உலகின் பார்வைக்கு இந்தியா ஒரே நாடு, ஆனால் உண்மையில் இந்தியா பல நாடுகளின் கூட்டமைப்பு என்றே சொல்ல வேண்டும். எவ்வாறு ஐரோப்பா ஒரே மொழி ஒரே மக்கள் ஒரே பண்பாடு இல்லையோ, இந்தியாவும் ஒரே மொழி ஒரே மக்கள் ஒரே பண்பாடு கொண்டது கிடையாது. 

ஆனால் சிந்து முதல் வங்கம் வரை, இமயம் முதல் குமரி வரை அடங்கிய இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவுகள் அடங்கிய இந்த தெற்காசிய துணைக் கண்டத்து மக்கள் அனைவரும் பொதுவில் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவர்கள் என்பதில் ஐயமில்லை. நமக்கிருக்கும் பொதுப் பெயர் மாநிற மக்கள் ( பிரவுன் ). 

ஆம் ! இந்தியாவுக்குள் வாழ்கின்ற நாம் நம்மை ஜாதி, மதம், மொழி, இனம், நிறம் என பாகுபாடு செய்து கொண்டு அதில் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டிருந்தாலும் நாம் அயலகத்தை அடைகின்ற போதும் நம்மை பிறர் ஒரே குடைக்குள் தான் வைத்துப் பார்க்கின்றனர். இந்தியாவுக்குள் நாம் எவ்வளவு வெளுப்பானவராக இருந்தாலும், கறுப்பானவராக இருந்தாலும் மேற்கு நாடுகளில் நமக்கு இருக்கும் ஒரே பெயர் மாநிற மக்கள் மட்டுமே. 

ஆனால், இதை எல்லாம் மறந்துவிட்டு இந்தியாவுக்குள் வாழ்கின்ற குறிப்பாக இந்தியாவின் வடக்கில் வாழ்வோர் தம்மை வெளுப்பானவர்கள் என்பதாக கருதிக் கொண்டு தென்னிந்தியர்கள் மீதான இன வன்மத்தை ஆண்டாண்டு காலமாக உமிழ்ந்து வருகின்றனர். அந்த வகையிலேயே அண்மையில் பாஜக எம்பி தருண் விஜய் வெளியிட்ட கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வடக்கில் ஆப்பிரிக்க மாணவர்கள் மீது நிகழ்த்தப்படும் இனவெறி தாக்குதல் குறித்த பேச்சில், இந்தியர்கள் ஒன்றும் இனவெறியர் இல்லை எனவும், கறுப்பினத்தோரை வெறுப்போர் இல்லை எனவும் கூறியதோடு நிற்காமல், தாம் இனவெறியர் என்றால் கறுப்பான தென்னிந்தியர்களோடு எப்படி இணக்கமாக வாழ் முடிகின்றது என்றார். இப்படி கூறியதற்கு நாம் உண்மையில் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனெனில் வடக்கில் வாழ்வோரது பொதுப்புத்தியை தான் அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆம் ! வடக்கில் வாழ்வோர் தாம் எவ்வளவு கறுப்பாக இருந்தால் கூட தம்மை விட தென்னிந்தியர்கள் என்னவோ கறுப்பானவர்கள் என்பது போல, தம்மை என்னவோ ஐரோப்பிய மக்களின்  நிறம் கொண்டோர் என கருதிக் கொண்டிருக்கின்றனர். நாமும் பல காலம் தென்னிந்தியர்கள் தான் கறுமையானவர்கள், வடக்கில் உள்ளோர் எல்லாரும் வெளுப்பானர்வர்கள் என்ற எண்ணத்தில் தான் வாழ்ந்திருந்தோம்.

ஆனால், இந்தியா முழுவதும் பயணம் செய்து பல வித மக்களை சந்தித்த அனுபவம் உடைய எவருக்குமே மிக எளிதில் ஒரு விசயத்தை தெரிந்து வைத்திருக்கும் வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களில் எல்லா பகுதிகளிலும் எல்லா நிற மக்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். நான் பார்த்த வரையில் வங்காளம், பிகார், ஜார்க்காண்டு, ஒரிசா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் வாழ்கின்ற பெரும்பான்மையானோர் கருமையானவர்கள் தான். 

அது மட்டுமின்றி மராத்தியம், குசராத்து மாநிலத்தில் கூட பெரும்பான்மை மக்கள் தென்னிந்தியர்களை ஒத்த நிறம் உருவம் கொண்டோராகவே காணப்படுகின்றனர். சரி எஞ்சிய பகுதிகளான உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசத்தில் வாழ்வோர் அனைவரும் வெள்ளையானவர்களோ என கருதலாம் என்றால் அதுவும் இல்லை. இந்த மாநிலங்களில் பாதிக்கு பாதியளவு மக்கள் கறுப்பானவர்களே. ஆக, கஷ்மீர், மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தான் பெரும்பங்கானோர் வெள்ளை நிறமுடையோராக இருக்கின்றனர். 

அப்படி இருக்க ஏன் இந்த தருண் விஜய் உட்பட பல வடக்கத்திய மக்கள் தென்னிந்தியர்கள் மட்டுமே கறுப்பானவர்கள் என பேசுகின்றனர். அப்படி தெற்கில் உள்ளோர் எல்லோரும் கறுப்பானவர்களா என்ன? உண்மையில் ஏனைய இந்தியாவை போல தெற்கிலும் அனைத்து ஜாதி, மதம், மொழி, இன மக்களிலும் வெளுத்த நிறமுடையோர் வாழ்கின்றனர். 

அத்தோடு தெற்கில் பிராமணர் மட்டுமே வெளுப்பானவர் மற்ற ஜாதியினர் கறுப்பானவர் என்ற எண்ணமும் இருக்கின்றது. ஆனால், தெற்கில் வாழ்கின்ற பிராமணர்களிலேயே கூட கறுப்பானவர்கள் அதிகம் இருக்கின்றனர். பிராமணரல்லாத திராவிட ஜாதியினர் மற்றும் தலித்களில் கூட வெளுப்பானவர்கள் அதிகம் இருக்கின்றனர். குறிப்பாக மலை வாழ் மக்களான தோடர், கோத்தர், படகர், குடவர் தொடங்கி பல இன மக்களில் வெளுமையான நிறமுடையோர் அதிகமாகவே காணப்படுகின்றனர். இந்தியா முழுவதும் வாழ்கின்ற ஒரு சில பழங்குடி மக்களைத் தவிர ஏனைய பொது சமூகம் முழுவதிலும் கறுப்பு, வெளுப்பு, மாநிறம் என பல வண்ணத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் கூட பலரும் ஒருவர் கறுப்பாகவும், மற்றொருவர் வெளுப்பாகவும், பலர் மாநிறமாகவும் இருப்பதைக் காணலாம். இது தான் எதார்த்தம். அப்படியிருக்க இந்த வடக்கத்தியர்கள் ஏனோ தென்னிந்தியர்கள் மட்டும் கறுப்பு என்ற கருத்து மாக்ஸ் முல்லர் போன்ற மேலைநாட்டு ஆரிய சித்தாந்தவாதிகளால் வளர்க்கப்பட்ட இந்துத்வா கோஷ்டிகளின் வாதம் சிரிப்பை வரவழைக்கின்றது. 

வடக்கில் பஞ்சாப், இமாச்சலம், தில்லியில் வெளுத்த நிறமுடையோர் சற்றே அதிகம் என்றால் தெற்கில் மங்களூர், கொங்கண், மலபார், குடகு, நீலகிரியில் வெளுத்த நிறமுடையோர் அதிகம். தெற்கில் கறுத்த நிறமுடையோர் ஏனைய பகுதியில் அதிகம் எனில் வடக்கில் பிகார், வங்காளம், ஒரிசா போன்ற பகுதியில் கறுத்த நிறமுடையோர் அதிகம். ஆக மொத்தம், வடக்கிலும் சரி தெற்கிலும் சரி அனைத்து வண்ண மக்களும் நிகராகவே இருக்கின்றனர். ஆதி இந்தியர்களான திராவிடர்கள் கருத்த நிறமுடையோர் தான் என்றாலும், காலப் போக்கில் மத்திய கிழக்கிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் குடியேறிய பல மக்கள் திராவிடர்களோடு கலந்து ஒட்டு மொத்த இந்திய மக்களும் கலப்பினமாகவே இருக்கின்றனர். வட இந்தியாவில் வாழ்கின்ற இடைநிலை சாதி மக்கள் அனைவருமே மாநிறமாகவும், கருநிறமாகவும் தான் காணப்படுகின்றனர். இவர்கள் யாவரும் ஒரு காலத்தில் வடக்கில் வாழ்ந்திருந்த திராவிட மக்களின் வழிதோன்றல்கள் என்பதில் ஐயமில்லை. தெற்கிலோ வடக்கிலோ கிழக்கிலோ மேற்கிலோ இந்திய கண்டத்தின் அனைத்து பகுதிகளில் வாழ்கின்ற கருப்பு வண்ண மக்கள் தான் உண்மையான திராவிட இன மக்கள் ஆவார்கள்.

காலப்போக்கில் வடக்கில் உள்ளோர் தமது பாரம்பரிய மொழி, பண்பாட்டை கைவிட்டு வந்தேறிய பாரசீகர்களின் ( பிரமாணர் ) மொழி, பண்பாட்டை பின்பற்றி தமது திராவிட மொழி பண்பாட்டை நாளடைவில் கைவிட்டு விட்டனர். தெற்கில் உள்ளோர் தமது பூர்விக மொழி, பண்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். இது தான் நமக்குள்ள வேறுபாடு. இன்று தென்னிந்தியர்கள் தமக்கே உரிய தனித்துவமான பண்பாட்டையும், மொழியையும், வாழ்வியல் முறையையும் கைக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வடக்கிற்கும் தெற்கிற்குமான வேறுபாடு நிற வேறுபாடு கிடையாது மாறாக பண்பாட்டு வேறுபாடு என்பதை வடக்கத்திய வெள்ளைக்காரர்கள் உணரட்டும். இதை வெறும் வள்ளுவரின் சிலையை உறரித்துவாரில் வைத்து விட்டு தென்னிந்தியர்கள் மீதான இனவெறியை காட்டி மூக்குடைந்து போன தருண் விஜய் போன்றோருக்கு எடுத்துக் கூறினால் சால நன்று. 
வாசிக்க »

கடந்த மூன்று வாரங்களாக, தமிழ் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தஞ்சாவூர், திருச்சிராபள்ளி மாவட்ட விவசாயிகள் ஜந்தர் மந்தரில் ( புது தில்லி ) போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ் நாட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பிரச்சனைகளை வெளிப்படுத்த மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகளை வைத்து போராட்டம் நடத்துகின்றனர்.

தமிழ் நாட்டில் நிலவி வருகிற மோசமான சூழ்நிலையால் தற்கொலை பண்ணி கொண்ட விவசாயிகளோட மண்டை ஓடுகள் தான் அது என அவர்கள் சொன்னார்கள். கடந்த நூறாண்டில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள கடும் வறட்சியாலும், கூடவே கடன் சுமைகளைத் தாங்க முடியாமலும் ஒரே மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 106-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

மத்திய அரசாங்கம் உடனடி வறட்சி நிவாரணமாக 40, 000 கோடி ரூபாயை தர வேண்டும் எனவும், தமது உற்பத்திக்கு ஏற்ற நல்ல விலையை அறிவிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோருகின்றனர். சொல்லப் போனால் வடக்கு மாநிலத்தின் ( உத்தர பிரதேசம் ) புதிய முதலமைச்சர் யோகி ஆதித்தியநாதர் அம் மாநில விவசாயிகளின் 36, 359 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது, இந்த விவசாயிகளின் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது. 

இங்கே நம் மனதில் எழும் கேள்வி என்னவென்றால் வடக்கு மாநில விவசாயிகளுக்கு உதவுகின்ற பாஜக அரசாங்கம் ஏன் தமிழ் நாட்டு விவசாயிகளிடம் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்கின்றது. நடுவண் அரசோ மிக எளிதாக கடன் சுமையை தள்ளுபடி செய்ய வேண்டியது மாநில அரசின் அதிகாரத்துக்குள் வருகின்றது, ஆகவே அது மாநில அரசின் கடமை என கையை விரிக்கின்றது.  

ஆனால், ஒவ்வொரு பச்சட்டிலும் நடுவண் அரசு கொண்டு வருகின்ற விவசாயக் கொள்கைகள் மாநிலங்கள் மீதும், இந்திய விவசாயிகள் மீதும் அதிக கடன் சுமையை ஏற்றிக் கொண்டே போகின்றது.

விவசாய செய்கையில் அதிகரித்து வருகின்ற உற்பத்தி செல்வுகள் தான் கடன் சுமைக்கு முதல் காரணமாகும். ஏனெனில் விதைகள், உரங்கள், உயிர்க்கொல்லி மருந்துகள், எந்திரங்கள் போன்றவற்றை சார்ந்தே விவசாயம் நடைபெறும் சூழல் எழுந்துள்ளது. கூடவே விவசாய உற்பத்து பொருட்களின் விலையும் சரிந்து வருகின்றது. விவசாயிகளுக்கு வருவாயை விட உற்பத்தி செலவு அதிகமாக இருக்கின்றது. இதனால் எதிர்மறை பொருளாதார வட்டத்துக்குள் விவசாயிகள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இந்த கடன் பிரச்சனையானது பசுமை புரட்சி என்ற பெயரில் கெமிக்கல் உரங்களை கொண்டு வந்து சேர்த்ததிலிருந்து தொடங்குகியது. பசுமை புரட்சி காலக் கட்டத்தில் ஏற்பட்ட கடன் சுமையானது பொதுக் கடனாக இருந்தது. விவசாய அமைப்புகள் வருவாய் தரக் கூடிய விலைகளை அறிவிக்க கோரிக்கை வைத்தனர். அதனால், கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பதை கடைப்பிடிக்கத் தொடங்கியது அரசு. 

ஆனால், உலக மயமாதல் மற்றும் புதிய தாராளமய சீர்த்திருத்தக் கொள்கைகள் வந்த போது விவசாயக் கொள்கைகளை தீர்மானிப்பவர்களாக பன்னாட்டு கார்ப்பிரேட்டு நிறுவனங்கள் மாறின. இதனால் உற்பத்தி செலவுகள் அதிகமானது, விவசாயப் பொருட்களின் விலை வீழ்ச்சிக் கண்டது. 

காங்கூனில் ( மெக்சிக்கோ ) நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட கணிப்பின் பிரகாரம் விவசாய பொருட்களின் விலை வீழ்ச்சியால் இந்திய விவசாயிகள் ஆண்டுக்கு ஏறத்தாழ 250 கோடி அமெரிக்க டாலர்களை இழந்து வருகின்றனர்.

அது ஒரு பக்கம் என்றால், அமெரிக்காவைச் சேர்ந்த வேளாண், வேளான் வேதிப் பொருள் நிறுவனமான மான்சாண்டோ அறிமுகம் செய்த பீட்டி பருத்தி விதை வழக்கு தற்போது வழக்கு மன்றத்தில் இருக்கின்றது. இந்த  நிறுவனம் அறிமுகம் செய்த மரபணு மாற்றப்பட்ட பீட்டி பருத்தி விதையை நம்பி வாங்கி பயிரிட்டதால் தெக்கண பகுதிகளைச் சேர்ந்த எண்ணற்ற விவசாயிகள் நஷ்டமடைந்தனர். 1995-யிலிருந்து தற்கொலை செய்து கொண்ட ஏறத்தாழ 3,10,000 விவசாயிகளில் நிறையப் பேர் பருத்தி பயிரையே நம்பி வாழ்ந்த தெக்கண (மராத்திய மாநிலத்தின் விதர்பா, மராத்தவாடா, தெலங்கானா, மற்றும் கருநாட்டு மாநில தாரவாடா) விவசாயிகளே ஆவார்கள். ஆனால், மான்சாண்டோ நிறுவனமோ 5, 000 கோடிக்கும் அதிகமான வருவாயை இந்தியாவிலிருந்து எடுத்துக் கொண்டு போய் விட்டது. இறுதியில் கடனில் தத்தளித்து என்னவோ இந்திய விவசாயிகள் தான்.

அதே சமயம், இந்திய விவசாயத்தின் மீதான பன்னாட்டு விதை மற்றும் கெமிக்கல் நிறுவனங்களின் தாக்குதல் வலுத்துக் கொண்டே வருகின்றது. இதற்கு பெருந்துணையாக இருப்பதோ புதிய தாராளமய பொருளாதார கொள்கைளே. காலத்துக்கும் நிலைத்து நிற்கக் கூடிய குறைந்த செலவிலான வளங்குன்றா (Sustainable) விவசாய முறைகளை ஊக்குவிக்காமல், விவசாயிகளுக்கு அதிக கடன்களை வழங்கும் திட்டங்களையே கொண்டு வருகின்றது. 2017-18 ஆண்டுக்கான பச்சட்டில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய்களை விவசாயக் கடனாக அறிவித்திருக்கின்றது இந்தியாவை ஆட்சி செய்து வரும் பாஜக அரசாங்கம். இது கடந்த பட்சட்டில் அறிவிக்கப்பட்ட 90,000 கோடி ரூபாயிலிருந்து அதிகமாக்கப்பட்டுள்ளது. 

நிச்சயம் விவசாயிகளுக்கு கடன் உதவிகள் தேவைப்படுகின்றன. ஆனால், அதே சமயம் அதிக உற்பத்தி செலவுகளைத் திணித்து அவர்களை கடன் வலைக்குள் தள்ளிவிடுவதில் என்ன நியாயம்? அதே மாதிரி, விவசாயிகளுக்கு தாம் உற்பத்தி செய்கின்ற பொருட்களுக்கு நியாயமான சரியான விலையும் தேவைப்படுகின்றது. நீடித்து நிலைத்திருக்கக் கூடிய வளங்குன்றா முறையிலான சுற்றுச்சூழல் சார்ந்த விவசாய செய்முறைகளை விவசாயிகள் மேற்கொள்ளவும், மண்ணின் வளத்தை பெருக்கவும், மாறி வரும் காலநிலைக்கும், வறட்சிக்கும் ஈடுகொடுக்கும் வகையிலான பயிர்முறைகளை செய்யவும், ஒவ்வொரு ஏக்கருக்கும் அதிக சத்து நிறைந்த, அதிக வருவாயைத் தரக்கூடிய வேளாண்மை முறைகளை கைக்கொள்ளவும் அரசு சார்ந்த பொது திட்டங்கள் உதவ வேண்டும்.

விவசாயிகளை கடன் சுமைகளிலிருந்து மீட்டு தரக் கூடிய வகையில் பொது முதலீடுகளுக்கு என எந்தவொரு பணத்தையும் பட்சட்டில் ஒதுக்கவில்லை இவர்கள். கடந்த 30 ஆண்டுகளாக நவதானியா என்றொரு அரசு சார்ப்பற்ற அமைப்பு உயிர் பன்முகத் தன்மையை காக்கவும், சூழலியல் சார்ந்த இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தவும், செலவே இல்லாத வகையில் விவசாயம் செய்து நல்ல சத்தான உணவுப் பொருட்களை இரண்டு மடங்கு உற்பத்தி செய்து, நாலு மடங்கு விவசாயிகளின் வருவாயைப் பெருக்க வல்ல விவசாய முறைகளை பரவலாக்கி வருகின்றது. 

