Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

கடந்த மூன்று வாரங்களாக, தமிழ் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தஞ்சாவூர், திருச்சிராபள்ளி மாவட்ட விவசாயிகள் ஜந்தர் மந்தரில் ( புது தில்லி ) போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ் நாட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பிரச்சனைகளை வெளிப்படுத்த மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகளை வைத்து போராட்டம் நடத்துகின்றனர்.

தமிழ் நாட்டில் நிலவி வருகிற மோசமான சூழ்நிலையால் தற்கொலை பண்ணி கொண்ட விவசாயிகளோட மண்டை ஓடுகள் தான் அது என அவர்கள் சொன்னார்கள். கடந்த நூறாண்டில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள கடும் வறட்சியாலும், கூடவே கடன் சுமைகளைத் தாங்க முடியாமலும் ஒரே மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 106-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

மத்திய அரசாங்கம் உடனடி வறட்சி நிவாரணமாக 40, 000 கோடி ரூபாயை தர வேண்டும் எனவும், தமது உற்பத்திக்கு ஏற்ற நல்ல விலையை அறிவிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோருகின்றனர். சொல்லப் போனால் வடக்கு மாநிலத்தின் ( உத்தர பிரதேசம் ) புதிய முதலமைச்சர் யோகி ஆதித்தியநாதர் அம் மாநில விவசாயிகளின் 36, 359 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது, இந்த விவசாயிகளின் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது. 

இங்கே நம் மனதில் எழும் கேள்வி என்னவென்றால் வடக்கு மாநில விவசாயிகளுக்கு உதவுகின்ற பாஜக அரசாங்கம் ஏன் தமிழ் நாட்டு விவசாயிகளிடம் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்கின்றது. நடுவண் அரசோ மிக எளிதாக கடன் சுமையை தள்ளுபடி செய்ய வேண்டியது மாநில அரசின் அதிகாரத்துக்குள் வருகின்றது, ஆகவே அது மாநில அரசின் கடமை என கையை விரிக்கின்றது.  

ஆனால், ஒவ்வொரு பச்சட்டிலும் நடுவண் அரசு கொண்டு வருகின்ற விவசாயக் கொள்கைகள் மாநிலங்கள் மீதும், இந்திய விவசாயிகள் மீதும் அதிக கடன் சுமையை ஏற்றிக் கொண்டே போகின்றது.

விவசாய செய்கையில் அதிகரித்து வருகின்ற உற்பத்தி செல்வுகள் தான் கடன் சுமைக்கு முதல் காரணமாகும். ஏனெனில் விதைகள், உரங்கள், உயிர்க்கொல்லி மருந்துகள், எந்திரங்கள் போன்றவற்றை சார்ந்தே விவசாயம் நடைபெறும் சூழல் எழுந்துள்ளது. கூடவே விவசாய உற்பத்து பொருட்களின் விலையும் சரிந்து வருகின்றது. விவசாயிகளுக்கு வருவாயை விட உற்பத்தி செலவு அதிகமாக இருக்கின்றது. இதனால் எதிர்மறை பொருளாதார வட்டத்துக்குள் விவசாயிகள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இந்த கடன் பிரச்சனையானது பசுமை புரட்சி என்ற பெயரில் கெமிக்கல் உரங்களை கொண்டு வந்து சேர்த்ததிலிருந்து தொடங்குகியது. பசுமை புரட்சி காலக் கட்டத்தில் ஏற்பட்ட கடன் சுமையானது பொதுக் கடனாக இருந்தது. விவசாய அமைப்புகள் வருவாய் தரக் கூடிய விலைகளை அறிவிக்க கோரிக்கை வைத்தனர். அதனால், கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பதை கடைப்பிடிக்கத் தொடங்கியது அரசு. 

ஆனால், உலக மயமாதல் மற்றும் புதிய தாராளமய சீர்த்திருத்தக் கொள்கைகள் வந்த போது விவசாயக் கொள்கைகளை தீர்மானிப்பவர்களாக பன்னாட்டு கார்ப்பிரேட்டு நிறுவனங்கள் மாறின. இதனால் உற்பத்தி செலவுகள் அதிகமானது, விவசாயப் பொருட்களின் விலை வீழ்ச்சிக் கண்டது. 

காங்கூனில் ( மெக்சிக்கோ ) நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட கணிப்பின் பிரகாரம் விவசாய பொருட்களின் விலை வீழ்ச்சியால் இந்திய விவசாயிகள் ஆண்டுக்கு ஏறத்தாழ 250 கோடி அமெரிக்க டாலர்களை இழந்து வருகின்றனர்.

அது ஒரு பக்கம் என்றால், அமெரிக்காவைச் சேர்ந்த வேளாண், வேளான் வேதிப் பொருள் நிறுவனமான மான்சாண்டோ அறிமுகம் செய்த பீட்டி பருத்தி விதை வழக்கு தற்போது வழக்கு மன்றத்தில் இருக்கின்றது. இந்த  நிறுவனம் அறிமுகம் செய்த மரபணு மாற்றப்பட்ட பீட்டி பருத்தி விதையை நம்பி வாங்கி பயிரிட்டதால் தெக்கண பகுதிகளைச் சேர்ந்த எண்ணற்ற விவசாயிகள் நஷ்டமடைந்தனர். 1995-யிலிருந்து தற்கொலை செய்து கொண்ட ஏறத்தாழ 3,10,000 விவசாயிகளில் நிறையப் பேர் பருத்தி பயிரையே நம்பி வாழ்ந்த தெக்கண (மராத்திய மாநிலத்தின் விதர்பா, மராத்தவாடா, தெலங்கானா, மற்றும் கருநாட்டு மாநில தாரவாடா) விவசாயிகளே ஆவார்கள். ஆனால், மான்சாண்டோ நிறுவனமோ 5, 000 கோடிக்கும் அதிகமான வருவாயை இந்தியாவிலிருந்து எடுத்துக் கொண்டு போய் விட்டது. இறுதியில் கடனில் தத்தளித்து என்னவோ இந்திய விவசாயிகள் தான்.

