயரில் மேற்கில் காலாவதியான உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் மண்ணில் கொட்டி மலடாக்கினோம். இயற்கை சாயங்களை விட்டு செயற்கை சாயங்களால் ஆற்று நீரை மாசாக்கினோம், இன்னும் நொய்யல் நதி நச்சு நீரால் நிரம்பி வழிகின்றது. மண், பித்தளைப் பாத்திரங்களையும், வாழை இலை, ஓலைப் பைகளை எல்லாம் மறந்து எவர் சில்வர், பிளாஸ்டிக் என மாறி இன்று நம் மண்ணையும், நீரையும், காற்றையும் மாசாக்கி உடலையும் உள்ளத்தையும் நோய்களால் நிரப்பி வைத்துள்ளோம்.

இது வரைக் காலமும் தமிழகம் ஏற்றத் தாழ்வுகளோடு மாறி மாறி முகிழ்ந்திருந்தாலும், அதன் ஆத்மாவையும், அது வளர்த்தெடுத்த அதன் வாழ்வியலையும் நாம் முற்றாக இழந்திருக்கவில்லை. அதே சமயம் அயலகத்தில் இருந்து வந்த நல்லது கெட்டதுகளையும் சுவீகரித்துக் கொண்டோம். ஆனால், இன்று இந்த நொடியில் இந்த நாட்டின் அங்கத்தவர்களாக நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பது தான் கேள்வியே.&nbsp

என்றும் இல்லாத அளவுக்கு ஒவ்வொரு தமிழரும் சிந்திக்கும் திறமை என்பது அதிகரித்துள்ளது. ஆனால் அச் சிந்தனையை நல்ல வகையில் எங்கு எப்படி நாட்டை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்துவது என்பதில் தான் முக்கிய தடைகளே இருக்கின்றன. அதாவது நம் ஒருவருக்கும் இந்த நாட்டை முன்னேற்றிக் காட்ட வேண்டும் என்ற நப்பாசை இருக்கின்றது. ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கின்றது. அந்தக் குழப்பம் நமது எண்ணத்தைக் கட்டிப் போட்டு நாட்டின் நிர்மாணத்தில் பங்கெடுக்க தடைக்கல்லாகவும் இருக்கின்றது. 

அத்தோடு நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைகளில் அடையாளப்படுத்தப்பட்டு பிரித்து வைக்கப்பட்டுள்ளோம், நாம் ஒரு பொது நலனுக்காக ஒன்றுபடுவது என்பதே சாத்தியமில்லை என்ற நிலையில் நாம் உருவாக்கப்பட்டும் உள்ளோம். காரணம் நாம் சாதிகள், மதங்கள், வர்க்கங்கள், கல்விகள், நிறங்கள், என வகை தொகையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளோம். நம்மை இணைப்பது என்பது ஒன்றும் இல்லை என்பதாகவே இருக்கின்றது. 

ஆனால் சற்று சிந்தித்துப் பாருங்கள் நம்மை இணைக்க கூடிய விடயங்கள் ஒன்றுமே இல்லையா ? சற்று நேரம் சிந்தித்தாலே தெளிவு பெற்று விடலாம், நம் அனைவரையும் ஒரு சில விடயங்கள் இணைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆம் ! நாம் நமக்கானவற்றை பெறுவதில் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோம், நமக்கான அடிப்படை உரிமைகளைக் கூட அளிக்கப்படாமல் ஆட விடப்பட்டுள்ளோம், நமக்கான நாட்டில் அனைத்தும் இருந்தும், நமக்கான வாழ்க்கையை நல்ல முறையில் அமைக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் நாம் அவற்றை பெற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக விலக்கி வைக்கப்பட்டுள்ளோம். அந்த ஒற்றை விடயத்தில் தமிழகத்தில் 99 % மக்களும் ஒன்று பட்டே நிற்கின்றோம். 