ஒரு தனி நிறுவனத்தால் இதைச் செய்ய முடிகின்றது, ஆனால் அரசாங்கமோ விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக அதிகரிப்போம் என கூவுகின்ற போதும், அது விவசாயிகளின் ஒட்டு மொத்த வருவாயா, அல்லது நிகர வருவாயா என்பதில் கள்ள மௌனம் காட்டுகின்றது. ஒட்டு மொத்த வருவாய் அதிகரித்தல் என்பது விவசாயி அதிக லாபம் தரும் பணப் பயிரை அதிக கடனைப் பெற்று, தமது குடும்பத்தின் உணவு மற்றும் சத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நடத்தப்படும் ஒரு முறையாகும். இவ்வாறு செய்யப் படுகின்ற விவசாயத்தில் செலவையும் வருவாயையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது தனிப்பட்ட நிகர வருவாய் குறைவானதாகவே இருக்கும். பல சமயம், அதிக கடன் சுமையை விவசாயிகளின் தலையில் அது ஏற்றி வைத்து வைத்துவிடுவதோடு, தனிப்பட்ட நிகர வருவாய் செலவை விட குறைவானதாக இருக்கும். அப்படிப்பட்ட நிலை தான் கடன் பிரச்சனைக்கு மூல காரணமாக அமைவதோடு, விவசாயிகளின் தற்கொலைக்கு முதல் காரணமாகவும் இருக்கின்றது.

இந்த நிலையில், ஓரளவு கடன் தள்ளுபடி மட்டும் செய்வது என்பது ஓட்டை வாளியிலிருந்து வழியும் நீரை துடைத்துக் கொண்டிருப்பது போல தான் இருக்கும். நமது இன்றைய விவசாயம் சீரழிந்து போயுள்ளது. ஏனெனில், அது மண்ணின் நலத்தைப் பற்றியோ, உயிர் பன்முகத்தன்மை பற்றியோ, நீராதாரத்தைப் பற்றியோ, நமது சிறு விவசாயிகளின் நிலைத்த வாழ்வாதரத்தைப் பற்றியோ சிறிதும் கவலைப்படுவதாக இல்லை. மாறாக, அது விதைகளை விற்கும், கெமிக்கல் உரங்களை விற்கும் பெரு நிறுவனங்களின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது.

எங்கெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகள் நமது உணவு மற்றும் விவசாயத்திற்குள் நுழைகின்றதோ அங்கெல்லாம் கடன் சுமை அதிகரிப்பது நிகழ்ந்து வருவதை அனைத்து வித ஆய்வுகளும் தெளிவுப்படுத்துகின்றன.

மாற்றந்தரும் இந்திய தேசிய நிறுவனம் ( நிதி ஆயோக் ) என்கிற விவசாய நலன் காக்கும் மத்திய அரசு நிறுவனத்தை இனி கார்ப்பிரேடு நிறுவனங்களின் ஆலோசகர்களே நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நம் விவசாயிகளை மேலும் கடன் சுமைக்குள் தள்ளப் போகின்றது. 

விவசாயிகளைச் சுரண்டக் கூடிய புதிய வகை தண்டல் முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு விவசாயியும் பன்னாட்டு வலைப்பின்னலுக்குள் பிணைக்கப்படுவார்கள். இந்த வலைப்பின்னல் மூலமாகவே ஒவ்வொரு விவசாயியும் விதைகளைப் பெறுவது முதல் சந்தைப்படுத்தல் வரை பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகின்றது.

வேளாண் சூழலியல், மண் பாதுகாப்பு, நீராதார மேம்பாடு, புத்துயிரூட்டல், இனப்பெருக்கம் என விவசாயம் சார்ந்த பல துறைகளில் நமக்கு மிகச் சிறந்த பாரம்பரிய அறிவு இருக்கின்றது. அதனால் தான் நம் நாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நெல் ரகங்களையும், 1500-ம் அதிகமான கோதுமை, மா, வாழை, பருப்பு வகைகள், மற்றும் கால்நடை ரகங்களை நம்மால் உருவாக்க முடிந்திருக்கின்றது.

ஆனால் காப்பிரேட்டு நிறுவனங்களோ நமது உணவாதாரத்தை புதிய காலனித்துவ முறைகள் மூலம், நமது அரசாங்களின் துணையோடு கொள்ளையடித்து வருகின்றன. அதற்காகவே புதிது புதிதாக கடன் முறைகளை ஏற்படுத்தி வருகின்றன.

மாண்சாண்டோ நிறுவனம் உலகின் மிகப் பெரிய காலநிலை தகவல் நிறுவனத்தையும், மண் சார்ந்த ஆய்வு நிறுவனத்தையும் வாங்கியிருக்கின்றது. சிலிக்கான வேலியில் உள்ள பல முன்னணி உளவு மென்பொருள் () நிறுவனங்களை வாங்கி, அவற்றை நவீன விவசாய கருவிகளில் பொருத்தி வருகின்றது. இதன் மூலம் விவசாயம் சார்ந்த தகவல்களைத் திருடுவதோடு, அதை மேம்படுத்தி மீண்டும் அந்த விவசாயிகளுக்கே விற்கவும் திட்டம் தீட்டு வருகின்றது.

காலநிலை சார்ந்த தகவல்களையும், காப்பீட்டு திட்டங்களையும் கொண்டு விவசாயிகளிடமிருந்து ஆண்டுக்கு மூன்று லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை லாபம் பார்க்க அது திட்டமிட்டு வருகின்றது. இந்த லாபம் எங்கிருந்து வரும் என்றால் விவசாயம் பொய்ப்பதிலிருந்தும், விவசாயக் கடன்களிலிருந்தும், விவசாயிகள் தற்கொலை செய்வதிலிருந்தும் தான் வரப் போகின்றது.

திருட்டுத் தனமாக நம் விவசாயிகளை விதைகள் விற்கும், கெமிக்கல் உரங்களை விற்கும், காப்பீட்டு திட்டங்களை விற்கும், காலநிலை தகவல்களை விற்கும் பன்னாட்டு பெருநிறுவங்களிடம் சிக்க வைப்பதன் மூலம் புதிய காலனித்துவத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த காலனித்துவம் மூலமாக நமது உலகமும், நமது சுதந்திரமும் முற்றாக நசுக்கப்பட்டு அழிக்கப்படும் என்பதில் துளி சந்தேகம் இல்லை.

- வந்தனா சிவா [ தமிழில் : திரு. மின் வாசகம் ]

வாசிக்க »


கடந்த வருடம் கனடாவின் குபெக்கு மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற வால்மோரின் வேல்முருகன் ஆலயத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். கனடாவின் பல பாகங்களில் வாழ்கின்ற தமிழர்களும், அமெரிக்காவிலிருந்தும் கூட அங்கே வந்திருந்தனர். கனடாவின் குபெக்கு மாநிலத்தில் மலைகள் நிரம்பிய தமிழர்களோ, வேறு இந்தியர்களோ வசிக்காத ஒரு சின்னஞ்சிறிய ஊரான வால்மோரினில் தான் இந்தக் கோவில் அமைந்திருக்கின்றது. இந்தக் கோவிலையும், அதற்குப் பக்கத்திலிருக்கும் தியான மையத்தையும் பெரும்பாலும் பிரஞ்சு மொழி பேசும் வெள்ளையர்களே நிர்மாணித்து வருகின்றனர். ஒரு சில தமிழ் குருக்கள்மார்கள் அங்கே தங்கியிருந்து கோவில் பூசைகளை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜூன்-ஜூலை மாதங்களில் அங்கே திருவிழா நடப்பது வழக்கம். அப்போது மட்டும் ஆயிரக் கணக்கான தமிழர்கள் டொராண்டோ, மொன்றியல், நியுயார்க் போன்ற பகுதிகளிலிருந்து அங்கே போய் சாமி கும்பிட்டு வருவர். அப்படியாக நானும் அங்கே செல்ல நேரிட்டது.

டொராண்டோவிலிருந்து பயணித்த நாங்கள் ஒண்டாரியோ மாநில எல்லையைக் கடந்து குபெக்கு மாநில எல்லைக்குள் நுழைந்த பின்னர் தான் புரிந்தது, என்ன தான் கனடா ஒரே நாடு என்றாலும், ஒரே நாட்டுக்குள் வேறொரு நாடும் இருக்கின்றது அது தான் முற்றிலும் பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற குபெக்கு என்பது. ஏனெனில் குபெக்கு மாநிலத்தின் அனைத்து நெடுஞ்சாலை பலகைகளும் முற்றாக பிரஞ்சு மொழியிலேயே இருந்தது. துளிக்கும் எங்கும் ஆங்கிலம் இல்லை. இத்தனைக்கும் கனடாவின் இரு ஆட்சி மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. அது மட்டுமின்றி கனடாவின் பெரும்பான்மை மக்கள் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்கள்.

கனடாவின் பெரும்பான்மை மக்கள் ஆங்கிலம் பேசினாலும், கனடாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆங்கிலம் இருந்தாலும் கூட, பிரெஞ்சு தெரியாத வாகன ஓட்டுநர்கள் பலர் நெடுஞ்சாலைகளை பயன்படுத்துகின்ற போதிலும் கனடாவின் குபெக்கு மாநிலத்தின் நெடுஞ்சாலைகளில் பிரஞ்சு பலகைகள் மட்டுமே காணப்படுகின்றன. தமிழர்களாகிய நாம் குபெக்கின் பிரஞ்சு மக்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் இருக்கின்றன.

தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் எழுதுவதாகச் செய்திகள் வந்தன. இதற்குத் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பும் கிளம்பியது. எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக (இ)டிவிட்டர் தளத்தில் #stophindichauvinism என்ற ஆச்சடுக்கு மூலமாகப் பலரும் தம் விசனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த (இ)டிவிட்டர் போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமின்றி கன்னடர்களும் அதிகளவில் பங்கெடுத்து கருநாடு மாநிலத்தில் இந்தி மொழி திணிப்பு எவ்வாறு எல்லாம் நடந்தேறி வருகின்றது என்கிற தமது கோபத்தைக் கொட்டித் தீர்த்தனர். கன்னடர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள், ஒடியர்கள், மராட்டியர், பிக்காரிகள், வங்காளிகள் எனப் பலரும் கூடப் பங்கெடுத்திருந்தனர்.

நரேந்திர மோதி ஆட்சியேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் இந்தி திணிப்பு அரேங்கேறி வருகின்றதை நாம் அறிவோம். கடந்த 2015-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று இதே போன்றொரு (இ)டிவிட்டர் போராட்டம் நடத்தப்பட்டதோடு இந்தியா முழுவதுமிருந்து வந்த மொழிப் போராளிகள் ஒரு மாநாட்டையும் சென்னையில் நடத்தியிருந்தனர். ஏற்கனவே முகநூல் பக்கத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான ஒரு அமைப்பு செயல்பட்டு வருவதோடு, இந்தியா முழுவதும் உள்ள இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாதோர் தீவிரமாக கருத்துப் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.

சுமார் ஏழாண்டு வெளிநாட்டில் வசித்து விட்டுக் கடந்த 2014-யில் தமிழகம் திரும்பிய போது, நான் ஒரு விடயத்தை நன்கு கவனித்தேன். இந்த ஏழாண்டுகளில் பொருளாதார நிலையில் நாம் வளர்ந்திருந்தாலும் கூட, நம்மை அறியாமலேயே இந்தி திணிப்பு அரங்கேறி வருகின்றது. ஆம் ! இந்த ஏழாண்டு இடைவெளியில் எல்லா இடங்களிலும் சந்தடி சாக்கில் இந்தி நுழைந்திருக்கின்றது. முன்பு எல்லாம் வெறும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்த நிறுவனங்களில் மட்டுமே இந்தி காணப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தனியார் நிறுவனங்கள் கூட இந்தியைத் திணித்து வருகின்றன. வங்கிகளின் ஏட்டியம்கள் (ATM), செய்தித் தாள்கள், விளம்பரங்கள், பேரங்காடிகளின் அறிவிப்பு பலகைகள், அவ்வளவு ஏன் திரையரங்குகளில் உள்ள கழிப்பறை வரையில் இந்தி நுழைத்திருக்கின்றது. இவற்றைத் தமிழகத்தில் வாழும் எத்தனைப் பேர் கவனிக்கின்றார்கள் எனத் தெரியவில்லை.

சென்னையிலிருந்து வெளியாகும் தமிழ் செய்தித்தாளில் இந்தியில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. விருகம்பாக்கத்திலிருந்த திரையரங்கின் கழிப்பறையில் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே இருந்தது. வளசரவாக்கத்தில் ஒரு மளிகைக் கடை வாசலில் இருந்த சோப்பு விளம்பரம் ஆங்கில எழுத்திலான இந்தியில் இருந்தது. இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.

மத்திய அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாக இந்தி மொழியைத் திணித்து வருகின்றது. மத்திய அரசில் பணியாற்றுவோர் இந்தியில் கையெழுத்திடவும், இந்தி மொழியில் பேசவும், இந்தி மொழியில் சமூக ஊட்டங்களை பயன்படுத்தவும் வற்புறுத்தி வருகின்றது. மத்திய அரசின் கல்வி வாரிய பள்ளிகளில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் படிக்க வற்புறுத்தப்படுகின்றனர். அவ்வளவு ஏன் பல பள்ளிகள் சமஸ்கிருத வாரங்கள் கூட கொண்டாடின.

இந்தி மொழியை எப்படியாவது முழு மூச்சுடன் திணித்துவிட மத்திய அரசு முயன்று வருகின்றது. ஐநா சபையில் இந்தியை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கவும், இந்தி மொழியைப் பரப்ப கோடிக் கணக்கான நம் வரிப் பணத்தைக் கொட்டிக் கொடுக்கவும் அதனால் முடிகின்றது. ஆனால், மற்ற இந்திய மொழிகளை நசுக்கவும், அழிக்கவும் அது நினைக்கின்றது.

இந்தியை மூன்றாம் மொழிப் பாடமாக எடுத்துக் கொண்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றது. பஞ்சாபில், குஜராத்தில், பீகாரில், மராட்டியத்தில் இளைய தலைமுறையினர் இந்தி மட்டுமே பேசும் சூழல் ஏற்பட்டுள்ளது. வங்காளத்தில், ஒடிசாவில் இந்தி சொற்கள் அதிகம் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் தெலுங்கு மொழி இல்லாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. கருநாடகத்தில் இந்தி மொழியை வளர்க்கவும், கன்னட மொழியைப் புறந்தள்ளவும் சகல வசதிகளுடன் வேலைகள் அரேங்கேறி வருகின்றன.

இந்தி மொழியின் அசுரப் பசிக்கு தடையாக இருப்பது நம் தமிழகம் மட்டும் தான். அதனால் தான் என்னவோ, தமிழகத்தின் மொழி மற்றும் கல்வி ஆகியவற்றை நிர்மூலமாக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அண்மையில் வெளியான ஓர் ஆய்வில் இந்தியாவில் தலைசிறந்த 100 கல்லூரிகளில் 37 தமிழகத்தில் மட்டுமே உள்ளது. தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் 51 சிறந்த கல்லூரிகள் இடம்பெறுகின்றன. கூடவே ஆந்திர பிரதேசத்தின் 11-யைம் சேர்த்தால் இந்தியாவின் மூன்றில் இரண்டு சிறந்த கல்வி நிலையங்கள் முன்னாள் மதராஸ் மாநிலத்தில் அமைந்திருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்,

இன்று தமிழ் மாணவர்கள் அதிகளவில் தேசிய கல்வி நிலையங்களில் இடம் பிடித்து வருகின்றனர். மேலும் பல தமிழர்கள் அமெரிக்கா உட்படப் பல நாடுகளில் தலை சிறந்த பணிகளில் இருக்கின்றனர். உதாரணத்துக்கு கூகிளின் சுந்தர் பிச்சை தொடங்கி பலரும் உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டியிருக்கின்றனர். செவ்வாய் கோளிற்கு விண்கலம் ஏவிய ஆராய்ச்சிக் குழுவில் இருந்த சுப்பையா அருணன் உட்படப் பல விஞ்ஞானிகள் தமிழர்களே. வெற்றிகரமாக அணு ஆயுத சோதனை நடத்திக் காட்டிய நம் அப்துல் கலாம் கூட தமிழரே. இவர்கள் என்ன இந்தி படித்தா சாதித்துக் காட்டினார்கள். இவர்கள் எல்லாம் பள்ளிப் படிப்பையே தமிழில் மட்டுமே படித்து முன்னேறியவர்கள்.

இன்று இந்தியை நம் தொண்டையில் திணிப்பதன் மூலம் நம்மையும் மற்றொரு பீகாராக, ஜார்க்கண்டாக மாற்றவே முயல்கின்றார்கள். தமது தாய்மொழியான போஜ்பூரியையும், சாந்தாளியையும் தொலைத்துவிட்டு இந்தி திணிக்கப்பட்டதால் வளர்ச்சியடையாமல் அவர்கள் யாவரும் தென்னிந்தியாவிற்கே பிழைக்க வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

மாறாக 1937-யில் முதன் முறையாக இந்தி திணிக்கப்பட்ட போது பெரியார் உட்பட பல தலைவர்கள் அதை எதிர்த்தனர். மீண்டும் 1963-1967 காலப் பகுதியில் ஆங்கிலத்தை நீக்கிவிட நடந்த முயற்சியை முறியடித்து, இந்தி திணிப்பை விரட்டியடித்து இருமொழி கொள்கையாள் தமிழகம் வளர்ச்சி கண்டது. அன்று அறிஞர் அண்ணாவின் நேர் கொண்ட சிந்தனையாலும், வழிகாட்டலாலும் ஆங்கிலம் இந்தியாவில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த ஆங்கிலமே இந்தியாவை இன்று உலக அரங்கில் உயர்த்தி இருக்கின்றது. அன்றே ஆங்கிலம் நீக்கப்பட்டிருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் உபி, பிகார் போல நாறியிருக்கும்.

அன்று தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை விலக்கியதால், தமிழர்களுக்குத் தேவையற்ற சுமை நீங்கியதோடு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் நகர்ந்தது. தமிழ் மொழியின் இருப்பும் நிலைநாட்டப்பட்டது. மாறாக மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டதால் இன்று கருநாடகம் இந்தி பேசுவோரது ஆதிக்கத்தில் தள்ளாடுகின்றது. இந்தி மொழி பேசுவோரே பெங்களூரின் பெரும்பான்மை வேலைகளை பறித்துக் கொண்டுள்ளனர். அத்தோடு நிற்காமல் கன்னட மக்கள் மீதும் இந்தி மொழியைத் திணித்து வருகின்றனர். பெங்களூரில் மெட்ரோ ஓடியபோது இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்புகள் வந்த போது கன்னட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கு எல்லாம் காரணம் கருநாடத்திற்கு என்றொரு மாநில கட்சி இல்லாமல் போனதும், மும்மொழி கொள்கைகளை ஏற்றுக் கொண்டதுமே ஆகும்.