அதே சமயம், இந்திய விவசாயத்தின் மீதான பன்னாட்டு விதை மற்றும் கெமிக்கல் நிறுவனங்களின் தாக்குதல் வலுத்துக் கொண்டே வருகின்றது. இதற்கு பெருந்துணையாக இருப்பதோ புதிய தாராளமய பொருளாதார கொள்கைளே. காலத்துக்கும் நிலைத்து நிற்கக் கூடிய குறைந்த செலவிலான வளங்குன்றா (Sustainable) விவசாய முறைகளை ஊக்குவிக்காமல், விவசாயிகளுக்கு அதிக கடன்களை வழங்கும் திட்டங்களையே கொண்டு வருகின்றது. 2017-18 ஆண்டுக்கான பச்சட்டில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய்களை விவசாயக் கடனாக அறிவித்திருக்கின்றது இந்தியாவை ஆட்சி செய்து வரும் பாஜக அரசாங்கம். இது கடந்த பட்சட்டில் அறிவிக்கப்பட்ட 90,000 கோடி ரூபாயிலிருந்து அதிகமாக்கப்பட்டுள்ளது. 

நிச்சயம் விவசாயிகளுக்கு கடன் உதவிகள் தேவைப்படுகின்றன. ஆனால், அதே சமயம் அதிக உற்பத்தி செலவுகளைத் திணித்து அவர்களை கடன் வலைக்குள் தள்ளிவிடுவதில் என்ன நியாயம்? அதே மாதிரி, விவசாயிகளுக்கு தாம் உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கு நியாயமான சரியான விலையும் தேவைப்படுகின்றது. நீடித்து நிலைத்திருக்கக் கூடிய வளங்குன்றா முறையிலான சுற்றுச்சூழல் சார்ந்த விவசாய செய்முறைகளை விவசாயிகள் மேற்கொள்ளவும், மண்ணின் வளத்தை பெருக்கவும், மாறி வரும் காலநிலைக்கும், வறட்சிக்கும் ஈடுகொடுக்கும் வகையிலான பயிர்முறைகளை செய்யவும், ஒவ்வொரு ஏக்கருக்கும் அதிக சத்து நிறைந்த, அதிக வருவாயைத் தரக்கூடிய வேளாண்மை முறைகளை கைக்கொள்ளவும் அரசு சார்ந்த பொது திட்டங்கள் உதவ வேண்டும்.

விவசாயிகளை கடன் சுமைகளிலிருந்து மீட்டு தரக் கூடிய வகையில் பொது முதலீடுகளுக்கு என எந்தவொரு பணத்தையும் பட்சட்டில் ஒதுக்கவில்லை இவர்கள். கடந்த 30 ஆண்டுகளாக நவதானியா என்றொரு அரசு சார்ப்பற்ற அமைப்பு உயிர் பன்முகத் தன்மையை காக்கவும், சூழலியல் சார்ந்த இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தவும், செலவே இல்லாத வகையில் விவசாயம் செய்து நல்ல சத்தான உணவுப் பொருட்களை இரண்டு மடங்கு உற்பத்தி செய்து, நாலு மடங்கு விவசாயிகளின் வருவாயைப் பெருக்க வல்ல விவசாய முறைகளை பரவலாக்கி வருகின்றது. 

ஒரு தனி நிறுவனத்தால் இதைச் செய்ய முடிகின்றது, ஆனால் அரசாங்கமோ விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக அதிகரிப்போம் என கூவுகின்ற போதும், அது விவசாயிகளின் ஒட்டு மொத்த வருவாயா, அல்லது நிகர வருவாயா என்பதில் கள்ள மௌனம் காட்டுகின்றது. ஒட்டு மொத்த வருவாய் அதிகரித்தல் என்பது விவசாயி அதிக லாபம் தரும் பணப் பயிரை அதிக கடனைப் பெற்று, தமது குடும்பத்தின் உணவு மற்றும் சத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நடத்தப்படும் ஒரு முறையாகும். இவ்வாறு செய்யப் படுகின்ற விவசாயத்தில் செலவையும் வருவாயையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது தனிப்பட்ட நிகர வருவாய் குறைவானதாகவே இருக்கும். பல சமயம், அதிக கடன் சுமையை விவசாயிகளின் தலையில் அது ஏற்றி வைத்து வைத்துவிடுவதோடு, தனிப்பட்ட நிகர வருவாய் செலவை விட குறைவானதாக இருக்கும். அப்படிப்பட்ட நிலை தான் கடன் பிரச்சனைக்கு மூல காரணமாக அமைவதோடு, விவசாயிகளின் தற்கொலைக்கு முதல் காரணமாகவும் இருக்கின்றது.

இந்த நிலையில், ஓரளவு கடன் தள்ளுபடி மட்டும் செய்வது என்பது ஓட்டை வாளியிலிருந்து வழியும் நீரை துடைத்துக் கொண்டிருப்பது போல தான் இருக்கும். நமது இன்றைய விவசாயம் சீரழிந்து போயுள்ளது. ஏனெனில், அது மண்ணின் நலத்தைப் பற்றியோ, உயிர் பன்முகத்தன்மை பற்றியோ, நீராதாரத்தைப் பற்றியோ, நமது சிறு விவசாயிகளின் நிலைத்த வாழ்வாதரத்தைப் பற்றியோ சிறிதும் கவலைப்படுவதாக இல்லை. மாறாக, அது விதைகளை விற்கும், கெமிக்கல் உரங்களை விற்கும் பெரு நிறுவனங்களின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது.

எங்கெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகள் நமது உணவு மற்றும் விவசாயத்திற்குள் நுழைகின்றதோ அங்கெல்லாம் கடன் சுமை அதிகரிப்பது நிகழ்ந்து வருவதை அனைத்து வித ஆய்வுகளும் தெளிவுப்படுத்துகின்றன.

மாற்றந்தரும் இந்திய தேசிய நிறுவனம் ( நிதி ஆயோக் ) என்கிற விவசாய நலன் காக்கும் மத்திய அரசு நிறுவனத்தை இனி கார்ப்பிரேடு நிறுவனங்களின் ஆலோசகர்களே நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நம் விவசாயிகளை மேலும் கடன் சுமைக்குள் தள்ளப் போகின்றது. 

விவசாயிகளைச் சுரண்டக் கூடிய புதிய வகை தண்டல் முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு விவசாயியும் பன்னாட்டு வலைப்பின்னலுக்குள் பிணைக்கப்படுவார்கள். இந்த வலைப்பின்னல் மூலமாகவே ஒவ்வொரு விவசாயியும் விதைகளைப் பெறுவது முதல் சந்தைப்படுத்தல் வரை பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகின்றது.