இங்கு சிக்கல் என்னவென்றால் 99 % மக்களும் தமக்கானவற்றை பெறவும், தாம் பெற்றவற்றை தம் சகாக்கள் பெறவும் வழியும் வாய்ப்பும் இருந்தும், நாம் அவற்றை அடைய முடியாமல் வெறும் 1 % அடக்குமுறையாளர்களின் இடத்தை பெற போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த 1 % பேரின் வழிநடத்தல்களில் மந்தை ஆடுகள் போல தலையாட்டிக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் போடும் திட்டங்களில். அவர்கள் காட்டும் திசைகளில், அவர்களின் நற்பயனுக்காக நமது அன்றாட வாழ்வியலையும், அடையாளங்களையும் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். நாம் அவர்களால் கூறு போடப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். 

ஏன் அனைத்து வளமுள்ள நாட்டில் குறைந்தது 24 மணி நேரம் மின்சாரம்,நல்ல குடிநீர், சுத்தமான காற்று, மாசற்ற சுற்றுபுறம், ஆரோக்கியமான சத்தான ஆகாரங்கள் கூட கிடைப்பதில்லை. அதே சமயம் 1 % பேருக்கோ அவை தடையில்லாமல் கிடைக்கின்றது. ஏன் நாம் தரமான அடிப்படைக் கல்வியை நம் பிள்ளைகளுக்கு இலவசமாக கொடுக்க முடியாமல் 1 % பேர் உருவாக்கி வைத்திருக்கும் வியாபாரக் கல்விக்காக வரிசையில் நிற்கின்றோம், அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணங்களை கட்ட முடியாமல் நம் அளவுக்கு மீறி உழைத்துக் கொட்டுக்கின்றோம் என்று என்றாவது சிந்தித்து உண்டா. 

ஏன் நல்ல தட்ப வெட்பமும், இயற்கை வளமும் இருந்தும் கூட நமது சாலைகள் பாழ்பட்டுக் கிடக்கின்றன, நகரங்கள் நரங்கங்களாய் காட்சியளிக்கின்றன. அவற்றால் நாம் தேவையில்லாமல் பெறும் நோய்களும், அந்த நோய்களை குணப்படுத்த நாம் பெறும் வைத்தியங்களும், அதற்கு உண்டாகும் செலவுகளும், அச் செலவுகளை சமாளிக்கவே அடிமாட்டு ஊழியங்களுக்கு கூடுதல் உழைப்பைக் கொட்டிக் கொடுக்க வேண்டிய துர்பாக்கியங்களும் எதனால். 

உலகில் விளைச்சல் நிறைந்த மண்வளமும், வேளாண் தொழில் செய்யவே தம் ஜீவிதம் தொலைத்த பல கோடி மனிதர்களும் தினம் தினம் உணவு விலை ஏறிக் கொண்டிருப்பதால் பசியோடு தூங்கச் செல்கின்றனர். வெங்காயமும், உருளைக் கிழங்கும் கூட ஆபரண விலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது செயற்கையாக உருவாக்கப்பட்ட போலித்தனமான விலையேற்றங்கள் என்பதை ஏன் நாம் உணர மறுக்கின்றோம். சில ஆயிரம் ரூபாய்கள் கடனைக் கூட திரும்பிச் செலுத்த இயலாத நிலையில் லட்சம் லட்சம் விவசாயிகள் தூக்கில் தொங்குவதும், விவசாயம் பொய்த்து விடுமோ என்ற அச்சத்தில் தம் மாநில தண்ணீரை தாமே அனுபவிக்க முயலும் சூழலால் மாநிலங்களுக்கு இடையிலான பூசல்களும், அதனால் ஏற்படும் பகைமைகள் நம் சகோதர மொழி மக்களையே நமக்கு விரோதிகளாக்கிவிடும் சூழலும் ஏன் எழுந்துள்ளது என்பதை சிந்தித்தது உண்டா? 