அதே சமயம் இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியன் எனவும், இந்தி தெரிந்தால் வேலைக் கிடைக்கும் எனப் பழைய பஞ்சாங்கம் பாடுவோரும் நம் தமிழகத்தில் இருக்கத் தான் செய்கின்றனர். இந்தி இந்தியாவில் இருக்கின்ற ஏனைய மொழிகளைப் போன்று ஒரு மொழி அவ்வளவே. உதாரணத்துக்கு ஒரு தாயிற்கு 18 பிள்ளைகள் இருக்கின்றன, ஆனால் அந்தத் தாய் ஒரே ஒரு பிள்ளைக்கு மட்டும் நல்ல சட்டை, சாப்பாடு என கவனித்துக் கொண்டு ஏனைய பிள்ளைகளை பட்டினி போட்டும், கிழிந்த ஆடைகளோடு அலைய விட்டால், அந்தத் தாய் ஒரு நல்ல தாயாக கருதப்பட மாட்டாள். இன்று இந்தியாவின் நிலையும் இது தான். இந்தியாவின் மற்ற மொழிகளை ஒதுக்கிவிட்டு இந்திக்கு மட்டும் சகல சௌபாக்கியங்களையும் தந்து அகமகிழ்கின்றது மத்திய அரசாங்கம். ஏனிந்த மாற்றாந்தாய் மனப்பான்மையோ?

இந்தி என்றொரு மொழியைத் தமிழர்களாகிய நாம் வெறுப்பதில்லை. இந்தி மொழி பேசப்படுகின்ற மாநிலத்திற்குச் செல்கின்ற தமிழர்கள் அங்கேயே நிரந்தரமாக வசிக்க நேரிடும் போது குறுகிய காலத்தில் இந்தியைக் கற்று மிக அழகாக இந்தி பேசுவதை நான் பார்த்திருக்கின்றேன். அதே சமயம் ஆந்திராவிற்கோ, கருநாடகத்திற்கோ, வங்காளத்திற்கோ குடிபுகும் தமிழர்கள் முறையே தெலுங்கு, கன்னடம், வங்காள மொழிகளைக் கற்று பேசி வருகின்றனர். ஆனால், எங்கோ இருக்கின்ற இந்திக் காரன் இங்கே சாமி கும்பிட வருவதற்கும், நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவற்காகவும், இங்கே நம் தமிழகத்தில் வேலைக்கு வருவதற்காகவும், ஏழரைக் கோடி தமிழர்களும் இந்தி படிக்க வேண்டும் எனச் சொல்வது மடத்தனமாகப் படவில்லை.

உலகமே சுருங்கி உலகமய பொருளாதாரக் கால கட்டத்தில் நாம் கொரியாக் காரனோடும், சீனாக் காரனோடும், ஜெர்மன் காரனோடும் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றோம், அவர்களும் நம் தமிழகத்திற்கு வந்து போகின்றனர். அதற்காக இந்தியர்கள் அனைவரையும் கொரியின் மொழியையும், சீன மொழியையும், ஜெர்மன் மொழியையும் கற்றுக் கொள்ளுங்கள் எனச் சொன்னால் எவ்வளவு நகைச்சுவையாக இருக்குமோ அவ்வளவு நகைச்சுவையாக இருக்கின்றது தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இந்தி படியுங்கள் என்ற கோஷமும்.

கடந்த 50 ஆண்டுகளாகத் தென்னிந்திய மாநிலங்கள் இந்தி படித்து வருகின்றன. ஆனால் எதாவது ஒரு வட இந்திய மாநிலத்தில் எதாவது ஒரு தென்னிந்திய மொழியை அவர்கள் படிக்கின்றனரா என்ன? இல்லவே இல்லை. இதென்ன நியாயம் சொல்லுங்கள். சொல்லப் போனால் முதலில் உபி, பிகார், ராஜஸ்தான் போன்ற இந்தி மொழி மாநிலங்களில் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளைக் கட்டாயமாக்குங்கள். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான இந்தி மொழி பேசுவோர் தென்னிந்தியாவிற்குத் தொழில் செய்யவும், வேலை தேடியும் வருகின்றனர். இனி வருங்காலங்களில் மேலும் பல லட்சம் பேர் இங்கே குடியேறும் சூழல் தான் உள்ளது. அவர்கள் இந்த மொழிகளைக் கற்பது பயன் தரலாம். அப்போது நிச்சயம் வட இந்திய ஓட்டுநர்களுக்கு தமிழகத்திலோ, கருநாடகத்திலோ இந்தியில் பெயர் பலகைகள் தேவைப்படாது தானே.

- மின் வாசகம் 
வாசிக்க »


தமிழ் நாட்டிற்கு இருபத்தோராம் நூற்றாண்டு பல சவால்களை சந்திக்கும் நூற்றாண்டாக மாறியுள்ளது என்பது உண்மை தான். நமது மூதாதையர் நமக்கு விட்டுச் சென்ற இயற்க்கை வளங்களை ஒரே தலைமுறையில் அழித்துவிட்டு நிற்கின்றோம். ஒரு காலத்தில் பசுமை பூத்துக் குலுங்கிய நிலங்கள் எல்லாம் இன்று வறண்டு காணப்படுகின்றன, அவற்றில் கட்டடங்களை எழுப்பி சுற்றுச் சூழலைக் கெடுத்து மாசாக்கியதோடு, அதன் விளைவால் உடல்நலத்தைக் கெடுத்து அவதிப்படுகின்றோம். இயற்கையாக இலவசமாக கிடைத்த நீரும், காற்றும் இன்று விலைக்கு வாங்கும் நிலைக்கு வந்திருக்கின்றோம்மி.

தமிழக சமூகம் என்றுமில்லாத அளவுக்கு மாற்றங்களை கண்டு வருகின்றது, ஆனால் அதன் ஆத்மா அழிந்துவிடவில்லை. தமிழகத்தின் ஆத்மா என்றுமே தன்னிகரற்றவை, அது ஆண்டாண்டு காலம் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் அசராது நிமிர்ந்து நின்று கொண்டிருக்கும் ஓர் உன்னத உணர்வு. அது என்ன தமிழக ஆத்மா எனக் கேட்கலாம் ? தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு அதன் ஆத்மா தெரிவதில்லை, புரிவதில்லை, ஆனால் அது நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமாய் புதைந்திருக்கின்றது. அதே சமயம் தமிழகத்தை விட்டு வெளியேறி புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொருவருக்கும் அதன் ஆத்மா எப்படி பட்டது என்பதை நிச்சயமாக உணர்வார்கள். தாயை விட்டு விலகியோருக்குத் தான் அதனருமை என்றுமே விளங்கும்.

இல்லை என்றால் உலகின் உன்னதமான மனிதர்களை இந்த நாடு மீண்டும் தன் வசம் ஈர்த்திருக்காது எனலாம். தமிழகத்தை துறந்து விட்டு போன தமிழர்களை மட்டுமல்ல, அந்நியர்களையும் என்றுமே கவர்ந்துள்ளது என்பதே வரலாறு காட்டும் உண்மை எனலாம். விரும்புவதைக் கொடுத்துள்ளது. அலக்சாண்டர் இந்த மண்ணை ஆள ஆசைப்பட்டார். ரோமானிய, கிரேக்கர்கள் நமது நாட்டின் வாசனைத்திரவியங்களுக்காக ஓடோடி வந்தனர், குடியேறினர். சீனர்களும், சாவகர்களும் வியாபாரம் செய்தததோடு நமது மதங்களையும், தத்துவங்களையும், எழுத்துக்களையும், இதிகாசங்களையும் ஏற்றுச் சென்றனர். அரேபியர்கள், துருக்கியர், முகாலயர்கள், ஐரோப்பியர் என நம் மண்ணின் வளங்களுக்காய் படை எடுத்தனர். ஏன் யாராக இருந்தாலும் இந்த நாடு அவர்கள் விரும்பும் எதனையோ தந்துள்ளது. இன்றும் தந்து கொண்டே இருக்கின்றது, இல்லை என்றால் தமிழகத்தில் வர்த்தகம் செய்ய நவ நவீன காலனித்துவவாதிகள் உலக மயம் என்ற முகமூடிக் கொண்டு நமை நோக்கி படை எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்களே. தமிழகத்தை நோக்கி பலரும் வந்து கொண்டே இருக்கின்றார்கள். அயலகத்தில் இருந்து இங்கே அடைக்கலம் வேண்டியும், படை எடுத்தும், வியாபாரத்துக்காகவும், இன்னும் என்னனென்னவோ காரணங்களுக்காக வந்தவர்களை எல்லாம் இந்த நாட்டின் ஓரங்கமாய் ஏற்றுக் கொண்ட நாடு இது. ஆனால் அதன் ஆத்மாவை உணராமல் நாம் மட்டும் மவுனிகளாக ஐம்புலன்களை தன்வயத்துக்குள் முடக்கிக் கொண்ட ஆமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

பக்கத்து வீட்டில் ஒருவன் பசித்திருக்கக் கூடாது என்பதற்காக கதவைத் தட்டி கஞ்சியைக் கூட பகிர்ந்துண்ணும் மான்பும், தன் மனைவியைத் தவிர மற்றவளை ஏறெடுத்து காணக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும், உழைக்க வக்கில்லாதவர்களைக் கூட அரவணைத்துக் கொள்ள சத்திர சாலைகளையும், வீடற்றோர் படுத்துறங்க கோவில் திண்ணைகளையும் கட்டி எழுப்பிய நாடு தான் இது. மூத்தோருக்கு மரியாதை செய்வதையும், யார் பெற்ற பிள்ளை என்றாலும் சோறூட்டி பாலூட்டி விடும் தாய்மார்களின் அன்பையும் கொண்ட நாடு இது. இன்று கூட பண்டிகை தினங்களில் சாதி, மதம் கடந்து பலகாரங்களை பகிர்ந்துண்பதையும், பக்கத்து வீட்டு வரவேற்பு அறையில் சொந்த வீடு போல எண்ணி குழுமி தொலைக்காட்சி பார்த்து கிடப்பதையும் காண முடியும். வெளிநாடுகளில் இவை எல்லாம் கனவிலும் காணக் கிடைக்காதவை. 

இத்தனை பெருமைகளை கொண்டிருந்தாலும் இந்த நாட்டின் கட்டுமானம் ஏற்றதாழ்வுகளையும், சாதியங்களையும், பாலியல் வன்முறைகளையும், இயற்கைச் சீரழிவுகளையும், உடல நலக் கேடுகளையும், மூட நம்பிக்கைகளையும் தன்னக்கத்தே கொண்டிருப்பது தான் இந்த நாட்டின் முக்கியமான சாபக்கேடாகவும் இருக்கின்றது. எதனையும் விலக்கக் கூடாது ஏற்க வேண்டும் என்ற தமிழக பண்பின் விளைவோ, அல்லது மூத்தோர் சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை ஆழப் பற்றிக் கொண்ட நமது சிந்தனை ஆக்கமோ நாம் இன்று பழமைக்கும் புதுமைக்கும் இடைநிலையில் நின்று கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதன் கட்டமைப்புக்கள் குழப்பங்களையும், குழப்பங்கள் மத்தியில் எழுந்த தெளிவுகளையும் கொண்டிருக்கின்றது. இந்த நாடு தெளிவுகளையும், தெளிவுகளை தெளிவுடன் தெரியத் தவறியதால் விஞ்சி நிற்கும் குழப்பங்களையும் கொண்டிருக்கின்றது. வளர்ச்சிக்கும் அழிவுக்கும் வித்தியாசங்களை காண இயலாது குழம்பி நிற்கின்றோம். இந்த அதிர்வு நிலை நமது தமிழகத்தின் தனித்தன்மையையும், அது கட்டிக் காத்து வந்த வாழ்க்கையையும், நமது இயற்கை வளங்களையும், எண்ணங்களையும், மொழிகளையும் இழந்து விடும் பேராபத்தான நிலையின் விளிம்பில் நிற்கின்றோம்.;

இதை வாசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடம் நான் வீசும் கேள்வி என்னவென்றால்? இக் கணத்தில் தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால் எது என தங்களால் கூற இயலுமா? ஒன்றிரண்டு என்றால் கூறலாம் ஆனால் ஒட்டு மொத்தமாய் அடித்தளமே ஆடிக் கொண்டிருக்கும் நிலையில் எதைக் கூறுவது எதை விடுவது என்பதே நமக்கு தெரியாமல் இருக்கின்றது. 

எனக்குத் தெரிந்து சில விடயங்களை பட்டியல் இடலாம் என நினைக்கின்றேன். இந்த விடயங்கள் அனைத்தும் தனித் தனியானவை போல காட்சி தந்தாலும், இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஒட்டிப் பிறந்த இரட்டயர்கள் போல ரத்தமும் சதையுமாக பின்னி பிணைந்து கிடக்கின்றன. இந்த பின்னல்கள் காட்சிப்படுத்தும் சிக்கல்களே இதனை தீர்க்க முயலத் தடையாகவும் இருக்கின்றது. 

இந்த நாடு உலகின் மிக பழமையான மொழிகளையும், மதங்களையும், கலாச்சாரங்களையும், அறிவியல்களையும் கொண்டு இருப்பதில் நாம் ஒவ்வொருவரும் பெருமை அடையக் கூடிய விடயமே. இன்று மறு சுழற்சியையும், இயற்கை விவசாயத்தையும் உலக நாடுகள் மேடை போட்டு பிரச்சாரம் செய்கின்றன, ஆனால் நம் தாத்தா பாட்டி காலம் வரை இவையிரண்டும் நம் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாய் இருந்தனவே.  உணவே மருந்தாய் இயற்கைக்கும் விலங்குகளுக்கும் கேடில்லாமல் உழுது உண்டு வாழ்ந்தனர். பசுமைப் புரட்சிகள் என்ற பெயரில் மேற்கில் காலாவதியான உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் மண்ணில் கொட்டி மலடாக்கினோம். இயற்கை சாயங்களை விட்டு செயற்கை சாயங்களால் ஆற்று நீரை மாசாக்கினோம், இன்னும் நொய்யல் நதி நச்சு நீரால் நிரம்பி வழிகின்றது. மண், பித்தளைப் பாத்திரங்களையும், வாழை இலை, ஓலைப் பைகளை எல்லாம் மறந்து எவர் சில்வர், பிளாஸ்டிக் என மாறி இன்று நம் மண்ணையும், நீரையும், காற்றையும் மாசாக்கி உடலையும் உள்ளத்தையும் நோய்களால் நிரப்பி வைத்துள்ளோம்.

இது வரைக் காலமும் தமிழகம் ஏற்றத் தாழ்வுகளோடு மாறி மாறி முகிழ்ந்திருந்தாலும், அதன் ஆத்மாவையும், அது வளர்த்தெடுத்த அதன் வாழ்வியலையும் நாம் முற்றாக இழந்திருக்கவில்லை. அதே சமயம் அயலகத்தில் இருந்து வந்த நல்லது கெட்டதுகளையும் சுவீகரித்துக் கொண்டோம். ஆனால், இன்று இந்த நொடியில் இந்த நாட்டின் அங்கத்தவர்களாக நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பது தான் கேள்வியே.&nbsp

என்றும் இல்லாத அளவுக்கு ஒவ்வொரு தமிழரும் சிந்திக்கும் திறமை என்பது அதிகரித்துள்ளது. ஆனால் அச் சிந்தனையை நல்ல வகையில் எங்கு எப்படி நாட்டை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்துவது என்பதில் தான் முக்கிய தடைகளே இருக்கின்றன. அதாவது நம் ஒருவருக்கும் இந்த நாட்டை முன்னேற்றிக் காட்ட வேண்டும் என்ற நப்பாசை இருக்கின்றது. ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கின்றது. அந்தக் குழப்பம் நமது எண்ணத்தைக் கட்டிப் போட்டு நாட்டின் நிர்மாணத்தில் பங்கெடுக்க தடைக்கல்லாகவும் இருக்கின்றது. 

அத்தோடு நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைகளில் அடையாளப்படுத்தப்பட்டு பிரித்து வைக்கப்பட்டுள்ளோம், நாம் ஒரு பொது நலனுக்காக ஒன்றுபடுவது என்பதே சாத்தியமில்லை என்ற நிலையில் நாம் உருவாக்கப்பட்டும் உள்ளோம். காரணம் நாம் சாதிகள், மதங்கள், வர்க்கங்கள், கல்விகள், நிறங்கள், என வகை தொகையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளோம். நம்மை இணைப்பது என்பது ஒன்றும் இல்லை என்பதாகவே இருக்கின்றது. 

ஆனால் சற்று சிந்தித்துப் பாருங்கள் நம்மை இணைக்க கூடிய விடயங்கள் ஒன்றுமே இல்லையா ? சற்று நேரம் சிந்தித்தாலே தெளிவு பெற்று விடலாம், நம் அனைவரையும் ஒரு சில விடயங்கள் இணைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆம் ! நாம் நமக்கானவற்றை பெறுவதில் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோம், நமக்கான அடிப்படை உரிமைகளைக் கூட அளிக்கப்படாமல் ஆட விடப்பட்டுள்ளோம், நமக்கான நாட்டில் அனைத்தும் இருந்தும், நமக்கான வாழ்க்கையை நல்ல முறையில் அமைக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் நாம் அவற்றை பெற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக விலக்கி வைக்கப்பட்டுள்ளோம். அந்த ஒற்றை விடயத்தில் தமிழகத்தில் 99 % மக்களும் ஒன்று பட்டே நிற்கின்றோம். 

இங்கு சிக்கல் என்னவென்றால் 99 % மக்களும் தமக்கானவற்றை பெறவும், தாம் பெற்றவற்றை தம் சகாக்கள் பெறவும் வழியும் வாய்ப்பும் இருந்தும், நாம் அவற்றை அடைய முடியாமல் வெறும் 1 % அடக்குமுறையாளர்களின் இடத்தை பெற போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த 1 % பேரின் வழிநடத்தல்களில் மந்தை ஆடுகள் போல தலையாட்டிக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் போடும் திட்டங்களில். அவர்கள் காட்டும் திசைகளில், அவர்களின் நற்பயனுக்காக நமது அன்றாட வாழ்வியலையும், அடையாளங்களையும் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். நாம் அவர்களால் கூறு போடப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். 

ஏன் அனைத்து வளமுள்ள நாட்டில் குறைந்தது 24 மணி நேரம் மின்சாரம்,நல்ல குடிநீர், சுத்தமான காற்று, மாசற்ற சுற்றுபுறம், ஆரோக்கியமான சத்தான ஆகாரங்கள் கூட கிடைப்பதில்லை. அதே சமயம் 1 % பேருக்கோ அவை தடையில்லாமல் கிடைக்கின்றது. ஏன் நாம் தரமான அடிப்படைக் கல்வியை நம் பிள்ளைகளுக்கு இலவசமாக கொடுக்க முடியாமல் 1 % பேர் உருவாக்கி வைத்திருக்கும் வியாபாரக் கல்விக்காக வரிசையில் நிற்கின்றோம், அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணங்களை கட்ட முடியாமல் நம் அளவுக்கு மீறி உழைத்துக் கொட்டுக்கின்றோம் என்று என்றாவது சிந்தித்து உண்டா. 

ஏன் நல்ல தட்ப வெட்பமும், இயற்கை வளமும் இருந்தும் கூட நமது சாலைகள் பாழ்பட்டுக் கிடக்கின்றன, நகரங்கள் நரங்கங்களாய் காட்சியளிக்கின்றன. அவற்றால் நாம் தேவையில்லாமல் பெறும் நோய்களும், அந்த நோய்களை குணப்படுத்த நாம் பெறும் வைத்தியங்களும், அதற்கு உண்டாகும் செலவுகளும், அச் செலவுகளை சமாளிக்கவே அடிமாட்டு ஊழியங்களுக்கு கூடுதல் உழைப்பைக் கொட்டிக் கொடுக்க வேண்டிய துர்பாக்கியங்களும் எதனால். 