வேளாண் சூழலியல், மண் பாதுகாப்பு, நீராதார மேம்பாடு, புத்துயிரூட்டல், இனப்பெருக்கம் என விவசாயம் சார்ந்த பல துறைகளில் நமக்கு மிகச் சிறந்த பாரம்பரிய அறிவு இருக்கின்றது. அதனால் தான் நம் நாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நெல் ரகங்களையும், 1500-ம் அதிகமான கோதுமை, மா, வாழை, பருப்பு வகைகள், மற்றும் கால்நடை ரகங்களை நம்மால் உருவாக்க முடிந்திருக்கின்றது.

ஆனால் காப்பிரேட்டு நிறுவனங்களோ நமது உணவாதாரத்தை புதிய காலனித்துவ முறைகள் மூலம், நமது அரசாங்களின் துணையோடு கொள்ளையடித்து வருகின்றன. அதற்காகவே புதிது புதிதாக கடன் முறைகளை ஏற்படுத்தி வருகின்றன.

மாண்சாண்டோ நிறுவனம் உலகின் மிகப் பெரிய காலநிலை தகவல் நிறுவனத்தையும், மண் சார்ந்த ஆய்வு நிறுவனத்தையும் வாங்கியிருக்கின்றது. சிலிக்கான வேலியில் உள்ள பல முன்னணி உளவு மென்பொருள் () நிறுவனங்களை வாங்கி, அவற்றை நவீன விவசாய கருவிகளில் பொருத்தி வருகின்றது. இதன் மூலம் விவசாயம் சார்ந்த தகவல்களைத் திருடுவதோடு, அதை மேம்படுத்தி மீண்டும் அந்த விவசாயிகளுக்கே விற்கவும் திட்டம் தீட்டு வருகின்றது.

காலநிலை சார்ந்த தகவல்களையும், காப்பீட்டு திட்டங்களையும் கொண்டு விவசாயிகளிடமிருந்து ஆண்டுக்கு மூன்று லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை லாபம் பார்க்க அது திட்டமிட்டு வருகின்றது. இந்த லாபம் எங்கிருந்து வரும் என்றால் விவசாயம் பொய்ப்பதிலிருந்தும், விவசாயக் கடன்களிலிருந்தும், விவசாயிகள் தற்கொலை செய்வதிலிருந்தும் தான் வரப் போகின்றது.

திருட்டுத் தனமாக நம் விவசாயிகளை விதைகள் விற்கும், கெமிக்கல் உரங்களை விற்கும், காப்பீட்டு திட்டங்களை விற்கும், காலநிலை தகவல்களை விற்கும் பன்னாட்டு பெருநிறுவங்களிடம் சிக்க வைப்பதன் மூலம் புதிய காலனித்துவத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த காலனித்துவம் மூலமாக நமது உலகமும், நமது சுதந்திரமும் முற்றாக நசுக்கப்பட்டு அழிக்கப்படும் என்பதில் துளி சந்தேகம் இல்லை.

- வந்தனா சிவா [ தமிழில் : திரு. மின் வாசகம் ]

வாசிக்க »


கடந்த வருடம் கனடாவின் குபெக்கு மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற வால்மோரின் வேல்முருகன் ஆலயத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். கனடாவின் பல பாகங்களில் வாழ்கின்ற தமிழர்களும், அமெரிக்காவிலிருந்தும் கூட அங்கே வந்திருந்தனர். கனடாவின் குபெக்கு மாநிலத்தில் மலைகள் நிரம்பிய தமிழர்களோ, வேறு இந்தியர்களோ வசிக்காத ஒரு சின்னஞ்சிறிய ஊரான வால்மோரினில் தான் இந்தக் கோவில் அமைந்திருக்கின்றது. இந்தக் கோவிலையும், அதற்குப் பக்கத்திலிருக்கும் தியான மையத்தையும் பெரும்பாலும் பிரஞ்சு மொழி பேசும் வெள்ளையர்களே நிர்மாணித்து வருகின்றனர். ஒரு சில தமிழ் குருக்கள்மார்கள் அங்கே தங்கியிருந்து கோவில் பூசைகளை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜூன்-ஜூலை மாதங்களில் அங்கே திருவிழா நடப்பது வழக்கம். அப்போது மட்டும் ஆயிரக் கணக்கான தமிழர்கள் டொராண்டோ, மொன்றியல், நியுயார்க் போன்ற பகுதிகளிலிருந்து அங்கே போய் சாமி கும்பிட்டு வருவர். அப்படியாக நானும் அங்கே செல்ல நேரிட்டது.

டொராண்டோவிலிருந்து பயணித்த நாங்கள் ஒண்டாரியோ மாநில எல்லையைக் கடந்து குபெக்கு மாநில எல்லைக்குள் நுழைந்த பின்னர் தான் புரிந்தது, என்ன தான் கனடா ஒரே நாடு என்றாலும், ஒரே நாட்டுக்குள் வேறொரு நாடும் இருக்கின்றது அது தான் முற்றிலும் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற குபெக்கு என்பது. ஏனெனில் குபெக்கு மாநிலத்தின் அனைத்து நெடுஞ்சாலை பலகைகளும் முற்றாக பிரஞ்சு மொழியிலேயே இருந்தது. துளிக்கும் எங்கும் ஆங்கிலம் இல்லை. இத்தனைக்கும் கனடாவின் இரு ஆட்சி மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. அது மட்டுமின்றி கனடாவின் பெரும்பான்மை மக்கள் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்கள்.

கனடாவின் பெரும்பான்மை மக்கள் ஆங்கிலம் பேசினாலும், கனடாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆங்கிலம் இருந்தாலும் கூட, பிரெஞ்சு தெரியாத வாகன ஓட்டுநர்கள் பலர் நெடுஞ்சாலைகளை பயன்படுத்துகின்ற போதிலும் கனடாவின் குபெக்கு மாநிலத்தின் நெடுஞ்சாலைகளில் பிரஞ்சு பலகைகள் மட்டுமே காணப்படுகின்றன. தமிழர்களாகிய நாம் குபெக்கின் பிரஞ்சு மக்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் இருக்கின்றன.

தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் எழுதுவதாகச் செய்திகள் வந்தன. இதற்குத் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பும் கிளம்பியது. எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக (இ)டிவிட்டர் தளத்தில் #stophindichauvinism என்ற ஆச்சடுக்கு மூலமாகப் பலரும் தம் விசனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த (இ)டிவிட்டர் போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமின்றி கன்னடர்களும் அதிகளவில் பங்கெடுத்து கருநாடு மாநிலத்தில் இந்தி மொழி திணிப்பு எவ்வாறு எல்லாம் நடந்தேறி வருகின்றது என்கிற தமது கோபத்தைக் கொட்டித் தீர்த்தனர். கன்னடர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள், ஒடியர்கள், மராட்டியர், பிக்காரிகள், வங்காளிகள் எனப் பலரும் கூடப் பங்கெடுத்திருந்தனர்.

நரேந்திர மோதி ஆட்சியேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் இந்தி திணிப்பு அரேங்கேறி வருகின்றதை நாம் அறிவோம். கடந்த 2015-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று இதே போன்றொரு (இ)டிவிட்டர் போராட்டம் நடத்தப்பட்டதோடு இந்தியா முழுவதுமிருந்து வந்த மொழிப் போராளிகள் ஒரு மாநாட்டையும் சென்னையில் நடத்தியிருந்தனர். ஏற்கனவே முகநூல் பக்கத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான ஒரு அமைப்பு செயல்பட்டு வருவதோடு, இந்தியா முழுவதும் உள்ள இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாதோர் தீவிரமாக கருத்துப் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.

சுமார் ஏழாண்டு வெளிநாட்டில் வசித்து விட்டுக் கடந்த 2014-யில் தமிழகம் திரும்பிய போது, நான் ஒரு விடயத்தை நன்கு கவனித்தேன். இந்த ஏழாண்டுகளில் பொருளாதார நிலையில் நாம் வளர்ந்திருந்தாலும் கூட, நம்மை அறியாமலேயே இந்தி திணிப்பு அரங்கேறி வருகின்றது. ஆம் ! இந்த ஏழாண்டு இடைவெளியில் எல்லா இடங்களிலும் சந்தடி சாக்கில் இந்தி நுழைந்திருக்கின்றது. முன்பு எல்லாம் வெறும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்த நிறுவனங்களில் மட்டுமே இந்தி காணப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தனியார் நிறுவனங்கள் கூட இந்தியைத் திணித்து வருகின்றன. வங்கிகளின் ஏட்டியம்கள் (ATM), செய்தித் தாள்கள், விளம்பரங்கள், பேரங்காடிகளின் அறிவிப்பு பலகைகள், அவ்வளவு ஏன் திரையரங்குகளில் உள்ள கழிப்பறை வரையில் இந்தி நுழைத்திருக்கின்றது. இவற்றைத் தமிழகத்தில் வாழும் எத்தனைப் பேர் கவனிக்கின்றார்கள் எனத் தெரியவில்லை.

சென்னையிலிருந்து வெளியாகும் தமிழ் செய்தித்தாளில் இந்தியில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. விருகம்பாக்கத்திலிருந்த திரையரங்கின் கழிப்பறையில் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே இருந்தது. வளசரவாக்கத்தில் ஒரு மளிகைக் கடை வாசலில் இருந்த சோப்பு விளம்பரம் ஆங்கில எழுத்திலான இந்தியில் இருந்தது. இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.

மத்திய அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாக இந்தி மொழியைத் திணித்து வருகின்றது. மத்திய அரசில் பணியாற்றுவோர் இந்தியில் கையெழுத்திடவும், இந்தி மொழியில் பேசவும், இந்தி மொழியில் சமூக ஊட்டங்களை பயன்படுத்தவும் வற்புறுத்தி வருகின்றது. மத்திய அரசின் கல்வி வாரிய பள்ளிகளில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் படிக்க வற்புறுத்தப்படுகின்றனர். அவ்வளவு ஏன் பல பள்ளிகள் சமஸ்கிருத வாரங்கள் கூட கொண்டாடின.

இந்தி மொழியை எப்படியாவது முழு மூச்சுடன் திணித்துவிட மத்திய அரசு முயன்று வருகின்றது. ஐநா சபையில் இந்தியை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கவும், இந்தி மொழியைப் பரப்ப கோடிக் கணக்கான நம் வரிப் பணத்தைக் கொட்டிக் கொடுக்கவும் அதனால் முடிகின்றது. ஆனால், மற்ற இந்திய மொழிகளை நசுக்கவும், அழிக்கவும் அது நினைக்கின்றது.

இந்தியை மூன்றாம் மொழிப் பாடமாக எடுத்துக் கொண்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றது. பஞ்சாபில், குஜராத்தில், பீகாரில், மராட்டியத்தில் இளைய தலைமுறையினர் இந்தி மட்டுமே பேசும் சூழல் ஏற்பட்டுள்ளது. வங்காளத்தில், ஒடிசாவில் இந்தி சொற்கள் அதிகம் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் தெலுங்கு மொழி இல்லாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. கருநாடகத்தில் இந்தி மொழியை வளர்க்கவும், கன்னட மொழியைப் புறந்தள்ளவும் சகல வசதிகளுடன் வேலைகள் அரேங்கேறி வருகின்றன.