நம் நாட்டிற்காக உழைக்க அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் தேர்தல் வாக்குகள் மூலம் நாம் நியமித்தால், அவர்கள் என்னவென்றால் குட்டி ஜமீன்கள் போல இருக்கைகளில் பசைகளைத் தடவிக் கொண்டு புட்டங்களை ஒட்டிக் கொண்டு, அந்த இடங்களை தம் மக்கள், மாமன், மச்சினன் என்போருக்கு பகிர்ந்து கொண்டிருக்கின்றனரே இதை ஏன் நம்மால் தட்டிக் கேட்க முடியவில்லை. அவர்கள் நம் வேலைக்காரர்கள் அல்லவா? ஏன் நம்மை அவர்களின் கொத்தடிமைகள் போல மாற்றி விட்டுள்ளார்கள். 

நம் வீட்டுப் பெண்களுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் பாதுக்காப்பே இல்லையே. பச்சிளம் குழந்தை முதல் மூதாட்டி வரை கற்பழிக்கப்படுகின்றனர். நகரமோ, கிராமமோ, இரவோ, பகலோ பெண்களுக்கான பாதுகாப்பு குலைந்துள்ளதே. கற்பழிப்புகள், உடல் தீண்டல்கள், வன்பகடிகள் மலிந்து விட்டனவே. ஆண் துணையோடு போனாலும் குடல் கிழிய கற்பழிக்கப்படுகின்றாள், காதலிக்க மறுத்தால் முகத்தில் ஆசிட் வீச்சு, சுயமாய் காதலித்தால் ஊரே சேர்ந்து புணருகின்றது, காதலித்து மணந்தால் உளவியல் நெருக்கடிக்குள் உள்ளாக்கப்பட்டு பிரித்து வைக்கப்படுகின்றனர். பாடம் படிக்க பள்ளிக்கு போனால் நிர்வாண சோதனைகள், தொழில் பயில போனால் நீதிபதியோ படுக்கைக்கு அழைக்கிறான், பத்திரிக்கையாளனோ கட்டிப்பிடிக்கிறான், இவற்றை எல்லாம் விலகிச் சென்றால் உடை மாற்றும் அறையில் காமெரா வைக்கிறான், கோவிலில் பூசாரி மயக்க மருந்தை பிரசாதத்துக்குள் இட்டு வன்புணருகின்றான், ஆசிரமத்தில் கற்பழிக்கின்றான், மருத்துவமனையில் துகிலுறிந்து நிர்வாணப் படம் எடுக்கின்றான். எங்கே இந்நாடு போய் கொண்டிருக்கின்றதோ.கடைசியில் பாதிக்கப்பட்டவரை மட்டுமே குற்றவாளியாக்கின்றனர், குற்றவாளிகளை தண்டிக்க மறுக்கின்றனரே இது ஏன்?

நமக்கான நல்லதொரு குடியிருப்புக்களை அமைத்து தராமல் அதனை தனியாருக்கு விற்றுக் காசாக்கி அத் தனியார்கள் சேர்ந்து நம் நிலங்களை கொள்ளையடித்து புறாக்கூடுகளைக் கட்டி நமக்கே லட்சக் கணக்கில் விற்றுக் காசாக்கி, அதுவும் போதாது என நாம் கஞ்சிக் குடிக்கும் வேளாண் நிலங்களில் இருந்து விவசாயிகளை துரத்தி விட்டு, அந்த நிலங்களையும் பட்டா போட்டு விற்றுக் காசாக்கி நம் தலையிலேயே கட்டி விட்டுள்ளார்களே. இது ஏன் நம் மனதை உறுத்தவில்லை. 

8 கோடி மக்கள் உள்ள தேசம் என்பது ஒரு குட்டி உலகம். இந்த உலகில் உலகிலே தரமான மண் வளமும், நீர் வளமும், அதை நன்கு பயன்படுத்தவல்ல மனித வளமும் கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் அவற்றை முறைப்படுத்த முடியாமல் வாயில் எச்சில் ஒழுக மேற்கை நோக்கிக் கொண்டிருக்கின்றோம். ஏன் இங்கு படைப்புக்கள், புதிய கண்டுபிடிப்புக்கள் எவையும் உருவாக்கப்படுவதில்லை. 