உலகில் விளைச்சல் நிறைந்த மண்வளமும், வேளாண் தொழில் செய்யவே தம் ஜீவிதம் தொலைத்த பல கோடி மனிதர்களும் தினம் தினம் உணவு விலை ஏறிக் கொண்டிருப்பதால் பசியோடு தூங்கச் செல்கின்றனர். வெங்காயமும், உருளைக் கிழங்கும் கூட ஆபரண விலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது செயற்கையாக உருவாக்கப்பட்ட போலித்தனமான விலையேற்றங்கள் என்பதை ஏன் நாம் உணர மறுக்கின்றோம். சில ஆயிரம் ரூபாய்கள் கடனைக் கூட திரும்பிச் செலுத்த இயலாத நிலையில் லட்சம் லட்சம் விவசாயிகள் தூக்கில் தொங்குவதும், விவசாயம் பொய்த்து விடுமோ என்ற அச்சத்தில் தம் மாநில தண்ணீரை தாமே அனுபவிக்க முயலும் சூழலால் மாநிலங்களுக்கு இடையிலான பூசல்களும், அதனால் ஏற்படும் பகைமைகள் நம் சகோதர மொழி மக்களையே நமக்கு விரோதிகளாக்கிவிடும் சூழலும் ஏன் எழுந்துள்ளது என்பதை சிந்தித்தது உண்டா? 

நம் நாட்டிற்காக உழைக்க அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் தேர்தல் வாக்குகள் மூலம் நாம் நியமித்தால், அவர்கள் என்னவென்றால் குட்டி ஜமீன்கள் போல இருக்கைகளில் பசைகளைத் தடவிக் கொண்டு புட்டங்களை ஒட்டிக் கொண்டு, அந்த இடங்களை தம் மக்கள், மாமன், மச்சினன் என்போருக்கு பகிர்ந்து கொண்டிருக்கின்றனரே இதை ஏன் நம்மால் தட்டிக் கேட்க முடியவில்லை. அவர்கள் நம் வேலைக்காரர்கள் அல்லவா? ஏன் நம்மை அவர்களின் கொத்தடிமைகள் போல மாற்றி விட்டுள்ளார்கள். 

நம் வீட்டுப் பெண்களுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் பாதுக்காப்பே இல்லையே. பச்சிளம் குழந்தை முதல் மூதாட்டி வரை கற்பழிக்கப்படுகின்றனர். நகரமோ, கிராமமோ, இரவோ, பகலோ பெண்களுக்கான பாதுகாப்பு குலைந்துள்ளதே. கற்பழிப்புகள், உடல் தீண்டல்கள், வன்பகடிகள் மலிந்து விட்டனவே. ஆண் துணையோடு போனாலும் குடல் கிழிய கற்பழிக்கப்படுகின்றாள், காதலிக்க மறுத்தால் முகத்தில் ஆசிட் வீச்சு, சுயமாய் காதலித்தால் ஊரே சேர்ந்து புணருகின்றது, காதலித்து மணந்தால் உளவியல் நெருக்கடிக்குள் உள்ளாக்கப்பட்டு பிரித்து வைக்கப்படுகின்றனர். பாடம் படிக்க பள்ளிக்கு போனால் நிர்வாண சோதனைகள், தொழில் பயில போனால் நீதிபதியோ படுக்கைக்கு அழைக்கிறான், பத்திரிக்கையாளனோ கட்டிப்பிடிக்கிறான், இவற்றை எல்லாம் விலகிச் சென்றால் உடை மாற்றும் அறையில் காமெரா வைக்கிறான், கோவிலில் பூசாரி மயக்க மருந்தை பிரசாதத்துக்குள் இட்டு வன்புணருகின்றான், ஆசிரமத்தில் கற்பழிக்கின்றான், மருத்துவமனையில் துகிலுறிந்து நிர்வாணப் படம் எடுக்கின்றான். எங்கே இந்நாடு போய் கொண்டிருக்கின்றதோ.கடைசியில் பாதிக்கப்பட்டவரை மட்டுமே குற்றவாளியாக்கின்றனர், குற்றவாளிகளை தண்டிக்க மறுக்கின்றனரே இது ஏன்?

நமக்கான நல்லதொரு குடியிருப்புக்களை அமைத்து தராமல் அதனை தனியாருக்கு விற்றுக் காசாக்கி அத் தனியார்கள் சேர்ந்து நம் நிலங்களை கொள்ளையடித்து புறாக்கூடுகளைக் கட்டி நமக்கே லட்சக் கணக்கில் விற்றுக் காசாக்கி, அதுவும் போதாது என நாம் கஞ்சிக் குடிக்கும் வேளாண் நிலங்களில் இருந்து விவசாயிகளை துரத்தி விட்டு, அந்த நிலங்களையும் பட்டா போட்டு விற்றுக் காசாக்கி நம் தலையிலேயே கட்டி விட்டுள்ளார்களே. இது ஏன் நம் மனதை உறுத்தவில்லை. 

8 கோடி மக்கள் உள்ள தேசம் என்பது ஒரு குட்டி உலகம். இந்த உலகில் உலகிலே தரமான மண் வளமும், நீர் வளமும், அதை நன்கு பயன்படுத்தவல்ல மனித வளமும் கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் அவற்றை முறைப்படுத்த முடியாமல் வாயில் எச்சில் ஒழுக மேற்கை நோக்கிக் கொண்டிருக்கின்றோம். ஏன் இங்கு படைப்புக்கள், புதிய கண்டுபிடிப்புக்கள் எவையும் உருவாக்கப்படுவதில்லை. 

நமது தேசியம் என்பது வெறும் கொள்ளைக்காரர்களின் கூடாரமாக இருக்கின்றதே, இவற்றை ஏன் நம்மால் தட்டிக் கேட்க இயலவில்லை. இன்று நம் வாழ்க்கையில் அனுபவிக்கு ஒவ்வொரு துன்பத்துக்கும் நம் தலைவிதியே என பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். அந்த விதியை மாற்ற கோவில் குளங்கள், சாமியார் மடங்கள் ஏறி இறங்கினால் போதும் என நாம் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளோம். 

நமது வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், மின்சாரம் வரவில்லை என்றால், நமக்கு விசாலமான வீடுகள் இல்லை என்றால், இலவசமான உலகத் தரமான கல்வி கிடைக்கவில்லை என்றால், கற்றக் கல்விக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், கிடைத்த வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றால், சாலையில் இறங்கினால் சாக்கடை ஓடுகின்றது, குப்பை நரல்களில் ஈ மொய்க்கின்றது, மாசுள்ள காற்று நம் நாசுக்களை வறளச் செய்கின்றது என்றால், மிதமான தட்ப வெட்பங்களை இழந்து சுட்டெரிக்கும் சூரியன் நல் தோலை கொதிப்படையச் செய்கின்றது என்றால், பேருந்தில் மூச்சுக் கூட விட முடியாமல் நெறிபட்டு ஆண், பெண் என்ற பேதமின்றி சதையோடு சதை ஒட்டி தன்மானம் இழந்து பயணிக்கின்றோம் என்றால், அந்த போக்குவரத்துக்கே சம்பாத்தியத்தைக் கொட்டிக் கொடுக்க வேண்டும் என்ற நிலை என்றால், இதனால் நோய் பரவுகின்றது என்றால், நோய் தீர்க்க நல்ல மருத்துவம் கிடைக்கவில்லை என்றால், இது தரும் மன அழுத்தங்களால் வாழ்வதே இயலாமல் போய் நொடிந்து ஒடிந்து இதயம் அடைத்து சாகின்றோம் என்றால் இதற்கு யார் காரணம் என சிந்தித்துப் பாருங்கள் ?!!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவாக தமிழ்நாட்டு தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கும்  பெப்சி கோக் போன்ற அந்நிய பானங்களை விற்க வணிகர்கள் தடை போட்டனர். இதனால் ஓடி வந்தார் பெப்சியின் உலகலாவிய நிருவாக இயக்குனர் இந்திரா நூயி. அவர் மோடியை சந்தித்த மறுநாள் பெப்சி கோக் நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் நீரை உறிஞ்ச போடப்பட்ட தடையை நீக்கியது வழக்குமன்றம்.

தஞ்சை தரணியில் மீத்தேன் இருப்பது பல ஆண்டுகளாக பலரும் அறிந்த உண்மை தான். வயல் வெளிகளில் கொள்ளிவாய் பிசாசாக அலைவது இந்த மீத்தேன் வளி தான். ஆனால் இந்த மீத்தேனை உறிஞ்சி லாபம் பார்க்க மத்திய மாநில அரசுகள் திட்டம் போட்டே மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தனர். ஆனால் பெரு விளைச்சல் தரும் தஞ்சை தரணியில் மீத்தேன் திட்டத்திற்கு தமது பாரம்பரிய நிலங்களை தருவார்களா என்ன? அதனால் தான் கடந்த முப்பது வருடங்களாக காவிரி நீரை ஒழுங்காக வரவிடாமல் விவசாயத்தை அழித்தனர். அதற்கு அப்புறம் தான் மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தனர். ஆனால் நினைத்தற்கு நேர்மாறாய் மீத்தேன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அத் திட்டத்தை தமிழக அரசு நிறுத்தியது.

ஆனால் அதன் பின் மத்திய அரசு அண்மையில் நீர்மகரிவன (hydrocarbon) திட்டத்திற்கு அனுமதி தந்தது. இந்தியா முழுவதும் 31 இடங்களில் நீர்மகரிவனை (hydrocarbon) தோண்டி எடுக்க 22 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் நாட்டின் நெடுவாசல், புதுவையின் காரைக்கால் ஆகிய இடங்களும் அடங்கும். உண்மையில் மீத்தேன் கூட ஒரு நீர்மகரிவன் (hydrocarbon) தான். பெயரை மாற்றி உள்ளே நுழைந்திருக்கின்றது மத்திய அரசு. இதற்கு தமிழ்நாட்டு அரசும் உடந்தையாகியிருக்கின்றது.

இன்று  தமிழ்நாட்டில் நீரில்லாமல் தினம் தினம் விவசாயிகள் சாகும் நிலையில், தண்ணீரைக் கொண்டுவரவல்லவா முனைப்புக் காட்டியிருக்க வேண்டும் நம் அரசியல் பிரதிநிதிகள். ஆனால், மாறாக சங்கபரிவார காவிகளோடு சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டு அரசியல் பிரதிநிதிகளளும் நெடுவாசல் நீர்மகரிவன திட்டத்தைக் கொண்டு வர உதவி நிற்கின்றனர்.

மத்திய அரசியல்வாதியர் தொடர்ந்து நீர்மகரிவன  திட்டத்தைக் கொண்டு வர முனைப்பு காட்டி வருகின்றனர். இதில் ஏன் இவ்வளவு முனைப்பு இவர்களுக்கு. ஏனெனில் இந்த நீர்மகரிவன திட்டத்தால் பயனடைய போவது ஜெம் லாபாரற்றி என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தை நடத்துவது பாஜகவை சேர்ந்த கருநாடக அரசியல்வாதி. அடடா ! சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

அதே சமயம் முப்போகம் விளைச்சல் தரும் தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிய காவிரி மாவட்டத்தின் விவசாயம் இதனால் பாதிக்கப்படும் என்பதையோ, அதனை நம்பி வாழ்கின்ற லட்ச கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் என்பதையோ மத்திய மாநில அரசுகள் சாட்டைசெய்யவில்லை. 

ஏற்கனவே தமிழ்நாட்டை அழிக்க கூடங்குளம், நியூட்ரினோ, கெயில், மீத்தேன் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது, இப்போது இத் திட்டம் வேறு. இத்தகைய திட்டங்களால் நல்ல விளைச்சல் தரும் வேளாண் நிலங்கள் மட்டும் அழியபோவதில்லை. இத் திட்டங்களால் சுற்றுச் சூழல் மாசடையும், நிலத்தடி நீர் கெட்டு போகும், காற்றில் கலக்கும் நஞ்சால் நோய்கள் பரவும், ஒட்டு மொத்தத்தில் தமிழ்நாடே வாழத் தகுதியற்று நாசமாய் போகும்.

எண்ணூரில் பெட்ரோல் கசிவால் ஏற்பட்ட மாசைக் கூட சுத்தம் செய்ய திராணியற்ற நாடு இது. நாளை கூடங்குளத்தில் கசிவு ஏற்பட்டால், நியுற்றினோ திட்டத்தில் வெடிப்பு வந்தால் அழியப் போவது அப்பாவி பொது மக்கள் மட்டுமே. வளர்ந்த நாடான ஜப்பானின் புகுஷிமா, ரசியாவின் செர்நோபிலில் நிகழ்ந்தவைகளை எளிதில் மறந்துவிட்டோம்.

வளர்ச்சி வளர்ச்சி என்ற கோஷங்கள் மூலம் நம் நாட்டின் இயற்கை வளங்களையும், மக்களின் நலன்களையும் காலில் போட்டு மிதித்து நம்மை நம் நாட்டின் அரசே அழிவுப் பாதை நோக்கி தள்ளிவருகின்றனர். இதைப் பற்றி ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள், 

நாம் அனைவரும் சிந்திப்பதோடு நில்லாமல் குறைந்தது இனியாவது என்ன செய்யலாம் எப்படிச் செய்யலாம் நமது பிள்ளைகளாவது இந் நாட்டில் நல்ல முறையில் வாழ வழி வகை செய்ய ஒற்றுமையுடன் செயல்படுவோமாக.

- மின் வாசகம் 
வாசிக்க »


சென்னையின் மாங்காட்டு பகுதியில் பத்து வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளைஞன் ஒருவன் பாலியல் பலவந்தம் செய்து, பின்னர் அவளைக் கொன்று வீசியெறிந்த செய்தியைக் கேட்ட போது நெஞ்சம் படபடத்தது. வீட்டில் பெற்றோரில்லாத சமயத்தில் விளையாடிக் கொண்டிருந்த அச் சிறுமியிடம் நாய் குட்டியோடு விளையாடலாம் வா என உள்ளே அழைத்த அந்த கொடூரன், பச்சிளம் சிறுமி என்றும் பாராது பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கின்றான். பின்னர் அவளை கிரிக்கெட் பையில் மறைத்து கொண்டு ஆளரவமற்ற காட்டுக்குள் எரித்துவிட்டு வந்திருக்கின்றேன். அத்தோடு நின்றுவிடவில்லை, பின்னர் பெற்றோர் அச் சிறுமியைத் தேடுகின்ற போது நல்லவன் போல நடித்து காவல்துறையில் புகார் கொடுக்கவும் உதவியிருக்கின்றான். அந்த கொடூரன் எதோ சாதாரண படிப்பறிவற்ற ஒருவன் கூட இல்லை, நன்றாக படித்து ஐடி துறையில் வேலையும் பார்க்கின்றான். நல்லவன் போல இதுவரை காலமும் காட்டிக் கொண்டு வந்திருக்கின்றான். அது அண்ணனாகவோ, அப்பனாகவே யாராக இருந்தாலும் குழந்தைகளை தனியாக யாரையும் நம்பி விட வேண்டாம் என அச் சிறுமியின் தாய் கதறிக் கொண்டு அழுதக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த போது மனம் உறைந்து விம்மியது.

கொஞ்ச நாளைக்கு முன்னர் அரியலூரைச் சேர்ந்த நந்தினி என்ற இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட தலைவர் ராஜசேகர் என்பவரால்  பாலியல் வன்படுகொலை செய்யப்பட்டார். ஆனால், இச் சம்பவமும் வெகுமக்கள் ஊடகங்களால் பத்தோடு பதினொன்றாம் செய்தியாக்கப்பட்டு மறக்கப்பட்டது. சென்ற ஆண்டு, சென்னையில் பட்டப்பகலில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். ஆனால், கொஞ்ச நாளிலேயே அதுவும்  மறக்கப்பட்டு வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பிவிட்டோம்.

இதற்கு முன்பு புது தில்லியில் நிகழ்ந்த நிர்பயா சம்பவம் உட்பட இந்தியக் கண்டத்தில் நடந்த பல்லாயிரக் கணக்கான சம்பவங்களை செய்தியாக்கும் ஊடகங்களின் போலித் தனங்கள் எப்படிப்பட்டது எனில் வியாபாரத்துக்காக பெண்ணுரிமை பேசிவிட்டு, அது இது எனக் குதித்து விட்டு, அடுத்த கணத்திலோ அரைநிர்வாண பெண்களின் படங்களையும், ஆபாச காட்சிகளையும் காட்டுகின்றனர். எந்த மாதிரியான கொள்கையை உடையவர்கள் இவர்கள். பெண்களை அழகியல் நோக்கில் சித்தரிப்பது என்பது வேறு, ஆனால் அவளை விற்பனை பொருளாக உடலை மட்டும் குறி வைத்து அட்டைப் படம் போடுவது, சினிமா எடுப்பது, பாடல்கள் எழுதுவது, கதைகள் எழுதுவது என சுற்றிசுற்றி அங்கேயே பிணத்தின் மீது வட்டமடிக்கும் கழுகுகளை போல வட்டமடிக்கும் இவ்வாறானவர்கள் தான் பிறிதொரு சந்தர்பங்களில் தொலைக்காட்சிகள் தோன்றியும், பத்திரிக்கைளிலும் பெண்ணுரிமை என விளம்பித் திரிகின்றனர். அல்லது பெண்கள் முக்காடு போடட்டும், வீட்டுக்குள் கிடக்கட்டும், இரவில் எதற்கு சினிமா பார்க்க போக வேண்டும், இவள் சிரித்திருப்பாள், இவள் கண்ணடித்திருப்பாள் என கதை அளக்கின்றனர்.

***

கேரள மாநிலத்தில் 1996-யில் பள்ளிக்கு போன பதினாறு வயது பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் காட்டுப் பங்களாவுக்குள் அடைத்து வைத்து போதை ஊசி ஏற்றப்பட்டு 40 நாட்கள் எண்ணற்ற ஆண்களால் தொடர் வன்புணர்வு செய்யப்பட்ட சூரியநெல்லி சம்பவத்தை நம்மில் எத்தனை பேர் ஞாபகம் வைத்துள்ளோம். இதில் சம்பந்தப்பட்ட அப்போதைய காங்கிரஸ் அமைச்சர் பிஜே குரியன் என்ற அரசியல்வாதி மீது என்ன நடவடிக்கையை எடுத்தார்கள். இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு 2006-ஆம் ஆண்டில், அச்சன் உறங்காத வீடு என்ற மலையாளத் திரைப்படம் வெளியானது. இத்தனைக்கு இது நடந்தது பெண்கள் மீது வன்முறை மிகவும் குறைவானதாகவும், பெண் கல்வியில் முன்னேற்றம் கண்டதாகவும் அறியப்படும் கேரள மாநிலத்தில். அங்கே அப்படி என்றால் இந்தியாவின் பிற பாகங்களில் நடப்பவைகளை எல்லாம் பட்டியலிட்டால் பூமி தாங்காது.