இந்தி மொழியின் அசுரப் பசிக்கு தடையாக இருப்பது நம் தமிழகம் மட்டும் தான். அதனால் தான் என்னவோ, தமிழகத்தின் மொழி மற்றும் கல்வி ஆகியவற்றை நிர்மூலமாக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அண்மையில் வெளியான ஓர் ஆய்வில் இந்தியாவில் தலைசிறந்த 100 கல்லூரிகளில் 37 தமிழகத்தில் மட்டுமே உள்ளது. தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் 51 சிறந்த கல்லூரிகள் இடம்பெறுகின்றன. கூடவே ஆந்திர பிரதேசத்தின் 11-யைம் சேர்த்தால் இந்தியாவின் மூன்றில் இரண்டு சிறந்த கல்வி நிலையங்கள் முன்னாள் மதராஸ் மாநிலத்தில் அமைந்திருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்,

இன்று தமிழ் மாணவர்கள் அதிகளவில் தேசிய கல்வி நிலையங்களில் இடம் பிடித்து வருகின்றனர். மேலும் பல தமிழர்கள் அமெரிக்கா உட்படப் பல நாடுகளில் தலை சிறந்த பணிகளில் இருக்கின்றனர். உதாரணத்துக்கு கூகிளின் சுந்தர் பிச்சை தொடங்கி பலரும் உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டியிருக்கின்றனர். செவ்வாய் கோளிற்கு விண்கலம் ஏவிய ஆராய்ச்சிக் குழுவில் இருந்த சுப்பையா அருணன் உட்படப் பல விஞ்ஞானிகள் தமிழர்களே. வெற்றிகரமாக அணு ஆயுத சோதனை நடத்திக் காட்டிய நம் அப்துல் கலாம் கூட தமிழரே. இவர்கள் என்ன இந்தி படித்தா சாதித்துக் காட்டினார்கள். இவர்கள் எல்லாம் பள்ளிப் படிப்பையே தமிழில் மட்டுமே படித்து முன்னேறியவர்கள்.

இன்று இந்தியை நம் தொண்டையில் திணிப்பதன் மூலம் நம்மையும் மற்றொரு பீகாராக, ஜார்க்கண்டாக மாற்றவே முயல்கின்றார்கள். தமது தாய்மொழியான போஜ்பூரியையும், சாந்தாளியையும் தொலைத்துவிட்டு இந்தி திணிக்கப்பட்டதால் வளர்ச்சியடையாமல் அவர்கள் யாவரும் தென்னிந்தியாவிற்கே பிழைக்க வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

மாறாக 1937-யில் முதன் முறையாக இந்தி திணிக்கப்பட்ட போது பெரியார் உட்பட பல தலைவர்கள் அதை எதிர்த்தனர். மீண்டும் 1963-1967 காலப் பகுதியில் ஆங்கிலத்தை நீக்கிவிட நடந்த முயற்சியை முறியடித்து, இந்தி திணிப்பை விரட்டியடித்து இருமொழி கொள்கையாள் தமிழகம் வளர்ச்சி கண்டது. அன்று அறிஞர் அண்ணாவின் நேர் கொண்ட சிந்தனையாலும், வழிகாட்டலாலும் ஆங்கிலம் இந்தியாவில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த ஆங்கிலமே இந்தியாவை இன்று உலக அரங்கில் உயர்த்தி இருக்கின்றது. அன்றே ஆங்கிலம் நீக்கப்பட்டிருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் உபி, பிகார் போல நாறியிருக்கும்.

அன்று தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை விலக்கியதால், தமிழர்களுக்குத் தேவையற்ற சுமை நீங்கியதோடு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் நகர்ந்தது. தமிழ் மொழியின் இருப்பும் நிலைநாட்டப்பட்டது. மாறாக மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டதால் இன்று கருநாடகம் இந்தி பேசுவோரது ஆதிக்கத்தில் தள்ளாடுகின்றது. இந்தி மொழி பேசுவோரே பெங்களூரின் பெரும்பான்மை வேலைகளை பறித்துக் கொண்டுள்ளனர். அத்தோடு நிற்காமல் கன்னட மக்கள் மீதும் இந்தி மொழியைத் திணித்து வருகின்றனர். பெங்களூரில் மெட்ரோ ஓடியபோது இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்புகள் வந்த போது கன்னட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கு எல்லாம் காரணம் கருநாடத்திற்கு என்றொரு மாநில கட்சி இல்லாமல் போனதும், மும்மொழி கொள்கைகளை ஏற்றுக் கொண்டதுமே ஆகும்.

அதே சமயம் இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியன் எனவும், இந்தி தெரிந்தால் வேலைக் கிடைக்கும் எனப் பழைய பஞ்சாங்கம் பாடுவோரும் நம் தமிழகத்தில் இருக்கத் தான் செய்கின்றனர். இந்தி இந்தியாவில் இருக்கின்ற ஏனைய மொழிகளைப் போன்று ஒரு மொழி அவ்வளவே. உதாரணத்துக்கு ஒரு தாயிற்கு 18 பிள்ளைகள் இருக்கின்றன, ஆனால் அந்தத் தாய் ஒரே ஒரு பிள்ளைக்கு மட்டும் நல்ல சட்டை, சாப்பாடு என கவனித்துக் கொண்டு ஏனைய பிள்ளைகளை பட்டினி போட்டும், கிழிந்த ஆடைகளோடு அலைய விட்டால், அந்தத் தாய் ஒரு நல்ல தாயாக கருதப்பட மாட்டாள். இன்று இந்தியாவின் நிலையும் இது தான். இந்தியாவின் மற்ற மொழிகளை ஒதுக்கிவிட்டு இந்திக்கு மட்டும் சகல சௌபாக்கியங்களையும் தந்து அகமகிழ்கின்றது மத்திய அரசாங்கம். ஏனிந்த மாற்றாந்தாய் மனப்பான்மையோ?

இந்தி என்றொரு மொழியைத் தமிழர்களாகிய நாம் வெறுப்பதில்லை. இந்தி மொழி பேசப்படுகின்ற மாநிலத்திற்குச் செல்கின்ற தமிழர்கள் அங்கேயே நிரந்தரமாக வசிக்க நேரிடும் போது குறுகிய காலத்தில் இந்தியைக் கற்று மிக அழகாக இந்தி பேசுவதை நான் பார்த்திருக்கின்றேன். அதே சமயம் ஆந்திராவிற்கோ, கருநாடகத்திற்கோ, வங்காளத்திற்கோ குடிபுகும் தமிழர்கள் முறையே தெலுங்கு, கன்னடம், வங்காள மொழிகளைக் கற்று பேசி வருகின்றனர். ஆனால், எங்கோ இருக்கின்ற இந்திக் காரன் இங்கே சாமி கும்பிட வருவதற்கும், நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவற்காகவும், இங்கே நம் தமிழகத்தில் வேலைக்கு வருவதற்காகவும், ஏழரைக் கோடி தமிழர்களும் இந்தி படிக்க வேண்டும் எனச் சொல்வது மடத்தனமாகப் படவில்லை.