நமது தேசியம் என்பது வெறும் கொள்ளைக்காரர்களின் கூடாரமாக இருக்கின்றதே, இவற்றை ஏன் நம்மால் தட்டிக் கேட்க இயலவில்லை. இன்று நம் வாழ்க்கையில் அனுபவிக்கு ஒவ்வொரு துன்பத்துக்கும் நம் தலைவிதியே என பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். அந்த விதியை மாற்ற கோவில் குளங்கள், சாமியார் மடங்கள் ஏறி இறங்கினால் போதும் என நாம் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளோம். 

நமது வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், மின்சாரம் வரவில்லை என்றால், நமக்கு விசாலமான வீடுகள் இல்லை என்றால், இலவசமான உலகத் தரமான கல்வி கிடைக்கவில்லை என்றால், கற்றக் கல்விக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், கிடைத்த வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றால், சாலையில் இறங்கினால் சாக்கடை ஓடுகின்றது, குப்பை நரல்களில் ஈ மொய்க்கின்றது, மாசுள்ள காற்று நம் நாசுக்களை வறளச் செய்கின்றது என்றால், மிதமான தட்ப வெட்பங்களை இழந்து சுட்டெரிக்கும் சூரியன் நல் தோலை கொதிப்படையச் செய்கின்றது என்றால், பேருந்தில் மூச்சுக் கூட விட முடியாமல் நெறிபட்டு ஆண், பெண் என்ற பேதமின்றி சதையோடு சதை ஒட்டி தன்மானம் இழந்து பயணிக்கின்றோம் என்றால், அந்த போக்குவரத்துக்கே சம்பாத்தியத்தைக் கொட்டிக் கொடுக்க வேண்டும் என்ற நிலை என்றால், இதனால் நோய் பரவுகின்றது என்றால், நோய் தீர்க்க நல்ல மருத்துவம் கிடைக்கவில்லை என்றால், இது தரும் மன அழுத்தங்களால் வாழ்வதே இயலாமல் போய் நொடிந்து ஒடிந்து இதயம் அடைத்து சாகின்றோம் என்றால் இதற்கு யார் காரணம் என சிந்தித்துப் பாருங்கள் ?!!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவாக தமிழ்நாட்டு தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கும்  பெப்சி கோக் போன்ற அந்நிய பானங்களை விற்க வணிகர்கள் தடை போட்டனர். இதனால் ஓடி வந்தார் பெப்சியின் உலகலாவிய நிருவாக இயக்குனர் இந்திரா நூயி. அவர் மோடியை சந்தித்த மறுநாள் பெப்சி கோக் நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் நீரை உறிஞ்ச போடப்பட்ட தடையை நீக்கியது வழக்குமன்றம்.

தஞ்சை தரணியில் மீத்தேன் இருப்பது பல ஆண்டுகளாக பலரும் அறிந்த உண்மை தான். வயல் வெளிகளில் கொள்ளிவாய் பிசாசாக அலைவது இந்த மீத்தேன் வளி தான். ஆனால் இந்த மீத்தேனை உறிஞ்சி லாபம் பார்க்க மத்திய மாநில அரசுகள் திட்டம் போட்டே மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தனர். ஆனால் பெரு விளைச்சல் தரும் தஞ்சை தரணியில் மீத்தேன் திட்டத்திற்கு தமது பாரம்பரிய நிலங்களை தருவார்களா என்ன? அதனால் தான் கடந்த முப்பது வருடங்களாக காவிரி நீரை ஒழுங்காக வரவிடாமல் விவசாயத்தை அழித்தனர். அதற்கு அப்புறம் தான் மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தனர். ஆனால் நினைத்தற்கு நேர்மாறாய் மீத்தேன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அத் திட்டத்தை தமிழக அரசு நிறுத்தியது.

ஆனால் அதன் பின் மத்திய அரசு அண்மையில் நீர்மகரிவன (hydrocarbon) திட்டத்திற்கு அனுமதி தந்தது. இந்தியா முழுவதும் 31 இடங்களில் நீர்மகரிவனை (hydrocarbon) தோண்டி எடுக்க 22 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் நாட்டின் நெடுவாசல், புதுவையின் காரைக்கால் ஆகிய இடங்களும் அடங்கும். உண்மையில் மீத்தேன் கூட ஒரு நீர்மகரிவன் (hydrocarbon) தான். பெயரை மாற்றி உள்ளே நுழைந்திருக்கின்றது மத்திய அரசு. இதற்கு தமிழ்நாட்டு அரசும் உடந்தையாகியிருக்கின்றது.