எண்பதுகளில் தொடங்கப்பட்ட வரதட்சணைக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி இன்று பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் வரை பெண்ணிய போராட்டங்கள் வளர்ந்தே வந்துள்ளது. ஆனால் அவை சாதிக்க வேண்டியவைகள் நெடுந்தூரம் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு சம்பவங்களும் சமூகத்தில் சலனத்தை உண்டாக்கியே இருக்கின்றது. 1972-யில் மதுரா பலாத்கார வழக்கு, தர்வீந்தர் கௌரின் வரதட்சணை கொலை வழக்கு, 1987-யில் ரூப் கன்வாரின் உடன்கட்டை ஏற்றப்பட்ட வழக்கு, 1992 பன்வாரி தேவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு என பல வழக்குகளை இத் தேசம் சந்தித்து விட்டது. ஒவ்வொரு சம்பவங்களும் சட்டத்தை மாற்றச் செய்துள்ளதே தவிர சமூக கண்ணோட்டத்தை பெரிதாக மாற்றிவிடவில்லை.

வழக்கம் போல சமயத் தலைவர்கள், அரசியல் பெருசுகள் அரைத்த மாவைத் தான் அரைக்கின்றனர். பெண்கள் உடை அணிவதும், அசட்டையாக இருப்பதும் தான் பெண்கள் மீதான வன்முறைக்கு காரணம் என்கின்றனர். இத்தனை சம்பவங்களுக்கு பின்னரும் கூட சமூகத்தில் படித்த மரமண்டைகளுக்குள்ளேயே சமூகப் பிரச்சனையின் ஆணிவேரைக் கூட அசைக்கும் மாற்றுக் கருத்தை உண்டாக்க முடியவில்லையே என்பது தான் வருத்தமளிக்கின்றன.

கற்பழிக்கும் போது அண்ணா என காலில் விழுந்தால் காப்பாற்றப்பட்டு இருக்கலாமேஎன்ற உலக மகா புத்திசாலித்தனமான கருத்தை முன்மொழிந்தவரே வயது வராத பெண்களை ஆசிரமத்துக்கு அழைத்து அசிங்கம் செய்து மாட்டிக் கொண்டுள்ளார் என்ற போது, கருத்துக் கந்தசாமிகள் பலரும் கருத்து சொல்வதே எங்கே தாம் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சம் தான் போலிருக்கு.

ஓப்பன் இதழில் வெளியான பிரியா என்ற பெண்ணின் கதையை வாசித்த போது மண்டையில் சம்மட்டியால் ஓங்கி அடித்தது போலிருந்தது. நிர்பயாவின் சம்பவத்தை கிழி கிழியென தொலைக்காட்சிகளில் கிழித்துக் கொண்டிருந்த அதே வேளையில் பிரியாவும் அவளது அண்ணனும், தகப்பனும், தாயும் கூட இருந்துள்ளார்கள். ஆனால் அதற்கு மேல் அவள் சொன்னதை வாசித்த போது நெஞ்சம் கலங்கியது. அன்றிரவே தகப்பனே அவளை பலாத்காரம் செய்துள்ளான். அது அவளது தாயுக்கும் நன்றாகவே தெரியும், ஏனெனில் பிரியா வயது வந்த நாள் முதலே இது நடக்கின்றதாம். கொடுமை என்னவெனில் அவளது அண்ணனும் அவனது இச்சையை தங்கை மூலம் நிறைவேற்றிக் கொண்டுள்ளான்.

பொருளாதார பலவீனம், சமூக கௌரவ அச்ச உணர்வு, துணைக்கு யாருமே இல்லை, குடும்பத்தை பகைத்துக் கொண்டு தனியாக வாழ் முடியுமா என்ற துர்ப்பாக்கிய நிலைகளுக்குள் முடக்கப்பட்ட அப்பாவி பெண் ஒரு நாள் கொடுமை தாங்காமல் உத்தரபிரதேச மாநில முதல்வர் நடத்தும் மக்கள் சந்திப்பு முகாமுக்கு சென்று தனது நிலையை எடுத்துக் கூறி இருக்கின்றாள். உடனடியாக விரைந்து சென்ற அரசு பெற்றோரை கைது செய்தததோடு, அவளையும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இச் செய்தி அறிந்த பின் பிரியா எதிர்பாரா வண்ணம் சமூகத்தின் பலரும் அவளுக்கு உதவ முன்வந்துள்ளனர், அவளது தைரியத்தை பாராட்டவும் செய்துள்ளனர்.

சோபா சக்தியின் ஒரு நாவலில் இதே போன்றதொரு கதைக்கருவை தமிழ் குடும்பம் ஒன்றில் நடப்பதாக சித்தரித்திருக்கின்றார். இது தான் எதார்த்தம். நாம் தான் கண்ணை மூடிக் கொண்டு ஒவ்வொரு சம்பவங்களும் எங்கோ நடப்பது போல நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம்.  சொந்தக் குடும்பத்துக்குள் பெற்ற தந்தை, உடன்பிறந்த சகோதரன், சிற்றப்பன், பெரியப்பன்ன, மாமன், மச்சினன் தொட்டு உடன் படிப்பவன், பக்கத்துவீட்டுக்காரன், கடைக்காரன், பணியிடத்தில் பணியாற்றுவோன், முக்கியமாக உயரதிகாரிகள், ஆசிரியர்கள் என இந்த வன்கொடுமை சங்கிலியில் குற்றவாளிகளாக நல்ல பிள்ளை முகமூடி அணிந்து பலரும் உலாவி வருகின்றனர். அனைவரையும் அரசோ, ஊடகமோ கண்டறிந்து தண்டிக்கும் என கனவு காண்பது மடத்தனம். பாதிக்கப்பட்டவரும், பாதிக்கப்பட்டவருக்கு அருகில் இருப்பவரும், நாம் ஒவ்வொருவரும் குற்றம் செய்வோரின் முகத்திரையை கிழித்து தண்டனை பெற்றுதர முன்வர வேண்டும்.

தெகல்கா பத்திரிக்கையில் புதிதாக பணிக்கு சேர்ந்த இளம் பெண் மீது அந்த பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியரும் புகழ் பெற்றவருமான தருண் தேஜ்பாலே தகாத முறையில் நடந்த சம்பவத்தை அப் பெண் நினைத்திருந்தால் மூடி மறைத்து மனதுக்குள் புழுங்கி இருக்க முடியும். ஆனால் தமது பொருளாதாரம், கேரியர் என எதையும் பொருட்படுத்தாமல் தன்மானம் ஒன்றுக்காக முன்வந்து புகார் அளித்தார். பெண்கள் முதலில் செய்ய வேண்டியது அது தான். தன்மானத்தை இழந்து விட்டு சமூகத்துக்காக போலியான கௌரவத்தோடும், வசதியோடும் வாழ்வதை விட கேவலம் வேறு ஒன்றுமில்லை.

இதை எல்லாவற்றையும் விட பெருங்கொடுமை பெண்ணை கலியாணம் கழித்து மனைவியாக்கி விட்டால் அவள் தம் அடிமை என்ற மனோபாவம். வெளியே பிறர்த்தியாளாள் பெண்கள் அனுபவிக்கும் பாலியல் வக்கிரங்களை விட வீட்டுக்குள் அதுவும் கட்டியோனால் தரப்படும் பாலியல் வன்கொடுமைகள் என்பவை ஆயிரம் பக்கங்களுக்கு நீளும் சோகக் கதை என்பதையும் நாம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நினைத்துக் கூட பார்ப்பதில்லை.

***

நம் ஒவ்வொருவரையும் பெற்றவள் ஒரு பெண் தான். நமது வாழ்வில் சகோதரியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக, மகளாக வாழ்வின் இறுதி வரை நம்மைச் சுற்றி பெண்கள் நிரம்பி உள்ளனர். நம் வாழ்வின் அந்திமக் காலங்களில் கூட மனைவியாக, மகளாக ஏன் ஒரு செவிலித் தாதியாக நமது வாந்திகளை துடைத்து, மூத்திரத்தை கழுவி, மலத்தைச் சுத்தம் செய்து கவனித்துக் கொள்பவளாக இருப்பவர்களும் பெண்கள் தான்.

பல பெண்கள் திருமண பந்தத்தில் நுழைந்ததும் தமக்கான கனவு, லட்சியங்கள், உறவுகள், வாழ்க்கை முறைகள், உணவு பழக்க வழக்கங்கள் என பலவற்றையும் மாற்றிக் கொள்கின்றனர். மாதவிடாய் காலங்களில் மாத மாதம் வலிகளை சுமக்கின்றனர். கருப்பக் காலங்களில் சொல்ல முடியாத அளவுக்கு உடல் அளவிலும், உள்ள அளவிலும் துன்பத்தை அனுபவிக்கின்றனர். இப்போது எல்லாம் வேலைக்கும் போய் சம்பாதித்து பொருளாதார சுமைகளை பெண்களும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

ஒரு பிள்ளையை பெற்றுத் தந்தும் அவளது உடல், உள்ளம், அழகு என அனைத்து சீர்குலைந்தும் விடுகின்றது. பிள்ளைப் பேற்றோடு அவளது சுமை இரட்டிப்பாகி விடுகின்றது. பிள்ளையை வளர்ப்பது, கணவன்மார்களை கவனித்து கொள்வது தொடங்கி பல பெண்கள் கணவன்மாருக்கு தொழில்களிலும் துணையாக இருக்கின்றனர். எல்லாம் போக இரவுகளில் படுக்கையையும் பகிர்கின்றனர்.

இத்தனை வலிகளையும், ரணங்களையும், தியாகங்களையும் சுமந்து கொண்டு அலையும் பெண்களை நமது சமூகம் எத்தனை வன்மத்துக்கு உள்ளாக்குகின்றன என்பதை என்றாவது ஒரு நாள் நாம் அறிந்திருக்கின்றோமா?

பெண் பிள்ளைகள் பிறந்ததுமே பலரும் ஒரு இரண்டாம் பட்ச மனோபாவத்தோடு தான் அவர்களை எதிர்நோக்குகின்றனர். காரணம் நம்மில் பலருக்கும் ஆண் பிள்ளைகள் வேண்டும், ஏனெனில் சமூகத்தில் அதிகாரம் செலுத்துவது தொடங்கி பொருளாதார வலிமைகள் உள்ளடங்கலாக அனைத்தையும் ஆண்கள் தான் அனுபவிக்கின்றோம். அதனால் தான் பெண்களை வளர்ப்பதைக் கூட பல பெற்றோர் தியாக மனோபாவத்துடன் செய்கின்றனர். அது போக ஒரு பெண் பிள்ளைக்கான குறைந்த பட்ச சுதந்திர வெளியும், பாதுக்காப்பும் மிகவும் குறைவானதாகவே இச் சமூகம் கொண்டிருக்கின்றது.

இந்த தேசத்தில் பெண் பிள்ளைகள் மீது திணிக்கப்படும் மரபு சார்ந்த நெறிமுறைகளை ஆண் பிள்ளைகள் மீது திணிப்பதில்லை. உடுத்துவது, உண்பது தொட்டு அனைத்தையும் என்றோ ஒருவன் எக்காலத்திலோ கூறி வைத்தவைகள் படியே நடத்தப்படல் வேண்டும் என நாம் நிர்பந்திக்கின்றோம். அது கூட பரவாயில்லை, பெண் பிள்ளைகளின் கல்வி, சிந்தனை போன்றவற்றில் கூட சுயமான சுயாதீனமான முடிவுகளை மேற்கொள்ள முடியாமல் திண்டாட வைக்கப்படுகின்றார்கள்.

அதனினும் கொடுமை, சமூகம் பெண்களை மிக முக்கியமான வியாபார பொருளாக மாற்றியமைத்துள்ளமை தான். சற்று சிந்தித்துப் பாருங்கள், சுதந்திரம் வாங்கி விட்டோம் என்கின்றோம், ஜனநாயக நாடு என்கின்றோம், சுமார் 60 கோடி பெண்களை உடைய இந்தியாவில் பெண்களின் சமூக பொருளாதார நிலை எந்தளவுக்கு உள்ளது என்பதை உற்று நோக்குங்கள்.

அனைத்து துறையிலும் பெண்களும் முன்னேறுகின்றார்கள் எனக் கூறிக் கொள்கின்றோம், அதாவது பெரிய மனது பண்ணி பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளது போல பேசிக் கொள்கின்றோம். ஒரு லட்சம் ஆண்டுகளாக மனித சமூக பண்பாட்டு நாகரிக வளர்ச்சியில் பெண்களும் பங்காற்றி உள்ளார்கள் என்றிருக்கும் போது, அனைத்து நிலைகளிலும் பெண்கள் குறைந்தது கணிசமான பங்காவது இருக்க வேண்டாமா?

ஒன்றுமில்லை ! இந்திய பல்கலைக்கழங்களில் துணை வேந்தர்களாக எத்தனை பெண்கள் இருக்கின்றார்கள். அது கூட வேண்டாம், நமது பாராளமன்றத்தில் எத்தனை பெண் உறுப்பினர்கள் உள்ளார்கள் என எண்ணிப் பாருங்கள் மூன்றில் ஒன்று கூட கிடையாது. கடந்த முப்பது ஆண்டுகளில் ஒரு பெண் கூட பிரதமர் ஆகவில்லை. சர்வ வல்லமை படைத்த அரசியல் பொருளாதார ஜாம்பவான்களின் மகள்களாக, மனைவிகளாக, காதலிகளாக இருந்தால் மட்டுமே இந்த உயர்பதவிகளை தொட்டாவது பார்க்க இயலும் என்ற நிலை இருக்கின்றது. சுயமாக எந்த பெண்ணும் உயர் ஸ்தானங்களை அடைந்து விடும் நிலை என்பது கற்பனையிலும் இல்லை என்பது தான் நிஜம்.

சமூகத்தில் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கும் சினிமா மற்றும் விளையாட்டுத் துறையை எடுத்துக் கொள்வோம். கடந்த 75 ஆண்டுகால இந்திய சினிமா வரலாற்றில் கதாநாயகர்களின் காமுகிகளாக மட்டுமே பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய படங்களே பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப் படுத்தி வந்துள்ளது, அதிலும் கூட சொற்பமான அளவுக்குத் தான் பெண் படைப்பாளிகள் பங்காற்றி உள்ளனர். குறைந்தது மூன்றில் ஒரு பங்காவது பெண்கள் பெற்றிருக்க வேண்டுமே.

பல விருதுகளை அள்ளிய பெண் வீராங்கணைகள் முகவரியே இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பெண்களால் இயலாது என்ற மனோபாவத்தை சமூகமே தீர்மானித்து, அவர்களுக்கான வாய்ப்பை அளிக்காமலேயே கதையை முடித்துள்ளனர் என்பதே எதார்த்தம்.

ஆண்களில் கூட குறிப்பிட்ட சாதிக்குத் தான் இந்த பணம் கொழிக்கும் மத, சினிமா, விளையாட்டு வியாபார பதவிகள் என்றாகிவிட்ட நிலையில் பெண்களுக்கு இடமளிப்பார்கள் என நினைப்பது வடிக்கட்டின முட்டாள் தனம் தான்.

***

இன்று நெருக்கும் பொருளாதார சுமைகளால் தான் பெண்கள் பலரும் படிக்க வைக்கப்பட்டு, வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். பெண் தான் விரும்பும் துறையில் சாதித்து வெற்றியாளனாக வளர வேண்டும் என்றால் அவள் பல்வேறு பெற்றோர், உற்றார் , உறவினர்களின் சம்மதங்களை பெற்று பல தடைக்கற்களை தாண்ட வேண்டியுள்ளது. தன்னால் சாதிக்க இயலும் என அவளே நம்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை எட்டவே காலங்கள் கரைந்து விடுகின்றன. காரணம் ஆணின் நிழலில் ஆணுக்கான தாசியாக இருப்பதே பெண்களின் பிறப்பின் கடமை என்றே கற்பிக்கப்பட்டு வருகின்றனர். பொது வெளிக்கு வந்தால் பலராலு பல இடங்களிலும் பெண்களை மீண்டும் வீட்டுக்குள் திருப்பி அனுப்பவே பெருங்கும்பல்கள் தீயாக வேலை செய்கின்றன.

அவர்களில் மிகப் பெரும்பான்மையோனோர் பெண்களை பாலியல் இச்சைக்கு பலியாக்க துடிக்கின்றனர். தனது அதிகார வரம்பை பயன்படுத்தி தனக்கு கீழுள்ள பெண்களை படுக்கை அறைக்குள் வீழ்த்த வேண்டும் என்ற பாலியல் வறட்சித் தன்மை நிரம்பியே காணப்படுகின்றது. குறிப்பாக பொருளாதார பலவீனமான பெண்களால் இத்தகைய தடைகளை தாங்கிக் கொள்ள இயலுவதில்லை. ஒன்று மானத்தை விற்க வேண்டும், அல்லது பொருளாதாரத்தை இழக்க வேண்டும் என்ற நிர்பந்தத்துக்குள் உள்ளாக்கப்படுகின்றனர். இந்த நிலை பெரிய தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிக்கைகள் தொடங்கி உள்ளூர் ஜெராக்ஸ் கடை, துணிக்கடை வரைக்கும் நீள்கின்றது.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் உடனடியாக குடும்பத்தவர்கள், நண்பர்கள் தான். ஆனால் மானம் மண்ணாங்கட்டி என்ற கற்பனாவாதங்களாலும், போராடும் குணத்தை இழந்துவிட்ட சொரணைக்கெட்ட கோழைத்தனமான வாழ்வியல் சித்தாந்தகளாலும் அவர்கள் அந்த இடங்களில் நிராகரிப்பின் விளிம்புகளுக்குள் தள்ளப்படுகின்றனர். குடும்பத்தவர்கள் உதாசீனம் செய்யும் பட்சத்தில் பொது சமூகம் தான் முன் வந்து உதவ வேண்டுமல்லவா. காரணம் நாம் ஒன்றும் காட்டுமிராண்டி கால பாமரச் சமூகத்துக்குள் வாழவில்லை.

கற்றறிந்த தொலை தொடர்புகள் நிரம்பி வழிகின்ற ஜனநாயத்தையும், பகுத்தறிவையும் கொண்டிருக்கும் முன்னேற்றமான சமூகம். சமூகத்தின் அங்கத்தவர்கள் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் நீரில் எறிந்த கல்லால் எழுந்த அலைகள் போல அனைவரையும் அது பாதிக்கும் என்பதை உணர வேண்டும் தானே. ஆனால் இந்த பொது சமூகம் எப்படி பட்டது தெரியுமா? சுயநலமிக்கது உதவ முன்வராது உதவ முன்வரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆழ ஆராயமல் நியாயம் பேசவும், பெண்களையே குற்றப்படுத்தவும் தொடங்கிவிடும்.

மும்பையின் காமாத்திபுராவுக்கோ, கொல்கத்தாவின் சோனாகாச்சிக்கோ போய் பார்த்தால் லட்சம் நாவல்கள் எழுதக் கூடிய அளவில் ஒவ்வொரு அபலைகளுக்கு பின்னாலும் ஆயிரம் ஆயிரம் கொடூரக் கதைகள் புதைந்திருக்கின்றன. ஆனால் நம் கண்களுக்கு தெரிவதோ பெண்ணின் உடல் மட்டுமே. அவர்களது வறுமையும், சமூக அவலங்களின் இடுக்குகளுக்குள் இடறி விழுந்து 15 வயதுக்குள்ளேயே வாழ்க்கை இழந்து தினம் தினம் குமுறிக் கொண்டிருக்கும் அப்பாவி பெண்களும் பெண்களை தேவமாதாவாக, சக்தியாக பூஜித்து பய பக்தியோடு வழிபட்டுக் கொண்டிருக்கும் இதே தேசத்தில் தான் இருக்கின்றார்கள்.  ஒரு சர்வ வல்லமை படைத்த ஜகன்மாதாவும் அவர்களின் மாதவிடாய் உதிரத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கும் ஆணாதிக்க லிங்கங்களை அறுத்துப் போட வந்த பாடில்லையே.