உலகமே சுருங்கி உலகமய பொருளாதாரக் கால கட்டத்தில் நாம் கொரியாக் காரனோடும், சீனாக் காரனோடும், ஜெர்மன் காரனோடும் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றோம், அவர்களும் நம் தமிழகத்திற்கு வந்து போகின்றனர். அதற்காக இந்தியர்கள் அனைவரையும் கொரியின் மொழியையும், சீன மொழியையும், ஜெர்மன் மொழியையும் கற்றுக் கொள்ளுங்கள் எனச் சொன்னால் எவ்வளவு நகைச்சுவையாக இருக்குமோ அவ்வளவு நகைச்சுவையாக இருக்கின்றது தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இந்தி படியுங்கள் என்ற கோஷமும்.

கடந்த 50 ஆண்டுகளாகத் தென்னிந்திய மாநிலங்கள் இந்தி படித்து வருகின்றன. ஆனால் எதாவது ஒரு வட இந்திய மாநிலத்தில் எதாவது ஒரு தென்னிந்திய மொழியை அவர்கள் படிக்கின்றனரா என்ன? இல்லவே இல்லை. இதென்ன நியாயம் சொல்லுங்கள். சொல்லப் போனால் முதலில் உபி, பிகார், ராஜஸ்தான் போன்ற இந்தி மொழி மாநிலங்களில் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளைக் கட்டாயமாக்குங்கள். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான இந்தி மொழி பேசுவோர் தென்னிந்தியாவிற்குத் தொழில் செய்யவும், வேலை தேடியும் வருகின்றனர். இனி வருங்காலங்களில் மேலும் பல லட்சம் பேர் இங்கே குடியேறும் சூழல் தான் உள்ளது. அவர்கள் இந்த மொழிகளைக் கற்பது பயன் தரலாம். அப்போது நிச்சயம் வட இந்திய ஓட்டுநர்களுக்கு தமிழகத்திலோ, கருநாடகத்திலோ இந்தியில் பெயர் பலகைகள் தேவைப்படாது தானே.

- மின் வாசகம் 
வாசிக்க »
உலகம் முழுவதும் இன்று ஆங்கிலம் முக்கியமான தொரு மொழியாக பரிணமித்துள்ளது. உலகின் பல நாடுகளில் ஆங்கிலத்தை கற்கின்றனர். இந்தியா போன்ற முன்னாள் பிரித்தானிய காலனித்துவ நாடுகளில் ஆங்கில வழிக் கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கப் படுகின்றது. இந்நிலையில் ஆங்கிலப் புத்தகங்களின் விற்பனை ஆங்கிலம் பேசப்படும் நாடுகளையும் தாண்டி அதிகம் விற்பனை ஆகத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அதிகளவு ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகின்றனர். இதனால் மேற்கத்திய பிரசுரங்கள் பலவும் இந்தியாவுக்குள் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன.  உலகில் ஆங்கிலப் புத்தகங்கள் அதிகம் விற்கப்படும் மூன்றாம் நாடாக இந்தியா திகழ்கின்றது. ஆங்கிலப் புத்தகங்களின் வாசிப்பு அதிகம் இருப்பதால் மக்கள் அவரவர் தாய்மொழியைக் கைவிட்டு ஆங்கிலத்தை விரும்புகின்றனர் என எடுத்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவது இயல்பானது. ஆனால் அவை எந்தளவுக்கு உண்மை. இதற்கான பின் புல காரணங்களை ஆராய முற்படுதல் வேண்டும்.

*

இந்த வருடம் சென்னை புத்தக் கண்காட்சியில் வழக்கத்தை விட அதிகம் மக்கள் அலைமோதினார்கள். ஏறத்தாழ 750 கடைகள் இடம்பெற்றன. 13 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை பல பதிப்பகங்கள் விற்றுத் தள்ளியுள்ளன. வழக்கத்தை விட இந்த முறை அதிகளவு புதினங்களே அதிக வரவேற்பை பெற்றன, அவற்றுக்கு அடுத்த படியாக அறிவியல், தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள் போன்றவையும் இளைய தமிழர்களால் அதிகம் விரும்பப்பட்டன. 

இந்தியாவை எடுத்துக் கொண்டால் தாய்மொழி அறிவுக்கு நிகரான ஆங்கில அறிவையும் பலர் பெறத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் தாய்மொழிகளில் தரமிக்க புத்தகங்கள் கிடைக்காத பட்சத்தில் ஆங்கிலத்தை நாடுகின்றனர். குறிப்பாக தமிழ் மொழியில் வெளியாகும் புத்தகங்கள் பலவும் புதிய தலைமுறையினருக்கான ரசனை குறைந்தே வெளியாகுகின்றன. அவற்றில் எழுதுவோரும் ஒரு தலைமுறை முந்தியவர்களாகவே இருக்கின்றனர். தரமிக்கத் தகவல் செறிவுள்ள புத்தகங்கள் குறைவாகவே எழுதப்படுகின்றன. பெரும்பான்மையானவை நாவல்கள், கதைகள், கவிதைகள், பழம் இலக்கியங்கள் போன்றவைகளை இளம் தலைமுறையினர் பலர் விரும்புவதில்லை.

பலவும் ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்குப் புரிகின்ற மொழி நடையில் அமையாமல் மிகவும் கரடுமுரடான சொற்கள், மொழிப் பெயர்ப்புக்களால் அமைந்துள்ளன.

*

ஆங்கிலப் புத்தகங்களுக்கு வாசகர் வட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோரை விடவும் அதிகம். சேத்தன் பகத் போன்ற இளம் இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களை பரவலாக இந்தியர்கள் பலரும் வாசிக்கின்றனர். சில குறிப்பிட்ட ஆங்கில எழுத்தாளர்கள் அவர்களின் கலாச்சார மொழி பின்புலத்தைச் சேர்ந்தோரால் மட்டுமே வாசிக்கப்படுகின்றது. மேற்கத்திய எழுத்தாளர்களுக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் கிடைக்கின்றனர். இதனால் பல பிரசுரங்கள் அந்தந்த மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ப புத்தகங்களை வெளியிடுகின்றனர்.