இன்று  தமிழ்நாட்டில் நீரில்லாமல் தினம் தினம் விவசாயிகள் சாகும் நிலையில், தண்ணீரைக் கொண்டுவரவல்லவா முனைப்புக் காட்டியிருக்க வேண்டும் நம் அரசியல் பிரதிநிதிகள். ஆனால், மாறாக சங்கபரிவார காவிகளோடு சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டு அரசியல் பிரதிநிதிகளளும் நெடுவாசல் நீர்மகரிவன திட்டத்தைக் கொண்டு வர உதவி நிற்கின்றனர்.

மத்திய அரசியல்வாதியர் தொடர்ந்து நீர்மகரிவன  திட்டத்தைக் கொண்டு வர முனைப்பு காட்டி வருகின்றனர். இதில் ஏன் இவ்வளவு முனைப்பு இவர்களுக்கு. ஏனெனில் இந்த நீர்மகரிவன திட்டத்தால் பயனடைய போவது ஜெம் லாபாரற்றி என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தை நடத்துவது பாஜகவை சேர்ந்த கருநாடக அரசியல்வாதி. அடடா ! சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

அதே சமயம் முப்போகம் விளைச்சல் தரும் தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிய காவிரி மாவட்டத்தின் விவசாயம் இதனால் பாதிக்கப்படும் என்பதையோ, அதனை நம்பி வாழ்கின்ற லட்ச கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் என்பதையோ மத்திய மாநில அரசுகள் சாட்டைசெய்யவில்லை. 

ஏற்கனவே தமிழ்நாட்டை அழிக்க கூடங்குளம், நியூட்ரினோ, கெயில், மீத்தேன் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது, இப்போது இத் திட்டம் வேறு. இத்தகைய திட்டங்களால் நல்ல விளைச்சல் தரும் வேளாண் நிலங்கள் மட்டும் அழியபோவதில்லை. இத் திட்டங்களால் சுற்றுச் சூழல் மாசடையும், நிலத்தடி நீர் கெட்டு போகும், காற்றில் கலக்கும் நஞ்சால் நோய்கள் பரவும், ஒட்டு மொத்தத்தில் தமிழ்நாடே வாழத் தகுதியற்று நாசமாய் போகும்.

எண்ணூரில் பெட்ரோல் கசிவால் ஏற்பட்ட மாசைக் கூட சுத்தம் செய்ய திராணியற்ற நாடு இது. நாளை கூடங்குளத்தில் கசிவு ஏற்பட்டால், நியுற்றினோ திட்டத்தில் வெடிப்பு வந்தால் அழியப் போவது அப்பாவி பொது மக்கள் மட்டுமே. வளர்ந்த நாடான ஜப்பானின் புகுஷிமா, ரசியாவின் செர்நோபிலில் நிகழ்ந்தவைகளை எளிதில் மறந்துவிட்டோம்.

வளர்ச்சி வளர்ச்சி என்ற கோஷங்கள் மூலம் நம் நாட்டின் இயற்கை வளங்களையும், மக்களின் நலன்களையும் காலில் போட்டு மிதித்து நம்மை நம் நாட்டின் அரசே அழிவுப் பாதை நோக்கி தள்ளிவருகின்றனர். இதைப் பற்றி ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள், 

நாம் அனைவரும் சிந்திப்பதோடு நில்லாமல் குறைந்தது இனியாவது என்ன செய்யலாம் எப்படிச் செய்யலாம் நமது பிள்ளைகளாவது இந் நாட்டில் நல்ல முறையில் வாழ வழி வகை செய்ய ஒற்றுமையுடன் செயல்படுவோமாக.

- மின் வாசகம் 
வாசிக்க »