பிணந்தின்னி சமூகம் பெண் இறந்தாலும் புணர்ந்துவிட்டே புதைக்கும் சர்வ கொடூர மனோபாவத்தை உடைத்தெறிய இன்னும் எத்தனை அவதாரங்கள் இங்கு தோன்ற வேண்டுமோ. தோன்றும் அவதாரங்கள் கூட தம் குஞ்சுமணிகளை ஆட்டிக் கொண்டு அர்த்த ராத்திரி சாம பூஜைகள் கோரும் என்பது மட்டும் நிதர்சன உண்மை. ராணுவமே கற்பழித்தாலும் தகும் என்ற சட்டத்தை வைத்துக் கொண்டு அதற்கு எதிராகஊணுறக்கம் இல்லாமல் போராடிக் கொண்டிருக்கும் சர்மிளா போன்ற இரும்பு பெண்மணிகளின் தியாகங்கள் வீண் போகக் கூடாது. மீண்டும் ஒருமுறை முதல் பத்தியை வாசித்துப் பாருங்கள், உறங்குவோரையும், உறங்குவோர் போல நடிப்போரையும் வைத்துக் கொண்டு சமூக வளர்ச்சியையும் பெண்ணுரிமைகளையும் எவ்வாறு தான் நாம் அடையப் போகின்றோமோ.

எதோ அவ்வவ்போது ஒரு சிலரால் ஏற்படுத்தப்படும் அபாயச் சங்கு ஒலிப்புகளால் தில்லி மாணவி நிர்பயாவின் மரணத்தை போன்ற சம்பவங்களை மட்டும் முன்மொழிந்து போராடுவது போல பாசாங்கு செய்துவிடுகின்றோம். ஆனால் உண்மையில் நம் அருகே, நம் வீடுகளுக்குள் கூட நடைபெறும் குற்றங்களையும், அநியாயங்களையும் தட்டிக் கேட்கவே திராணியற்ற கோழைத்தனமான சமூகத்தில் தான் நாம் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றோம்.

- மின் வாசகம் 
வாசிக்க »

என்று தணியுமோ இந்த மானிட இனவெறி




இனங்களை பாகுபடுத்தி காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்பையும் காட்டுவதே இனவெறி எனப்படுகின்றது. எந்தவொரு மனிதனும் பிறக்கும் போதே இனவெறியாளனாக பிறப்பதில்லை, ஆனால் இந்த சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் எண்ணற்றக் காரணிகள் அவனை இனவெறியாளனாக வளர்த்தெடுக்கின்றன. மனித வரலாற்றில் பெரும்பாலான சமயங்களில் ஆட்சியாளர்களாலும்,  சமூக வழிக்காட்டிகள் என்ற பேர்வழிகளாலும் தான் இனவெறி பரப்பப்பட்டு வந்திருக்கின்றது.

டொனால்டு ட்ரம்பின் பதவியேற்பின் பின்னர், அமெரிக்கா மட்டுமில்லை கனடாவில் கூட தீவிர வலதுசாரிகளின் பேச்சிலும் செயலிலும் உத்வேகம் காணப்படுகின்றது பல்லின சமூகங்கள் வாழ்கின்ற கனடாவுக்கு அவ்வளவு நல்லதில்லை.

கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஜனவரி 29 அன்று கனடாவின் கூபெக் நகரில் பள்ளிவாசல் ஒன்றில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்குத் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை சுட்டுக் கொன்றார். இது தாக்குதலில் மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் கனடா முழுவதுமுள்ளோரை அதிர்ச்சியில் உறையச் செய்தது.

மறுநாள் "அலெக்சாண்டரே பீஸோனேட்" என்கிற 27 வயது மிக்க மாணவர் தான் குபெக் நகரில் தாக்குதல் நடத்திய நபர் என்பது தெரியவந்தது. இஸ்லாமிய மக்கள் மீது கடும் வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்டிருந்த இந்த நபர் பல நாள் திட்டங்களுக்கு பின் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் இறந்தோர் அனைவரும் அப்பாவி பொது மக்கள். ஆனால், "அல்லாஹு அஃபர்" எனக் கத்திக் கொண்டே சரமாரியாகச் சுட தொடங்கியது தான் பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. இச் சம்பவம் வரலாற்றின் முக்கியமான மற்றொரு சம்பவத்தை நினைவு படுத்தியது.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு, ஜனவரி 30-ம் நாளில் தில்லியிலிருக்கும் பிர்லா ஹவுஸ் மைதானத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மோகன்தாஸ் காந்தி அவர்களை ஒரு மர்ம நபர் சுட்டுக் கொண்டார். காந்தியை சுட்டுக் கொன்ற அந்த நபர் தம்மை ஒரு முஸ்லீம் நபரைப் போல காட்டுவதற்காகவே முஸ்லீம் போலவே உடையணிந்து, கையில் பச்சக் குத்திக் கொண்டு, சுன்னத் கூடச் செய்து கொண்டு திட்டமிட்டு இந்தப் படுகொலையை நிகழ்த்தினான். ஆனால், கைது செய்யப்பட்ட பின்னர் அவனை விசாரணை நடத்தியே போது அவன் பெயர் நாதுராம் கோட்ஸே என்பதும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு இந்து தேசியவாதி என்பதும் தெரியவந்தது.

இந்த இரு தாக்குதலின் "குறிக்கோள்" என்பது கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கின்றது. அதாவது இத் தாக்குதலின் பின்னர் பெரும் மதக் கலவரம் வெடிக்க வேண்டும், அதன் மூலம் சிறுபான்மை இஸ்லாமிய மக்களைப் பெரும்பான்மை சமூகம் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பது தான்.

இத்தனை ஆண்டுக் காலம் மாறியும் உலகம் முழுவதும் வன்மமும், வன்முறையும் குறையவில்லை, மாறாக வெவ்வேறு சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதை நினைத்தால் அதிர்ச்சியடைய வைக்கின்றது. மனிதக் குலம் எந்தளவிற்கு வன்மத்தையும் வன்முறையையும் தனகுள்ளே சுமந்து கொண்டிருக்கின்றது என்பதை அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாதிரியான வன்முறைச் சம்பவங்கள் நமக்குத் திரும்ப திரும்ப நினைவுப் படுத்திக்க கொண்டே இருக்கின்றன.

*

ஏனெனில், இன்றைய நிலையில் உலகம் முழுவதிலுமே வலதுசாரிகள் எழுச்சி காணப்படுகின்றன. பிரான்சு, இந்தியா, இலங்கை எனப் பல நாடுகளில் வலதுசாரிகள் ஆட்சியைப் பிடித்திருக்கின்றனர். அதன் வழியிலேயே இன்று அமெரிக்காவிலும் தீவிர வலதுசாரி குணமுடைய டொனால்டு டிரம்ப் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றார்.

ஆட்சிக்கு வந்த சில தினங்களிலேயே ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தோர் அடுத்த 90 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அதிரடி தடை விதித்தது தொடங்கி அமெரிக்காவுக்குள் ஹிஸ்பானிய மக்கள் நுழைவதைத் தடுக்க மெக்சிகோ எல்லையில் பெருஞ்சுவரை எழுப்பவும், அமெரிக்காவில் வெளிநாட்டவர் குடியேற, வேலை செய்ய பல கட்டுப்பாடுகளை விதிக்கவும் பல திட்டங்களை அரங்கேற்ற இருப்பதால் உலகம் முழுவதும் இவற்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது.

இன்றைய நிலையில் மேற்கு நாடுகளில் எழுந்திருக்கும் இந்தத் தீவிர வலதுசாரிகள் நிலைப்பாடானது வெறும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு நிலை மட்டுமில்லை. முஸ்லீம், யூதர், கறுப்பர், ஹிஸ்பானியர், இந்தியர், சீனர் உட்பட மற்ற குடிவரவாளர்கள், அமெரிக்க செவ்விந்திய முதற்குடிகள் எனச் சமூகத்தில் இருக்கின்ற வெள்ளையினத்தவர் அல்லாத சகல தரப்பினரையும் குறிவைத்திருக்கின்றது.

அமெரிக்காவில் காணப்படுகின்ற இனவெறியானது அதன் காலனித்துவ காலத்திலிருந்தே தொடங்குகின்றது. ஐரோப்பியர்கள் அமெரிக்க கண்டத்தை அடைந்த போது இங்கு வாழ்ந்த செவ்விந்திய முதற்குடிகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வணிகத்தில் ஈடுபட்டனர். பின்னர் மெல்ல கரையோர் நிலங்களில் குடியேறினர். அதன் பின்னர் மெல்ல மெல்ல செவ்விந்தியர்களை விரட்டி ஒட்டு மொத்த கண்டத்தையும் தமதாக்கிக் கொண்டனர். அக் காலக் கட்டங்களில் ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பின மக்களை மிருங்கங்களைப் போல பிடித்து வந்து அடைத்து வைத்து வேலை வாங்கினர். மெல்ல மெல்ல கறுப்பின மக்கள் கொத்தடிமை முறையிலிருந்து விடுதலை அடைந்த போதும், மாற்றின மக்கள் மீதான துவேஷமானது இன்றளவும் வெள்ளையின மக்களில் சிலரிடம் காணப்படுகின்றது என்பதை நம்மால் மறுத்துவிட முடியாது. 

*

இந்த இனவெறி என்னும் சாக்கடைக்குள் இந்தியாவொன்றும் சிக்கிக் கொள்ளாமல் இல்லை. சொல்லப் போனால் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக நாமும் இனவெறியை வெவ்வேறு வடிவங்களில் ஆழமாக பின்பற்றிக் கொண்டே வருகின்றோம். இன்று இந்தியாவின் பெரும்பான்மை அடையாளமாக வட இந்திய உயர்சாதி வெள்ளையின இந்துத்துவ அடையாளமே பிரதிநிதித்துவ படுத்தப்பட்டு வருகின்றது.

மேரி மார்சல் தெக்கேகரை நியு இண்டர்நேசனலிஸ்ட் சஞ்சிகையில், இனவெறியும், காழ்ப்புணர்ச்சியும், நிறவெறியும் இந்தியா எங்கும் பரவிக் கிடக்கின்றன. காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் சமூக பாகுபாடுகளையும், அறியாமைகளையும், காழ்ப்புணர்ச்சிகளையும் கொண்ட ஒருவித விசித்திரமான கலவையாகும். சமூகங்கள் சாதிகளாக தமக்குள்ளே பிரிந்து கிடக்கின்றனர், ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைக் கூட தவிர்த்து வருகின்றனர். தமது சாதியைச் சாராதோரோடு சாப்பிடுவதோ, திருமணம் செய்வதைக் கூட தடுக்கின்றனர். என இந்திய சாதிய, இனவெறிக் குறித்து எழுதுகின்றார். 

இனவெறிகளை அகற்றுவதிலும், சமூகத்தைக் கட்டி எழுப்புவதிலும் ஊடகங்கள் பெரும் பங்காற்றக் கூடியன. ஆனால் இந்திய ஊடகங்களோ பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரங்களையும், வெள்ளை நிறத்தையும், பணக்காரர்களையும், உயர்ந்த சாதியினரையும், நகர் புறத்தவர்களையும் தான் எப்போதும் கொண்டாடுகின்றன. 

திரைப்பட நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், பல நிறுவனங்களும் இனவெறிகளை தத்தமது திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் கூடாகவும் பரப்பி வருகின்றனர். இந்தியர்களை பொறுத்தவரை வெள்ளை நிறத்தோல் மீது தீராத மோகம் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் கறுப்பு நிறமுடையோரை கடுமையாக வெறுக்கவும் செய்கின்றனர். இவ்வாறாக இனவெறி என்பது தேசம் முழுவதும் விரவிக் கிடக்கின்றது, ஆனால் இத் தேசத்தில் எவரும் எதோ இனவெறியே இங்கு இல்லாதது போல பாவனை செய்கின்றனர்.

தென்னிந்தியர்கள் தமது தனித்துவமான உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், உடைகள் மற்றும் நிறத்தினைக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டி தில்லி, மும்பை நகரங்களில் தொடர்ந்து வெறுக்கப்பட்டு வருவதை நாம் நன்றாகவே அறிவோம். தென்னிந்தியர்கள் பலரும் மாநிறமாகவும், கறு நிறமாகவும் இருப்பதால் மதராசிகள் என்று இழிவாக அழைக்கப்படுகின்றனர். 

இந்தியாவை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த இனவெறி அதிகார மையமானது மற்ற இனங்களை தமது இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கின்றது. பன்முக அடையாளங்களைச் சிதைத்துவிட்டு ஒற்றை முக வட இந்திய உயர்சாதி வெள்ளையின இந்துத்துவ அடையாளத்தை நிறுவ முயல்கின்றது.

கஷ்மீரில் தம் சொந்த மண்ணிலேயே அந்நியப் படுத்தப்படும் கஷ்மீரிகள் தொடங்கி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வாழ்கின்ற மங்கோலிய இனங்களும், மத்திய இந்தியாவில் வாழ்கின்ற ஆதிவாசி சமூகங்களும் தம் மண்ணிலேயே இரும்புக் கரங்களால் அந்நியப்படுத்தப்படுவதும். இந்தியாவெங்கும் வாழ்கின்ற தலித், இஸ்லாமிய மக்களின், தென்னிந்திய தமிழ் திராவிட இனங்களின்  மொழிகள், மதங்கள், வாழ்வியல் பண்பாட்டு அடையாளங்களையும், அவை சார்ந்த சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு உரிமைகளையும் பறித்து அந்நியப் படுத்துகின்றன.

மூன்றாண்டுகளுக்கு முன்பு தில்லியில் உள்ள ஒரு பகுதியில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த நிடோ தனியம் என்ற 19 வயது மாணவன் இத்தகைய இனவெறி தாக்குதல்களுக்கு உள்ளாகி பலியாகினான். கடை ஒன்றில் முகவரிக்கு வழி கேட்க போன இடத்தில், கடைக்காரர்களால் நீ என்ன சீனாவில் இருந்தா வர எனவும், சிகை அலங்காரத்தையும் கிண்டல் செய்யப்பட்டுள்ளான். இது வாய்ச் சண்டையாக உருமாறி, கடைக்காரர்களால் கத்தி, கபடாக்கள் கொண்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளான் நிடோ தனியம். இத்தனைக்கும் அவன் அருணாச்சல பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் ஆவான். 

இவ்வாறாக வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தோர் மீது நடத்தப்பட்டு வரும் இனவெறி தாக்குதல் இது முதன் முறையுமல்ல. பெங்களூரில் லய்தம் ரிச்சர்ட், புது தில்லியில் ராம்சான்பி ஒங்கிரே, மற்றும் டானா சங்கமா என பலரும் இத்தகைய இனவெறி தாக்குதல்களுக்கு பலியாகி உள்ளனர். 

இனவெறி கருத்தால் ஏற்பட்ட பிணக்கு ஆபத்தில் முடிந்துள்ளது. மங்கோலைட் தோற்றத்தில் உள்ள ஒரு மாணவன் மீது நடத்தப்பட்ட அப்பட்டமான இனவெறி தாக்குதல் இது என்பதில் சந்தேகமே இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது என்றார். இந்தியா பல்லினங்களையும், மாறுபட்ட கலாச்சாரங்களையும், பல்வேறு மக்களையும் கொண்டுள்ள நாடாகும். இந்த தேசத்தில் தாம் சார்ந்த பகுதியை விட்டு மற்றொரு பகுதிக்கு போகும் போது ஒவ்வொருவரும் ஒருவகையிலான இனவெறித் தாக்குத்தல்களை சந்திக்க நேரிடுகின்றது என்பது தான் எதார்த்தம்.

மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் போட்டு தந்த ஆரிய சித்தாந்தத்தின் வழியே தாம் எல்லாம் ஒரே வெள்ளையின ஆரியர் என்ற நினைப்பில் இந்தியாவில் உள்ள இந்து தேசியவாதிகள் மேலை நாட்டு வெள்ளையின நிறவெறியாளர்களை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றனர். ஆனால், உண்மையில் உலகளாவிய வெள்ளையின நிறவெறி வட்டத்திற்குள் வடநாட்டு ஆரிய இந்து தேசியவாதம் கூட அந்நியமே என்பதை உணர மறுக்கின்றனர்.

அதனால் தான் என்னவோ அமெரிக்காவில் வாழ்கின்ற இந்தியர்களில் சிலர் டொனால்டு டிரம்பை ஆதரித்துக் கூட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அவ்வளவு ஏன் ஆளும் பாஜகவின் எம்.பி ஒருவர் டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கையை வெளிப்படையாகவே ஆதரித்தும் பேசியிருந்தார்.

*

அதாவது, ஒரு தேசத்தின் பெரும்பான்மை சமூகத்தின் அடையாளங்களுக்குள் வராத மற்ற சமூகத்தினரை அடக்கி ஒடுக்கி அழித்தொழிக்கும் மனப்பாங்கானது மனித சமூகத்தை பிடித்திருக்கும் ஒருவித நோய் என்றே சொல்ல முடியும்.

உலகம் முழுவதுமே அந்தந்த நாடுகளில் வாழ்கின்ற பெரும்பான்மை சமூகம் மற்ற சமூகங்களை ஏறி மிதிக்கின்றன. அதற்கு தக்கவாறு தமது சட்டங்களையும் திட்டங்களையும் வகுத்துக் கொள்கின்றார்கள்.

கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக உலகை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஐரோப்பிய இனத்தவர். உலகம் முழுவதிலும் தமது சொந்த நன்மைக்காக புதிய புதிய எல்லைக் கோடுகளை வரைந்தனர். புதிய புதிய தேசங்களைப் போகிற போக்கில் உருவாக்கினார். ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் ஆண்டாண்டு காலம் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி செயற்கையான ஒன்றைப் புகுத்தினர், சேர்ந்திருந்த இனங்களைப் பிரித்தனர், பிரிந்த இனங்களை வலுக்கட்டாயமாகச் சேர்த்தனர்.