ஆனால் தமிழை பொறுத்த வரை அதன் பெரும் வாசகர்கள் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன என்பதால் தரமற்ற புத்தகங்களை வாங்கவும் விரும்புவதில்லை. அதே போல தரமானவைகளை அதிக விலைக்கு வாங்கவும் முடிவதில்லை. தாய் மொழி புத்தகங்கள் விற்பனைச் சரிவுக்கு மக்கள் மத்தியில் தாய் மொழி அறிவு குறைந்துள்ளது எனக் கூறி விட முடியாது. ஏனெனில் என்றும் இல்லாத இணையத் தளங்கள், சமூக ஊடகங்கள் முதலானவற்றின் அளவுக்குத் தமிழ் உட்பட இந்திய மொழிகளில் எழுதுவோர் தொகை மிகுந்துள்ளது.

*

பல புதிய எழுத்தாளர்களை முன் வந்து ஊக்குவிக்கவும் பல பிரசுரங்கள் தயங்குகின்றன. காரணம் தமிழில் புத்தகங்களை வெளியிடும் பிரசுரங்கள் பலவும் சிறிய முதலீட்டில் இயங்கிக் கொண்டிருப்பவை, கொஞ்சம் அதிகம் நட்டம் ஏற்பட்டாலும் அவர்கள் பிரசுர தொழிலை விட்டு அகலும் சூழல் இருக்கின்றது. இதனால் தரமிக்க தகவல்களையும், வடிவமைப்புக்களையும் கொண்ட தமிழ் புத்தகங்கள் நியாயமான விலையில் கிடைப்பது எளிதான ஒன்றாக இல்லை. இதுவே பல இளம் வாசகர்களை ஆங்கிலப் புத்தகங்களை நோக்கி நகரச் செய்கின்றது.

தமிழ் புத்தகத் துறையில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம், தரமிக்க புத்தகங்களை நியாயமான விலையில் வெளியிட முடியும் என நான் கருதுகின்றேன். ஏனெனில் அவர்களால் சிறு நட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியும். அதே சமயம் புதிய எழுத்தாளர்களையும் கவலையின்றி ஊக்குவிக்க முடியும்.

பன்னாட்டுப் புத்தகங்கள் பலவும் தமிழில் மொழி பெயர்க்கப்படும் சூழல் எழும். இளைய தலைமுறையினர் பலரும் தமிழில் வாசிக்கின்றனர். அவர்கள் பலரும் கூட நல்ல வாங்கும் திறனை கொண்டுள்ளனர். அதே போலத் தமிழர்களின் ரசனை என்பது மாறிக் கொண்டே வருகின்றது. ஒவ்வொரு பிரிவினருக்கும், பகுதிகளில் வாழ்வோருக்கும் வித்தியாசமான ரசனைகள் பல உள்ளன.

Bloomsbury, Simon & Schuster, Hachette Book Publishing India போன்ற வெளிநாட்டு புத்தக நிறுவனங்கள் பலவும்  இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளன. அவர்கள் இங்கு நிறுவனங்களைத் தொடங்கிப் புத்தக வியாபாரங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஆங்கிலப் புத்தகம் மட்டுமன்றி நமது  இந்திய மொழிகளில் கூடப் புத்தகங்களை வெளியிடத் தொடங்கி உள்ளனர். Mills & Boon போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் புத்தகங்களை வெளியிடத் தொடங்கியுள்ளன.

கடந்த ஆண்டு அமேசான் நிறுவனம் தமிழ் புத்தகங்களை இணையம் மூலமாக விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. தமிழின் முன்னணி எழுத்தாளர்களது ஆக்கங்கள் உட்பட சுமார் 8000 தலைப்புகளில் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் இலக்கியம், புனைவு, தன்வரலாறு, வணிகம், தன்முன்னேற்ற, சமையல், குழந்தைகள் புத்தகங்கள் என பலவகையான புத்தங்கள் இடம்பெற்றிருந்தன. 

உள்நாட்டு நிறுவனங்களை விடவும் வெளிநாட்டு நிறுவனங்களால் குறைந்த விலையில் புத்தகங்களை விற்கும் சாத்தியம் மிகுதியாக உள்ளது.

*

இந்தியாவில் மாநில மொழி பேசுவோரின் தொகையானது பல ஐரோப்பிய மொழி பேசுவோரை விட அதிகமானதாகும். தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை என்பது 8 கோடிக்கும் அதிகமாக இருக்கின்றது.

அத்தோடு தமிழர்கள் இந்தியாவை தாண்டி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஐரோப்பா என வியாபித்தும் உள்ளனர்.

தாய்மொழியில் வாசிப்போருக்கான சந்தை என்றுமே பலமாகவே இருக்கின்றது. பலரும் என்றும் இல்லாத அளவுக்கு அவர்களின் தாய் மொழியில் வாசிக்கும் அறிவை பெற்று வருகின்றனர். இந்திய மொழி சந்தையானது ஜப்பான், ஜெர்மன் மொழிகளுக்கு இணையாகவும் இருக்கின்றது. வளரும் பொருளாதாரத்தில் பல நடுத்தர மக்களால் கூட நல்ல புத்தகங்களை வாங்கி வாசிக்கும் திறன் ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் ஆங்கிலப் புத்தகங்களை விட அசாமிய புத்தகங்கள் அதிகளவு விற்பனை ஆகின்றன. Bhupen Hazarika-வின் புத்தகங்கள் எந்தக் கடந்த 2012-யில் மட்டும் 37 அசாமிய மொழி புத்தகங்கள் அதிகளவு 10, 000 பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மலையாளம், மராத்தி, உருது போன்ற மொழிகளில் பல லட்சம் புத்தகங்கள் விற்றுத் தள்ளுகின்றன.

சில இந்திய மொழிகளில் அந்நிய பிரசுரங்களே புத்தகங்களையும் வெளியிடத் தொடங்கியுள்ளன என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இணைய வழி சந்தை வந்த பின் இந்தியாவில் இந்தி, மராத்தி, வங்காள மொழிப் புத்தகங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளன. Flipkart இணையதளத்தின் ஊடாக இந்தி, வங்காள மொழிப் புத்தகங்கள் 40 % அதிகம் விற்றுத் தள்ளியுள்ளன என மித்ரா & கோஸ் பிரசுரத்தின் இயக்குநர் இந்திராணி ராய் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய சூழலைப் பார்த்தோமானால் பல நாடுகளில் தாய் மொழிப் புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆகின்றன. ஆங்கிலத்தில் வெளியிடப்படும் பல புத்தகங்கள் கூட உடனுக்குடன் அவர்களது தாய் மொழியில் கிடைக்கின்றன. நீலி நிகாஸ் என்ற பெண் எழுத்தாளரின் புத்தகங்கள் 8 கோடி மக்களைக் கொண்ட ஜெர்மனியில் 50 லட்சம் பிரதிகள் விற்றுள்ளன. அவர் ஜெர்மன் மொழியிலேயே எழுதி வருகின்றார்.