அமெரிக்க கண்டத்தில் காலம்காலமாக வாழ்ந்து வந்த பல இனங்களை முற்றாக அழித்தொழித்து அந்த நிலங்கள் மீது அமெரிக்கா, கனடா போன்ற புதிய குடியேற்ற நாடுகள் உருவாக்கப்பட்டன. இந்த நாடுகள் யாவும் இந்த மண்ணிலேயே ஆண்டாண்டு காலம் வாழ்ந்திருந்த ஆதிக் குடிகளை ஒதுக்கியும், கொன்று குவித்தும் அவர்களின் ரத்தம் தோய்ந்த சதைகளின் மீது கட்டப்பட்டதாகும், அத்தோடு நின்றுவிடவில்லை ஆப்பிரிக்காவிலிருந்து, உலகின் பல பாகங்களிலிருந்தும் அடிமைகளாகவும், கூலிகளாவும் கொண்டு வரப்பட்ட எண்ணற்ற பாவ ஜீவர்களின் உழைப்பை அடடே உறிஞ்சுவது போல உறிஞ்சியே உண்டாக்கப்பட்டது. இதன் விளைவாக இன்றளவும் உலக நாடுகளில் போர்களும் பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால், அவற்றை எல்லாம் எளிதில் மறந்துவிட்டு அல்லது மிகச் சுலபமாக புறந்தள்ளிவிட்டு, எதோ இந்த காலனி நாடுகள் ஐரோப்பிய வம்சாவளியினரது பாட்டன் சொத்து போல தாமதாக்கிக் கொள்ள நினைப்பது மடத் தனம். இன்று கூட இந்த நாட்டை நோக்கி வருகின்ற, அல்லது பாலாறும் தேனாறும் ஓடுகின்ற சொர்க்க பூமி என நம்ப வைக்கப்பட்டு உள்வாங்கப்படுகின்ற ஸ்பானியர், இந்தியர் , சீனர், ஆப்பிரிக்கர், அரேபியர் என உலகின் மூன்றாம் நாடுகளிலிருந்து வருகின்ற லட்சாதி லட்ச மக்களின் உழைப்பில் தான் உயிரூட்டப்பட்ட வருகின்றன என்பதை மறந்துவிட்டனர்.

ஒரே நாளில் தாம் வாழும் மண்ணிலிருந்து அந்நியமாகிப் போவது வலிகள் நிறைந்த ஒன்றாகும். ஒரு தனி நபரோ, சமூகமோ ஏனைய பொது சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தப்படும் போது, அதனால் எழுகின்ற எதிர்மறை விளைவுகள் இரு சாரரையும் கடுமையாகப் பாதிக்கின்றது. தூயவாதம் பேசுகின்ற வன்மம் மிக்க எண்ணம் கொண்டோரால் வழிநடத்தப்படுகின்ற தேசங்கள் யாவும் போர்களையும் இழப்புகளையும் என்றும் சந்தித்திருக்கின்றது. அதனால் ஏற்பட்ட இழப்புக்களைச் சரிநிகர் செய்ய ஆண்டுகள் பல கடந்தும் முடியாமல் தவிக்கின்றன என்பதை மறந்து விட்டு, இன்று குடியேற்றவாசிகளை தடுத்து நிறுத்தும் டொனால்டு டிரம்பின் திட்டமானது, அமெரிக்காவின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கப் போகின்றது என்பதில் ஐயமில்லை.

- மின் வாசகம் 
வாசிக்க »

ஒவ்வொரு நொடியும் நாம் இறந்து கொண்டிருப்பதாக சொல்வார்கள். உண்மை தான் ஆனால் ஒவ்வொரு நொடி இறப்பிலும் நாம் புதியவர்களாய் பிறந்து கொண்டிருக்கின்றோம். நம்மை நாம் புதுப்பித்துக் கொண்டும் மாற்றிக் கொண்டும் இருக்கின்றோம் நம்மை அறியாமலேயே. அப்படித் தான் ஆண்டுகளும் புதிதாக பிறந்து கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து நீண்டுக் கொண்டிருக்கும் மனித ஆயுட்காலத்தை ஆண்டுகளாய் பிரிக்காமல் விட்டுவிட்டால் நமது வாழ்க்கை ஓட்டத்தில் ஒரு நாள் கூட நிறுத்தி நிதானித்து நமது சரி பிழைகளை எடைப் போட்டு திருத்துவதை திருத்தி விலக்குவதை விலக்கி சேப்பதை சேர்த்துக் கொள்ள மாட்டோம். அதனால் தான் புத்தாண்டு கணக்கை சமூகங்கள் ஏற்படுதிக்கொண்டுள்ளன எனலாம்.

இந்த ஆண்டு கூட சிட்னி நகரம் புத்தாண்டை வான வேடிக்கைகளோடு வரவேற்றது. அதை தொடர்ந்து ஜப்பானில் 108 முறை மணி ஒழிக்கப்பட்டு புத்தாண்டை வரவேற்றனர். சீனாவில் பாரம்பரிய சீன கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டம் அமைந்தது. ஆங்காங், சிங்கப்பூர் நாடுகளில் கோலகல வரவேற்புடன் மக்கள் புது வருடத்தை வரவேற்றனர். துபையில் உலகமே வியக்கும் வண்ணம் வான வேடிக்கைகள் கொண்டாட்டம் என உலகின் உயர்ந்த கட்டடமான புர்ஜ் துபை ஜொலித்தது. பாரிஸில் ஈபில் கோபுரமும், லண்டனில் பிக் பங்குமும் ஒளிவெள்ளத்தில் மிதந்தன. நியுயோற்கும், டொரோண்டோவும் நள்ளிரவு வரை மக்கள் கூடத்தால் நிரம்பி புத்தாண்டை வரவேற்றது. ரியோ டி ஜெனிரோ நகரத்தில் இருபது லட்சம் மக்கள் கடல்கரையோரம் குழுமி வானவேடிக்கைகளை ரசித்தபடி புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டு பிறந்த கதை: ஆண்டுகள் என்பது நாட்காட்டிகளை கணக்கிடும் ஒரு கற்பனை கால அளவீடுகள் தான். நமது பூமிக் கோள் சூரியனை ஒருமுறைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலப் பகுதி தான் ஆண்டுகள். அவற்றை சரியாக 365 நாட்கள் 5 மணி நேரமாக கணக்கிடுகின்றார்கள். முதன் முதலில் புத்தாண்ட்டைக் கொண்டாடத் தொடங்கியவர்கள் சுமேரியர்கள் தான். மார்ச் மாதத்தில் வரும் இளவேனில் காலத்தின் தொடக்க நாளையே அவர்கள் புத்தாண்டாகக் கொண்டாடினார்கள். 

தென்னமெரிக்கப் பழங்குடிப் பண்பாட்டை நிறுவிய அஸ்டெக் மக்களும் இதேக் காலத்தில் தான் புத்தாண்டைக் கொண்டாடினார்கள். இன்றளவும் இரானியர்களும், இந்திய அரசின் மத்திய நாட்காடியும் இதனையே பின்பற்றி வருகின்றது. இதனால் தான் இந்த காலத்தை ஒட்டி பல பண்பாடுகளை பின்பற்றும் மக்கள் புத்தாண்டுகளையும், விழாக்களையும் கொண்டாடுகின்றனர். அத்தோடு வசந்த காலத்தின் தொடக்குமும் ஆகும். நீண்ட குளிர்காலத்தில் மூழ்கி கிடந்த மரங்களும், புற்களும், பறவைகளும், விலங்குகளும் தமது சோம்பல் முறித்து சுறுசுறுப்பைத் தொடங்கும் பொழுதாக அது இருந்தது. மலர்கள் முகிழும், இலைகள் துளிர்க்கும், பசுமை நிறையும், விவசாயிகள் புதுப் பயிர் நடுவார்கள். அமெரிக்காவில் குடியேறிய மக்கள் கூட 1752 வரை மார்ச் மாதத்தில் தான் புத்தாண்டை கொண்டாடி வந்தனர். 

ஆனால் ஏன் வசந்த காலத்தை விட்டுவிட்டு பனிக் காலத்தில் போய் புத்தாண்டைக் கொண்டாடுகின்றோம் என்றக் கேள்வி பலருக்கும் இருக்கத் தான் செய்கின்றது. 

ஜூலியன் காலண்டர்:முதன்முதலில் குளிர்க்காலத்தின் மத்தியில் புத்தாண்டைக் கொண்டாட நினைத்தவர்கள் ரோமர்கள் தான். அவர்கள் கூட ஆரம்பத்தில் மார்ச் மாதத்தில் தான் புத்தாண்டு விழா எடுத்தார்கள். ஆனால் ஜூலியஸ் சீசரின் ஆட்சிக் காலத்தில் ஜனவரி மாததத்துக்கு புத்தாண்டை மாற்றிவிட்டார். அத்தோடு தொடக்கத்துக்கும், முடிவுக்குமான பெண் தெய்வமான ஜானஸின் பெயரை அம் மாதத்துக்கு சூட்டவும் செய்தார். அதற்கான தக்க காரணம் தெரியவில்லை. 

ஜூலியஸ் சீசரின் காலத்தில் ரோமானியர்கள் சந்திர நாட்காட்டியை பின்பற்றி வந்தனர். ஆனால் சந்திர நாட்காட்டி துல்லியமானது அல்ல. அதன் படி ஆண்டுகளையும், காலத்தையும் கணித்த ரோமானியர்களுக்கு பருவ காலத்தை கணிப்பதில் சிக்கல் எழுந்தது. ஆனால் எகிப்துக்கு படை எடுத்த சீசர் கிளியோபட்ராவின் கணியர்கள் பின்பற்றி வந்த சூரிய நாட்காட்டியை அறிந்து வியந்து போனார். அதன் படி 365 நாட்கள் உள்ளதையும், பருவ காலங்களை துல்லியமாக கணக்கிட முடிவதையும் உணர்ந்தார். 

அதனைப் பின்பற்றி சீசரும் சூரிய நாட்காட்டியை ஐரோப்பாவுக்கு கொண்டு சேர்த்தார். அத்தோடு பனிக்காலத்தில் வரும் சம இரவு நாட்களைக் கணக்கில் கொண்டு குளிர்காலத்தின் மத்தியில் புத்தாண்டையும் தொடக்கினார். ஆனால் ஒவ்வொரு ஆண்டு என்பது 365 நாட்கள், 5 மணி நேரம் 48 நிமிடம் 46 நொடி என்பதாக இருப்பதால். ஒவ்வொரு 130 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு தினத்தை சேர்த்துக் கொண்டு வந்தார்கள். ஆரம்பத்தில் சிக்கல் இல்லாமல் போய் கொண்டிருந்த இக் கணக்கு ஆயிரம் ஆண்டுகள் கழிந்ததும் குழப்பத்தை தரத் தொடங்கியது.

கிரகோரியன் காலண்டர்: இதனைக் கவனித்த போப் கிரிகோரி 1582-யில் ஒரு தீர்வைத் தந்தார். அதன் படி ஒவ்வொரு நான்கு ஆண்டுக்கு ஒருமுறை ஒரு நாளை சேர்த்துவிட்டார். அதனை லீப் ஆண்டு என்றும் அழைத்தனர்.

மிகச் சரியாகக் கணக்கிட்டால் சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடி ஆகின்றது. இந்த அடிப்படையில் நாம் ஆணடைக் கணக்கிட்டுக் கொள்ள் முடியாது. ஆகவே முழு எண்களாக 365 என்று வைத்துக் கொண்டுள்ளோம். நமது காலண்டர் அவ்விதமாகத் தான் உள்ளது. ஆனால் இந்த கூடுதல் நேரத்தை (5 மணி 48 நிமிம், 46 வினாடி) கணக்கில் கொள்ளாமல் விட்டு விட்டால் அது சேர்ந்து கொண்டே போய் பிரச்சனையை உண்டாக்கும். அதாவது அக்கினி நட்சத்திரம் மே மாதத்தில் (சித்திரை மாதம்) வருவதற்குப் பதில் ஜூன், ஜூலை மாதங்களில் வர ஆரம்பிக்கும்.

ஆகவே நமது காலண்டரும் இயற்கையும் ஒத்துப் போக வேண்டும். இதைக் கருதித்தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை (நான்கினால் வகுபடுகின்ற ஆண்டுகளில்)  கூடுதலாக ஒரு நாளைச் சேர்த்துக் கொண்டார்கள். லீப் வருடத்தில் பிப்ரவரியில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் என்று வைத்துக் கொண்டார்கள். அப்படி ஒரு நாளைச் சேர்த்துக் கொண்டாலும் கணக்கு சரியாக வருவதில்லை.

லீப் வருடம் தெரியுமா?: ஏனெனில் நாம் கூடுதலாக 11 நிமிடம் 14 வினாடியை சேர்த்துக் கொண்டு விடுகிறோம். கணக்குப் பார்த்தால் இது 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடி ஆகிவிடுகிறது.  ஆகவே 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் வருடம் கிடையாது.

அப்படிச் செய்தாலும் கணக்கு உதைக்கிறது. 5 மணி 17 வினாடி குறைந்து போய்விடுகிறது. ஆகவே 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக ஒரு நாளைச் சேர்த்துக் கொள்கிறோம். 1600 ஆம் ஆண்டு லீப் வருடமாக இருந்தது. ஆனால் 1700, 1800 மற்றும் 1900 ஆம் ஆண்டுகள் லீப் வருடங்கள் இல்லை. 2000 ஆண்டு லீப் வருடமாக இருந்தது. 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகள் லீப் வருடங்களே. அதேபோல் 2012 ஆம் ஆண்டும் லீப் வருடமே.

இந்த மாற்றத்தை கத்தோலிக்க நாடுகள் ஏற்றுக் கொண்டன, ஆனால் பிரிட்டன் உட்பட பிரிவினைவாத கிறித்தவ நாடுகள் 1752-யில் தான் அதனை ஏற்றுக் கொண்டது. அத்தோடு மார்ச் மாத புத்தாண்டை ஜனவரிக்கும் மாற்றியது. அதனையே இந்தியா உட்பட தமது காலனி நாடுகளுக்கும் பரப்பியது. இதனால் தான் இன்று குளிர்க்கால மத்தியில் நாம் புத்தாண்டைக் கொண்டாடுகின்றோம். 

பழைய வைதிக கிறித்தவ நாடுகள் கூட இன்று ரோமன் காலண்டருக்கு மாறிவிட்டன. ஆனால் ரசியா உட்பட கிழக்கு ஐரோப்பாவில் ஜனவரி 14 புத்தாண்டாக இருக்கின்றது. தமிழகத்தில் கூட ஜனவரி 14-ம் தேதியே புத்தாண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இரான், இந்தியாவின் பல மாநிலங்கள், தென் கிழக்காசியா என பல நாடுகளில் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

உலக புத்தாண்டு பிறந்து விட்டது: பொதுவாக இன்று நம் நாட்டில் உள்ளோர் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் புத்தாண்டை ஆங்கிலப் புத்தாண்டு எனக் கூறுகின்றனர். இதனை மேற்கு நாடுகளில் உள்ளோரிடம் கூறினால் கண்டிப்பாக சிரிப்பார்கள். ஏனெனில் உலகின் மிகப் பெரும்பான்மையான நாடுகளில் இப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். இது ரோமில் அறிமுகப் படுத்தப்பட்ட கிரிகோரியன் காலண்டரின் அடிப்படையில் வருவதாகும். அதுவும் சிலர் கிறித்தவ புத்தாண்டு என்கின்றனர். கிறித்தவர்களுக்கு முந்தைய ஜூலியஸ் சீசரின் காலத்திலேயே இப் புத்தாண்டு நடைமுறைக்கு வந்துவிட்ட பின் எப்படி இது கிறித்தவ புத்தாண்டு என கூறமுடியும். 

இன்று இப் புத்தாண்டு தினத்தை ஜப்பான், தாய்லாந்து, துருக்கி போன்ற நாடுகளும் ஏற்றுக் கொண்டு கொண்டாடுகின்றனர். உலகளாவிய வகையில் பன்னாட்டு புத்தாண்டு தினமாக இதனை மனிதர்கள் ஏற்றுக் கொண்டும் விட்டனர். தயவு செய்து இதனை ஆங்கிலப் புத்தாண்டு என மடத்தனமாக வாழ்த்துரைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். 

கொண்டாட்டங்கள் மிக அவசியம், பழங்குடி சமூக காலந்தொட்டு கொண்டாட்டங்கள் உண்டு. ஆனால் கொண்டாட்டங்கள் உறவுகளை வளர்ப்பதில், உள்ளத்தையும் உடலையும் குதூகலப்படுத்தியும் கேடு விளைவிக்காமலும் இருக்க வேண்டும். ஆனால் புத்தாண்டு என்பதை இன்று குடிக்க, ஆட சம்பிரதாய வாழ்த்துரைக்க மட்டுமே பயன்படுத்துவது வேதனை தருவன. அதே போல உலகம் பூராவும் உள்ள மக்களில் பெரும்பான்மையானோர் புத்தாண்டு தினத்தில் புத்தாண்டு சபதங்கள் ஏற்பதை சம்பிரதயமாக்கிக் கொண்டு விட்டனர். ஆனால் பெரும்பான்மையானோர் முதல் மாதம் முடியும் போதே அவற்றை கைவிட்டு விடுவார்கள். என்னைக் கேட்டால் நமது திட்டங்களை சுருக்கமாகவும், நடைமுறை எதார்த்தத்துக்கும் உட்பட்டதாய் வகுத்துக் கொள்வதே சிறந்தது.

முக்கியமாக உடல்நலம், பொருளாதாரம், உறவுகள், மகிழ்ச்சி போன்றவற்றில் அதிக நேரத்தையும் அக்கறையும் செலுத்துங்கள். நல்ல விடயங்களை அதிகம் வாசியுங்கள், நேரத்தை சமூக ஊடகங்கள் போன்றவற்றில் விரயம் செய்யாமல் அவற்றை வேறு பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வது சாலச் சிறந்தது. சென்ற ஆண்டு பலருக்கும் பலவிதமான அனுபவங்களை தந்திருக்கலாம். அவற்றில் நல்லதும் கெட்டதும் இருந்திருக்கலாம். ஆனால் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் வரும் ஆண்டை எவ்வாறு நல்ல முறையில் பயன்படுத்தலாம் என முடிவு செய்வதே மிக நல்லது.

- மின் வாசகம் 
வாசிக்க »
பொதுவாக பலருக்கும் பயணங்கள் மிகப் பிடிக்கும், ஆனாலும் நிறைய பேர் பயணிப்பது கிடையாது. ஏன் தெரியுமா, பயணங்களின் போது ஏற்படும் உபாதைகள் தான் காரணம். சிலருக்கு பயணங்கள் செய்ய போதிய வசதி இருக்காது, சிலரோ சோம்பல் படுவார்கள், சிலருக்கு அக்கறையே கிடையாது. ஆனால் எல்லாவற்றையும் விட பயணங்கள் என்பது இந்தியா போன்ற நாடுகளில் அத்தனை சௌகர்யமானது கிடையாது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், நோயாளிகள், உடல் சவால் மிக்கோர் என பலருக்கும் வசதியானதாகப் படுவதில்லை.

ரொம்ப தூரம் பயணிப்போருக்கு சவாலாக இருப்பது நமது தேசத்தில் போதிய கழிவறை வசதிகள் கிடையாது என்பதே. இந்தியா இந்தளவுக்கு வளர்ந்துவிட்டது என பெருமைப் பட்டுக் கொண்டாலும் கூட எங்குமே சுகாதாரமான டாய்லட்கள் என்பவை இன்றளவும் பெருங்கனவாகவே இருக்கின்றது. நானறிந்து மாநகரங்களில் உள்ள பெரும் திரையரங்குகளைத் தவிர வேறு எங்கும் முகம் சுளிக்காத அளவுக்கு இன்னமும் டாய்லட்களை பார்த்ததே இல்லை. அதிலும் கோயில்கள், பேருந்து நிலையங்கள், உணவங்கள் போன்றவைகளில் காணப்படும் டாய்லட்கள் நினைத்தாலே குமட்டுகின்றது.

முன்பு எல்லாம் சென்னையில் இருந்து திருச்சி போகும் வழியில் ரயில் தண்டவாளம் அருகே பலரும் காலை நேரத்தில் குந்திக் கொண்டு இருப்பார்கள். அவ்வளவு ஏன் சென்னை மெரினா கடற்கரையில் காலை நேரத்தில் நடைபவனி போவோர் பல தலைகள் கரைக்கும் கடலுக்கும் இடையில் குந்திக் கொண்டு இருப்பதை கண்டிருப்பர். ஒவ்வொரு முறையும் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிப்போருக்கு விழுப்புரத்தில் பேருந்துகள் எதாவது சாப்பாட்டுக் கடைகளில் நிற்கும் போது, அங்கே எவ்வித கூச்சமுமின்றி ஆண்கள் திறந்தவெளியில் ஒன்றுக்குப் போவதை கண்கூடாக காணலாம். பெயரளவில் சில கட்டண டாய்லட்கள் இருந்தாலும் அதன் சுகாதாரம் என்பது மகாமட்டம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அந்தப் பக்கம் பெண்களோ, குழந்தைகளோ போவது மிக மிக குறைவு தான்.

இந்தக் காட்சிகள் இப்போது வெகுவாக குறைந்துவிட்டன என்ற போதும், முழுமையான சுகாதார வசதிகளை பெற நாம் இன்னம் வெகு தூரம் செல்ல வேண்டி இருக்கின்றது என்பது மட்டும் உண்மையே. தமிழக அரசு அனைத்து பேருந்து நிலையங்களில் கட்டி வைத்து டாய்லட்கள் தனியார் குத்தகைக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டு காசு வசூலிக்கும் வியாபாரமாக மாறிவிட்டது. அப்படி காசு கொடுத்து உள்ளே சென்றாலும் பெரும்பான்மையானவை மூக்கைப் பிடித்துக் கொள்ளும் அளவுக்கு பராமறிப்பின்றி இருக்கின்றன என்பது தான் நிதர்சன உண்மை.

கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது தருமபுரி பக்கம் எனது நண்பனின் ஊருக்குப் போயிருந்தேன். நல்ல விசாலாமான வீடுகள், வயல்கள் நிறைந்த ஒரு குக்கிராமம். தென்னந்தோப்புக்கள், மாந்தோப்புக்கள் என ரம்மியமான சிற்றூர் அது. அங்கு தொலைக்காட்சி வசதிகள், கேபிள் சேனல்கள், மின்சாரம் என எல்லாமே வந்துவிட்டது. அனைவரிடமும் ஒரு மோட்டர் பைக் கூட இருந்தது என்றால் பாருங்கள். ஆனால் அங்கு சென்ற பின் மிகுந்த நேரத்துக்குப் பின் கேட்ட கேள்வி, டாய்லட் எங்கே, கொஞ்சம் பயன்படுத்தலாமா என்பது தான். ஆனால் அனைவரும் சிரித்தபடி மிகப் பெருமையாக டாய்லட் எல்லாம் கிடையாதுப்பா, அப்படியே கொல்லைப் புறப் பக்கமாக போறது தான் என்றனர். எனக்கோ மிகுந்த அதிர்ச்சி ! என்ன செய்ய மூன்று நாள்கள் வேறு வழியின்றி திறந்தவெளி புல்களைக் கழகமாக ஜீவிக்க வேண்டிய நிர்பந்தம்.

அதே போல தஞ்சாவூர் பக்கம் ஒரு கிராமத்துக்கும் சென்ற போதும், இதே நிலை தான். வேறு வழியின்றி எனது நண்பன் பள்ளிக்கூட டாய்லட்டைப் பயன்படுத்துமாறு சொன்னான். அங்கு போய் பார்த்த போது தான் தெரிந்தது திறந்தவெளியே தேவலை என்பதை. பல ஆசிரியர்கள், மாணவர்கள் புழங்கும் அந்த பள்ளியில் இருக்கும் டாய்லட்கள் கட்டப்பட்ட நாளில் இருந்து பயன்படுத்தவே இல்லை போல. கதவுகளின் தாழ்பாழ்கள் உடைந்திருந்தன, தண்ணீர் கிடையாது, பூச்சி பூராண் எல்லாம் எட்டிப் பார்த்தன.

இந்தியாவின் வளர்ச்சி கண்ட மாநிலங்களின் ஒன்றான தமிழகத்திலே இந்த நிலைமை என்றால் வடக்கே போக போக ! நிலைமை மகா மோசம் என்பதை சொல்லி உணர வேண்டியதில்லை.

உத்தர பிரதேச மாநிலம் கஞ்சன்பூர் குயியா கிராமத்தில் திருமணம் நடந்த முதல் நாளே பிரியங்கா என்ற இளம் பெண் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியதற்கு முக்கிய காரணம் கணவனின் வீட்டில் டாய்லட் என்பதே இல்லை என்பது தான். டாய்லட் ஒன்றை கட்டிக் கொடுத்தால் மட்டுமே கணவர் வீட்டுக்கு வருவேன் என தெளிவாக கூறிவிட்டார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சுலாப் இண்டர்நேசனல் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அவளது கணவர் வீட்டில் ஒரு டாய்லட் கட்டிக் கொடுத்ததோடு, சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்திய பிரியங்காவை பாராட்டி இரண்டு லட்சம் ரூபாய் சன்மானமும் அளித்தது.

உலகிலேயே முதன்முதலாக டாய்லட் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள் என்பதை அகழ்வாராய்ச்சி கூறுகின்றது. சிந்து சமவெளி நாகரிகத்தில் அமர்ந்து பயன்படுத்தப்படும் டாய்லட்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. குஜராத்தின் அகமதாபாத் நகரத்தில் இருந்து சுமார் 62-கிமீ தொலைவில் உள்ள லோதல் என்ற ஊரில் அதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கிமு 2500-ம் ஆண்டளவில் அங்கு வாழ்ந்த திராவிட மக்கள் டாய்லட் வசதிகளை பெற்றிருந்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீரைக் கொண்டு பயன்படுத்தவல்ல டாய்லட்கள் இருந்துள்ளன. அது பின்னர் ஒன்றிணைக்கப்பட்ட சுடுமண் கால்வாய்களோடு இணைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது அந்த டாய்ல்ட்களை சுத்தப்படுத்த குழிகள், அறைகள் என்பவை கூட இருந்துள்ளன.

ஆனால் திராவிட நாகரிகம் தொய்வடைந்த பின்னர். டாய்லட்கள் என்பவை இந்தியாவின் வரலாற்றில் இருந்து அகற்றப்பட்டு விட்டது.

பின்னாட்களில் ஐரோப்பியரின் வருகையின் வரை டாய்லட்கள் பரவலாக பயன்படுத்தப்படவில்லை. இந்தியா போன்றே எகிப்து, சுமேரியா, கிரேக்கர், ரோமன் தேசங்களில் பழங்காலங்களில் கழிவறைகள் இருந்துள்ளன.

ஆனால் கிபி 500 முதல் கிபி 1500 வரையிலான காலப் பகுதிகளில் கழிவறை வசதிகள் இல்லாமல் போய் உலகம் எங்குமே திறந்தவெளியில் கழித்து வந்துள்ளனர் என்பது வியப்பான தகவல். இதேக் காலப் பகுதிகளில் மதங்கள், நிலப் பிரபுத்துவம் சார்ந்த சமூங்கள் தோன்றியும் உள்ளன.

உலகம் முழுவதுமே முறையான டாய்லட் வசதி இல்லாதோர் 250 கோடி மக்கள் எனவும். அவற்றில் 100 கோடி பேர் திறந்த வெளியில் கழித்தும் வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியாவில் தான் உள்ளனர்.இந்தியா போன்ற ஜன நெருக்கடி மிக்க வசதிகள் குறைந்த தேசத்தில் சுகாதாரம் மற்றும் கழிவறைக் குறித்த போதிய விழிப்புணர்வு மிக மிக அவசியமாக இருக்கின்றன. ஏனெனில் இந்தியாவில் சுமார் 60 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இன்றளவும் கழிவறை வசதிகள் கிடையாது.

தினமும் திறந்தவெளியிலேயே தமது உடல் கடன்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். வெறும் 46.9% வீடுகளில் தான் கழிவறைகள் இருக்கின்றன. அதுவும் பிகார், ஜார்க்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் 75 % வீடுகளில் கழிவறைகளே கிடையாது என்பது தான் வருத்தமான உண்மையாகும். ஆனால் 75 % மக்கள் செல்பேசி இணைப்பை பெற்றிருக்கின்றனர் என்பதும் கவனிக்கத் தக்கதோர் விடயமாகும்.

இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் பாரிய சுகாதார திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. ஆண்டுக்கு இருபது லட்சம் பேர் டாய்லட்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். அத்தோடு 1990-களில் 75 % மக்கள் திறந்தவெளியில் கழித்துக் கொண்டிருந்த வீதம் இன்று 51% ஆக குறைந்து வந்துள்ளது. குறிப்பாக நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் புதிய டாய்லட்களை கட்டிக் கொள்ள உதவி வருகின்றது அரசு. 2017-க்குள் திறந்தவெளியில் கழிக்கும் முறை முற்றாக ஒழிக்கப்படும் என அரசு தெரிவிக்கின்றது.

ஒவ்வொரு நாளும் இத்தகையக சுகாதாரக் குறைவுப்பாடுகளால் ஏற்படும் டயோரியா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் தினமும் ஆயிரம் குழந்தைகள் மரணிக்கின்றனர். இந்தியாவில் இருக்கும் 240, 000 கிராமங்களில் வெறும் 24, 000 கிராமங்கள் மட்டும் தான் பூரண கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் சுமார் 9 கோடியே 70 லட்சம் பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. பெரும்பாலான குடிநீர்கள் மலம் போன்றவைகளாலேயே அசுத்தமடைகின்றன. இந்தியாவின் பாதி பள்ளிகளில் முறையான டாய்லட் வசதிகளே இல்லை. பல தனியார் பள்ளிகளில் கூட ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு டாய்லட் என்ற நிலையே இருக்கின்றன. 

ஒவ்வொரு ஆண்டும் சுமார் இருபது கோடி டன் மலம் அகற்றப்படாமல் திறந்தவெளிகளில் விடப்படுகின்றன எனவும். ஒவ்வொரு கிராம் மலத்திலும் பத்து மில்லியன் வைரஸ்களும், ஒரு மில்லியன் பாக்டீரியாக்களும், ஆயிரம் பாராசைட் கிருமிகளும் இருக்கின்றன ஐநா சபையின் அறிக்கைக் கூறுகின்றது. 

ஒருமுறை புது தில்லியில் டாய்லட் கண்காட்சி நடந்தது. ஏகப்பட்ட விதமான, வரலாற்றுக் காலம் முதல் நவீன காலம் வரையிலாக பயன்படுத்தப்பட்ட டாய்லட்கள் குறித்த ஒரு கண்காட்சி அதுவாகும். Sublabh International Museum of Toilets என்ற இடத்துக்குப் போனால் நீங்கள் கழிவறைகள் குறித்த முழு விவரங்களையும் பெற்று பயனடையலாம்.

சில பேர் நினைக்கலாம் டாய்லட் இல்லாமல் போவதால் அப்படி என்ன சிக்கல் வந்து விட போகின்றது என. போதிய சுகாதார வசதிகளை பேணாமல் விடுவதால் மிக அதிகமான நோய்கள் பரவுகின்றன. இதனால் கழிவுகளில் இருந்து பரவும் பாக்டீரியா, வைரச், அமீபா போன்ற நுண் கிருமிகளால் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்கள் என அனைவரும் வயிற்றுப் போக்கு, காய்ச்சல், நிமோனியா உட்பட பல்வேறு நோய்களை பெறுகின்றனர்.

அத்தோடு 48 % குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளையும் பெறுகின்றனர். சிறு வயது முதலே முறையான சுகாதார அறிவையும், டாய்லட் வசதிகளையும் பெற்றிருக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, கற்கைத் திறன்கள் ஏனையோரை விட அதிகமாகவும் இருக்கின்றன. அத்தோடு அவர்கள் அதிக வளர்ச்சியையும் பெற்றுள்ளனர் என உலக வங்கியின் சுகாதார அறிக்கை எடுத்துரைக்கின்றது.

ஆனால் நமது அண்டை நாடான சீனாவில் நம்மை விட மக்கள் தொகை அதிகம் இருந்து அங்கு வெறும் 5 சதவீதம் மக்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதிகள் இல்லை எனலாம். வாராணாசியில் கங்கைக் கரையோரங்களில் படையலாக்கப்பட்டுள்ள மலங்களை காணும் போது, புனிதம் எல்லாம் மண்ணாங்கட்டிகள் என சொல்லத் தோன்றும்.மகாராட்ர மாநிலத்தில் மட்டும் அரசின் உதவியோடு 1997 - 2000 ஆண்டுப்பகுதியில் 16 லட்சம் டாய்லட்கள் கட்டப்பட்டன. ஆனால் பெரும்பாலான டாய்லட்களை மக்கள் பயன்படுத்துவதே இல்லையாம். மாறாக தானியங்களை சேகரித்து வைக்கும் கிட்டங்கியாக பயன்படுத்தி வருகின்றனர் என புது தில்லியைச் சேர்ந்த உலக சுகாதார அமைப்பின் பேச்சாளர் கூறினார்.

டாய்லட்களை மக்கள் முறையாக பயன்படுத்துவதை ஊக்குவிக்க மத்திய அரசு நிர்மல் கிமார் புரஸ்கார் என்ற திட்டத்தின் கீழ் தன்னிறைவடைந்த கிராமங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகின்றது. சில ஊர்களில் கழிப்பறையை பயன்படுத்த காசும் தரப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. உலகில் எங்குமே இல்லாத வழக்கம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு டாய்லட்டை பயன்படுத்த மக்களுக்கு ஊக்கம் தரப்படுகின்றது. தமிழ்நாட்டின் முசிறி நகரில் டாய்லட்டை பயன்படுத்தினால் பயன்படுத்துவோருக்கு சிறிய தொகையைக் கொடுக்கின்றனர். சேகரிக்கப்படும் மலங்களை முறையாக உரங்களாக மாற்றி தோட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர் தமிழ்நாடு விவசாயக் பல்கலைக் கழகத்தினர்.

இந்தியா போன்ற நாடுகளில் போதிய நீர் வசதி இல்லாமையாலும், சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக அகற்றும் வசதிகள் இல்லாமையாலும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமையாலும் கழிப்பறைகள் என்பது கனவாகவே இருக்கின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் உதவியோடு குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தக் கூடிய டாய்லட்களை உருவாக்கி வருகின்றனர் சில ஆராய்ச்சியாளர்கள். சூரிய ஒளியின் துணையோடு இயங்கக்கூடிய இந்த டாய்லட்கள் பல புற நகர் மற்றும் கிராமப் புறப் பகுதிகளில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் 75 சதவீதம் நீர்நிலைகள் மனிதர்களாலும், தொழிற்சாலைகளாலும் அசுத்தப்பட்டுள்ளன என ஒரு அறிக்கைக் கூறுகின்றது. ஒவ்வொரு இந்திய நகரங்களில் வாழ்பவர்களும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தினமும் நமது உணவுகளில் மலங்கள் வந்து சேர்கின்றன என மத்திய நகர்புற அமைச்சகம் கூறுகின்றது.

இந்தியாவில் மழைக் காலங்களில் விரைவாக நோய்கள் தொற்றிக் கொள்வது ஏன் என யாரும் சிந்தித்தது உண்டா. குறிப்பாக இந்தியாவிலேயேக் கூட சில மாநிலங்களில் நல்ல முறையில் கழிப்பறை வசதிகள் இருக்கின்றன. குறிப்பாக கேரளாவைச் சொல்லலாம். ஓரளவுக்கு நல்ல சூழலில் பல இடங்களில் கழிப்பறைகள் இருக்கின்றன. அங்குள்ள மக்கள் பலரும் கழிப்பறைகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு நேர்மாறாக தமிழர்கள் கழிப்பறை விடயங்களில் பின் தங்கியே இருக்கின்றனர். மெரினா கடற்கரைக்கு காலையில் சென்றுவிடாதீர்கள் ! அங்கு கடலேய கழிப்பறையாகி இருப்பதைக் கண்டு மலைத்துப் போய்விடுவீர்கள். இதே நிலை பல இந்திய மாநிலங்களில் இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றிலும் நல்ல முறையில் கழிப்பறைகள் இருக்கின்றன. ஆனால் வடக்கில் பல இடங்களின் நிலைமையோ தலைகீழாக உள்ளன. சென்னையில் கூட நான் பள்ளி சென்றக் காலங்களில் பலர் தெருவோரங்களில் மலம் கழித்து விட்டு போயிருப்பார்கள், அவையாவும் ஈ மொய்த்துக் கொண்டிருக்கும். மழைக் காலங்களில் அனைத்தும் ஒன்றாக கலங்கி குட்டையாக ஓடும். பல நேரங்களில் நாங்கள் டெட்டால் போட்டு காலை கழுவ வேண்டி இருக்கும். 

சொல்ல வந்ததை மறந்துவிட்டேன் பாருங்கள், இந்தியாவில் தான் கழிப்பறை வசதி இல்லாத மக்கள் உலகிலேயே அதிகம் வசிக்கின்றனர். இந்தியாவின் 58 சதவீதம் பேருக்கு கழிப்பறை வசதியே கிடையாது என்றால் பாருங்க. ஆனால் நமது அண்டை நாடான சீனாவில் நம்மை விட மக்கள் தொகை அதிகம் இருந்து அங்கு வெறும் 5 சதவீதம் மக்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதிகள் இல்லை எனலாம். வாராணாசியில் கங்கைக் கரையோரங்களில் படையலாக்கப்பட்டுள்ள மலங்களை காணும் போது, புனிதம் எல்லாம் மண்ணாங்கட்டிகள் என சொல்லத் தோன்றும். 

ஒரு நாடு ராக்கேட் விடுவதாலும், ஏவுகணைகள் செய்வதாலும் வல்லரசு ஆகிவிட முடியாது. எந்த ஒரு நாடு கழிவறை விடயத்தில் தன்னிறைவாகின்றதோ அது தான் என்னைப் பொறுத்தவரை வல்லரசாக இருக்க முடியும். குறிப்பாக நீங்கள் தாஜ் மகாலுக்கு செல்வீர்களானால் அதன் அருகே இருக்கும் யமுனை நதிக்கரையில் பலர் திறந்தவெளியில் மலம் கழிப்பதைக் காண முடியும். இந்தியாவுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வரக் கூடிய தாஜ்மகாலுக்கு அருகேயே இப்படியான சூழல் என்றால் மற்ற இடங்களைப் பற்றி சொல்லவா வேண்டும். ஒழுங்காக கக்கூஸ்களைக் கட்டாமல் திறந்தவெளியில் மலம் கழித்துவிட்டு அதனை அள்ள மட்டும் ஒரு சாதியை உருவாக்கி வைத்துள்ளார்கள் நமது புத்திஜீவிகள். 

எது எப்படியானாலும் மக்கள் மனது வைத்தால் மட்டுமே கழிப்பறை சுதந்திரம் என்பது இந்தியாவுக்கு வந்து சேரும். தெருவுக்கு தெரு கோவில் கட்டுவதிலும், கூழ் ஊற்றுவதிலும் மட்டும் ஆர்வம் கொண்டால் போதாது. வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்ட முயல வேண்டும் என்பது எமது அவா.

- தமிழ் வண்ணன்

***
வாசிக்க »