*

வட அமெரிக்கா போன்ற நாடுகளில் அச்சில் ஏறும் புத்தகங்களின் விற்பனையை விட டிஜிட்டல் புத்தகங்கள் அதிகளவில் விரும்பி வாசிக்கப்படுகின்றன. கையடக்க செல்பேசிகள், மடிக் கணனிகள், கணனிகள், மின்-வாசிப்பான்கள் போன்றவற்றில் எங்கும், எப்போதும் நினைத்த நேரத்தில் எளிமையாக வாசிக்க இயலும் என்பதால் அச்சுப் புத்தங்களை விட டிஜிட்டல் புத்தகங்களை இளைய தலைமுறையினர் அதிகம் விரும்புகின்றனர். இந்தியாவிலும் வருங்காலத்தில் டிஜிட்டல் புத்தகங்களே அதிகம் வாசிக்கப்படும் சூழல் ஏற்படப் போகின்றது.

எழுத்தாளர் சஞ்சிவ் சப்லோக் எழுதிய Breaking Free Nehru என்ற புத்தகத்தை ஆந்தம் இந்தியா பிரசுரம் வெளியிட்டது. இந்தியாவில் எந்தவொரு புத்தகமும் 500 பிரதிகள் விற்றாலே சாதனையாகக் கருதப்படுகின்றது. ஆனால் சஞ்சிவ் சப்லோக் தமது புத்தகத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். எதிர்பாராத அளவுக்கு அவரது புத்தகங்கள் 24, 000 பிரதிகள் இணையத்தில் தரவிறக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆங்கில மொழி புத்தகங்கள் ஆங்கிலம் பேசப்படாத நாடுகளில் விற்கப்படுவதற்கு முக்கியக் காரணங்கள் அப் புத்தகங்கள் தத்தமது தாய் மொழிகளில் கிடைக்காமல் இருப்பதால் தான், போலாந்தில் Kindle E-reader -யில் பலரும் முதலில் போலாந்து மொழிப் புத்தகங்களைத் தேடுகின்றனர். அது கிடைக்காத பட்சத்திலேயே ஆங்கிலப் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்கின்றனர் என எழுத்தாளரும், மின் -நூல் ஆய்வாளருமான Piotr Kowalczyk கூறுகின்றார்.

ஜப்பானில் அதிகளவு விற்கப்பட்டுள்ள முதல் பத்து நூல்களும் ஜப்பானிய மொழியில் எழுந்தவை ஆகும். இவை யாவும் லட்சக் கணக்கான பிரதிகள் புத்தக வடிவிலும், மின்-நூல் வடிவிலும் விற்கப்பட்டுள்ளன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

தமிழிலும் சில புத்தகங்களை மின்-நூல் வடிவில் மின்-வாசிப்பானில் வெளியிடுவதன் மூலம் அவற்றைக் குறைந்த விலைக்கு வாங்கி வாசிக்கவும் இயலும் என்பதையும் பிரசுரங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் பல தமிழ் புத்தகங்கள் இன்னமும் கிண்டள் உட்பட மின்வாசிப்பானில் படிப்பதற்கு ஏதுவாக மின்னூல் வடிவத்தை பெறாமல் இருக்கின்றன. அமேசான் போன்ற நிறுவனங்கள் தமிழ் மின்னூல்களை வெளியிடாமல் இருக்கின்றன. 

*

வழக்கமாக எழுதும் பாணிகளில் இருந்து மாறுபட்டுப் புதுமையாக எழுத முற்பட வேண்டும். புனைவுகள் என்பதையும் கடந்து அறிவுக்கு மனதுக்கும் இன்பம் ஊட்டும் வகையிலான புத்தகங்களை எழுத முற்பட வேண்டும்.

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் ஆங்கிலப் புத்தகத்தை வாசித்தால் ஆங்கில அறிவு வளரும் என்ற நோக்கில் தாய் மொழி புத்தகங்கள் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலை நீடித்துக் கொண்டே போகும் போது தமிழில் வாசிப்பு பழக்கமும் குறைந்து கொண்டே போகும்.

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் நூலகங்களை நிறுவவும் அதில் சரி பாதியளவில் தமிழ் புத்தகங்களை வைக்கவும் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். அது மட்டுமின்றி நூலக வாசிப்பு நேரங்களை மாணவர்களுக்கு வழங்கவும் பள்ளிகளை நிர்பந்திக்க வேண்டும்.

அது போக, தமிழர்கள் முக்கிய வைபவங்கள், விழாக்களில் புத்தகங்களை பரிசளிக்கும் பழக்கங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தமிழ் வாசிப்பை அதிகரிக்கச் செய்ய இயலும். 

தமிழில் வாசிப்பதன் மூலம் ஒருவரின் மூளைத் திறனும், வாசிக்கும் திறனும் விருத்தியடைகின்றது. அதனையே பின்னர் ஆங்கிலத்திலும் வாசித்து ஒப்பிட்டு நோக்கும் போது, இரு மொழி திறனும், இரு மொழிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளையும் பிரித்து உணரவும் முடியும். இதனால் இரு மொழி அறிவும் நல்ல முறையில் வளரும் என்பதை பெற்றோர் - ஆசிரியப் பெருமக்கள் உணர வேண்டும்.

உலகில் எந்த மொழி பேசும் மக்களும் முதலில் தமது தாய் மொழியிலேயே வாசிக்கத் தொடங்குகின்றனர். தாய் மொழியில் கிடைக்காத பட்சத்தில் தான் பிற மொழி புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகின்றனர். தமிழில் வாசிப்பை அதிகப் படுத்த தமிழர்களாகிய நாம் பல மாறுதல்களைச் செய்து கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

- தமிழ் வண்ணன்

***
வாசிக்க »